ஜேகேவின் சில குறிப்புகள்

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Monday, June 22, 2009

ஒரு சாபம்! சில அதிர்வுகள்!

கவிஞர் தாமரையின் கவிதைச் “சாபம்” சில அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழகத் தமிழர்களில் பலர்(சிலர்?) கடந்த சில மாதங்களில் தமது தேசம் பற்றிய தீர்மானமான மறுபரிசீலனையை செய்யத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனம். அவர்களுக்கு இந்தச் சாபம் ஒரு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் இந்திய தேசியத்தில் நம்பிக்கை கொண்ட பலருக்கு இது மிகப்பெரும் அதிர்ச்சியைத் தந்திருக்கும் என்பதை மிக எளிதில் உணர்ந்து கொள்ளலாம். பலர் வஞ்சினத்துடன் கவிஞர் தாமரையின் கவிதையை எதிர்கொள்கிறார்கள்.

எங்கள் ஊருக்கு அருகில் கோபக்கார சாமிகளுக்கான கோயில்கள் உள்ளன. காளி கோயில், கட்டெறும்பு அய்யனார் கோயில் என்று. ஒருவருக்கு அநீதி நேர்ந்து, எதிராளியை தட்டிக்கேட்க, அவருக்காக நீதி கேட்க, யாருமில்லை என்ற பட்சத்தில் அவர் அந்த கோயில்களுக்குச் சென்று ”படி கட்டி” அல்லது ”காசை வெட்டி” நீதி கேட்பார். இந்த சக்தி வாய்ந்த சாமிகள் மிகப் பெரிய தண்டனையை எதிரிக்கு வழங்கும் என்பது மக்களது தீவிர நம்பிக்கை. எனக்கு இறை நம்பிக்கை எதுவும் இல்லை. ஆனால் கடந்த மாதங்களில் ஏற்பட்ட தாங்க இயலாத ஆற்றாமையில், அந்த கோயிலுக்குச் சென்று ”படி கட்டினால்” தான் என்ன என்று தோன்றியது. நான் கட்டும் படி யாரிடமும் சென்று நீதியை நிலை நாட்டப்போவதில்லை என்று தெரிந்தாலும், “நான் படி கட்டிட்டேன்” என்று எல்லோரிடமும் சொல்வதற்காகவாவது அப்படிச் செய்திருக்கலாம். தெருச்சண்டையில் வீழ்த்தப்பட்ட தாய்மார்கள் மண்ணை வாரி இறைத்து “நீ நாசமாப் போவ” என்பார்களே, அது போல!

தமது சாபத்தால் உண்மையிலேயே நதிகளெல்லாம் வற்றி, கழனிகளெல்லாம் கருகி மக்கள் பசியில் மடிய வேண்டும் என்பதற்காக விடப்பட்ட சாபமல்ல அது. “தாயே” என்று பாசமுடன் அழைத்த அந்த தேசத்தை தான் எப்படி இழக்கிறேன், அந்த தேசத்தின் துரோகத்தை எப்படிச் சாடுகிறேன் என்பது தான் அக்கவிதை. தந்தையால் தொடர்ந்து பாலியல் பலவந்தம் செய்யப்பட்ட ஒரு பெண் குழந்தைக்கு வளர்ந்து விவரம் தெரிய வரும் பொழுது அதுவரை அவளது தந்தை மீது வைத்திருந்து பாசமெல்லாம் வஞ்சினமாக மாறுமே அது போன்றதொரு கோபம்.

எவ்வளவு நடந்த பொழுதும் ஒரு சில தமிழரைத் தவிர பிற இந்தியர் எல்லோரும் எதுவுமே நடக்காதது போலவே இருந்தார்கள். இன்னும் சிலர் கோலாகலமாகக் கொண்டாடினார்கள். அவர்களுக்கெல்லாம் இக்கவிதை மிக அதிர்ச்சி தரும். இது போன்று எழுதுமளவிற்கு யார் இவர்களுக்கு சுதந்திரம் கொடுத்தார்கள் என கர்ஜிப்பார்கள். இப்படி எழுதியவர்களை தடாவிலோ பொடாவிலோ போடவேண்டும் என்பார்கள்.ஆனால் ஒரு நொடிக்கு “எது இவளை இவ்வளவு கோபமான நிலைக்குத் தள்ளியிருக்கும்” என நினைத்தார்களென்றால் அது போதும்.

இந்தக்கவிதையை தமிழர்களைவிட பிற மொழி பேசுபவர்கள் படிக்கவேண்டும். அவர்களுக்கு இது இன்னும் அதிர்ச்சியாக இருக்கும். சில நேரங்களில் அதிர்ச்சி வைத்தியங்களும் தேவைப்படுகின்றனவே. அதற்காக என்னால் இயன்ற அளவிற்கு இந்தக் கவிதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளேன். முடிந்தால் தமிழ் பேசாத பிற இந்திய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Labels:

Wednesday, May 20, 2009

இருத்தலெனும் சாபம்

மரணங்களின் நிழல்கள்
கட்டி இழுக்கின்றன
என் கால்களை
படுகொலையின் ஓலங்கள்
தேடியலைகின்றன செவிப்பறைகளை
ஊடக வாய்க்கால்களில் ஓடும்
தேசியச் சாக்கடைகள் தெறிக்கின்றன
மனிதத்தின் முகத்தில்
எனக்கும் ஆசைதான்
அப்பழுக்கற்ற இருத்தலைத் தேடுவதில்
ஆனால் இன்றெனக்கு
இருப்பதற்கு பொருமையில்லை
இருக்கவும் தெரியவில்லை
பெருவெளியை நிறைத்திருக்கும் விசும்பில்
சாவின் சுவடுகளில் படிந்திருக்கும்
துரோகப் புண்களில் வடியும்
சீழ் துடைக்க
என்னிடம் இல்லை
மயிலிறகோ, விரல்களோ, கரங்களோ
கோபங்கள் என்னைச்
சிறிது சிறிதாக சிதைக்கின்றன
கவிதைச் சுயமைதுனம் செய்து
காயங்களில் களிம்பு தடவுகிறேன்
எல்லாம் குமட்டுகிறது
இக் கவிதை உட்பட

Labels: , ,

இதுவும் ஊரா இவரும் மனிதரா

யாதும் ஊரே யாவரும் கேளிர்
இதுவும் ஊரா இவரும் மனிதரா
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னா தென்றலும் இலமே - மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

Labels: ,

Sunday, May 17, 2009

உங்களுக்காக நாங்கள் போராடுவோம்

சென்ற நூற்றாண்டின் இரத்தக்கறை நிறைந்த யூத இன அழிப்பு குரூரமானது. அதீதமான அறிவியல் மற்றும் திட்டமிடல் கொண்டு பல இலட்சம் யூதர்களை விச வாயு அறைகளில் ஹிட்லரின் நாஜிப்படை கொன்றது. கொல்லப்பட்டவர்களின் எல்லா உடைமைகளும் நாஜிக்களால் சூறையாடப்பட்டன. அவர்கள் கடைசியாக அணிந்திருந்த ஆடைகள் உட்பட. விச வாயுவால் இறந்த பிறகு அவர்களின் ஆடைகளை எளிதாக கழற்ற முடியாது என்பதற்காக, விச வாயு அறைகளுக்கு அனுப்புவதற்கு முன்னரே, அவர்களை தமது உடைகளை முற்றிலும் கழற்றி விடுமாறு நாஜிக்கள் அவர்களிடம் சொல்வார்கள். தாம் கொலை செய்யப்படப் போகிறோம் என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்தும் எந்தவிதமான சிறு எதிர்ப்பும் இன்றி தமது உடைகளைக் கழற்றிவிட்டு விச வாயு அறைகளுக்குள் சென்று ஈசல் போல செத்து மடிந்தார்கள் 50 இலட்சத்துக்கும் மேற்பட்ட யூதர்கள். அப்பொழுது உலகம் கேட்டது, ”எப்படி ஒரு சின்ன எதிர்ப்பைக்கூட காட்டாமல் இவர்கள் தமது அழிவை ஏற்றுக்கொண்டார்கள்?” என்று. அதே உலகம் சொன்னது ”இனிமேல் இது போல ஒரு கொடுமை உலகில் வேறெங்கும் நடக்க விட மாட்டோம்” என்று.

ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக அரை நூற்றாண்டாக அநீதிகள் நடைபெற்றுவருவதை எல்லோரும் ஒத்துக் கொள்கிறார்கள். தமிழர்களின் மனித உரிமைகள் சில கோடி முறைகளாவது மீறப்பட்டிருக்கும். ஆனால் யூதர்களைப்போல தமிழர்கள் சாகவில்லை. எதிர்த்துக் குரல் கொடுத்தார்கள். எதிர்த்து ஆயுதம் ஏந்தினார்கள். ஆனால் அதே உலகம் தமிழர்களுக்கு பயங்கரவாதிகள் பட்டம் சூட்டி தமது புனித பிம்பங்களை தமக்குத்தாமே நிரூபித்துக்கொண்டார்கள். அவர்களின் ஆயுதம் தாங்கிய எதிர்ப்பையும் தாண்டி, அவர்களின் ஆயுதம் தாங்கிய எதிர்ப்பிற்காகவே, பல ஆயிரம் தமிழர்கள் ஈசல் போல கொல்லப்பட்டனர். இது போல வேறு எங்கும் நடைபெற விட மாட்டோம் என்று சூளுரைத்த உலகம் கொலைகாரர்களை தட்டிக்கொடுத்தது. கொலை செய்யப்படுபவர்களை கண்டித்தது. அவர்கள் எதற்காக காத்திருந்தார்களோ அந்த இனப் படுகொலை நடந்து முடிந்துவிட்டது. இனிமேல் வருவார்கள் சாரி சாரியாக. ”நாம் தவறு செய்துவிட்டோம், இனிமேல் இது போல மற்றொரு இனப்படுகொலை நடைபெற அனுமதிக்க மாட்டோம்” என சூளுரைப்பார்கள். திரைப்படங்கள் எடுத்து/பார்த்து கண்ணீர் சிந்தி ஆஸ்கர் பரிசுகொடுத்து தமது தூய்மையை நினைவூட்டிக்கொள்வார்கள். கட்டுரைகள் எழுதி புலிட்சர் பரிசுவாங்குவார்கள். ஏன் இலங்கையில் அமைதி கொண்டுவந்ததற்காக இந்திய இலங்கை ஏகாதிபத்தியங்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசுகூட கொடுத்தாலும் கொடுப்பார்கள்.

இந்த உலகம் பைத்தியக்காரத்தனமானது.

இங்கே யாருமே பரிசுத்தமில்லை. புலிகளும்தான். அவர்களின் முரட்டுத்தனங்களாலும், முட்டாள்தனங்களாலும் தமிழர்கள் அடைந்ததைவிட இழந்தது அதிகமாக இருக்கலாம். உண்மை என்னவென்று அவர்களுக்கு முன்னும் பின்னும் நின்ற ஈழத் தமிழர்களுக்குத்தான் தெரியும்.

இதோ அந்த புலிகள் முப்பதாண்டுகளில் முதன் முதலாக தாம் தோல்வியடைந்து விட்டதாக அறிவித்திருக்கிறார்கள். எப்படிப்பட்ட ஒரு போராட்டம் இப்படி முடிந்து விட்டதென்று வருத்தமாக இருக்கிறது. புலிகளின் மீது கோபமாகக்கூட இருக்கிறது. அதெல்லாம் ஒருபுறம் இருக்க, நான் நிச்சயமாக புலிகளின் பேரில் பெருமையடைகிறேன். அவர்கள் தோல்வியில் ஒன்றும் அவமானமில்லை. அதீதமான பெருமைதான் மிச்சமிருக்கமுடியும். புலிகளே! புலிகளின் பின்னின்ற ஈழத் தமிழ் மக்களே! உங்களின் மன உறுதியும் வீரமும் வரலாற்றில் வேறெங்கும் யாரும் கண்டதில்லை. இயக்கத்தைச் சேர்ந்த ஒவ்வொரு புலியின் தியாகமும் ஒரு சகாப்தம். உங்களுக்கு ஒத்தாசையாக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போட முடியாத எமது கையாலாகாமையை எண்ணி வெட்கப்படும் அதே நேரம், நீங்கள் பேசிய மொழியை நானும் பேசுகிறேன் என்பதற்காக நான் பெருமை அடைகிறேன். அந்த மொழிக்காக நீங்கள் உயிரையும் கொடுக்க முன் வந்தீர்கள் என்பதை நினைக்கும் ஓவ்வொரு பொழுதும் என் மெய் சிலிர்க்கிறது. எங்களை உங்களது தொப்புள் கொடி உறவுகள் என்று நீங்கள் அழைப்பீர்களே அதற்கு என்ன கைமாறு என்னால் செய்ய முடியும். உங்களது வீரத்தை நாங்கள் ஒரு காலத்திலும் மறக்கமாட்டோம். சர்வ தேசங்களின் துரோகத்தையும், இந்திய ஏகாதிபத்தியத்தின் துரோகத்தையும் நாங்கள் ஒரு போதும் மறக்க மாட்டோம்.

முப்பதாண்டு போராட்டம் ஒன்றும் இல்லாமல் முடிந்து விட்டதென்று துக்கமுற வேண்டாம். இலட்சம் மக்களின் தியாகத்தினால் எதுவும் நடக்கவில்லையே என்று அழுது புலம்ப வேண்டாம். முப்பது இலட்சம் தமிழர்கள் அன்றாடம் பட்ட அவதிகளுக்கு ஒரு முடிவில்லையா என வருந்த வேண்டாம். உங்களது தொப்புள் கொடி உறவுகள் உங்களை கைவிட்டு விட்டார்களே என்று துயரமடைய வேண்டாம். நீங்கள் முப்பதாண்டுகளாக தொடர்ந்து போராடி களைத்துப்போய் இருப்பீர்கள். நீங்கள் இப்போது ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். உங்களிடமிருந்து போராட்டச் சுடரை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம் உங்களுக்காக நாங்கள் போராடுவோம். அமைதியான முறையில் நமது இலக்கை அடையும் வரை நாங்கள் போராடுகிறோம். இது ஓரிரு வருடங்களில் முடியலாம் இல்லை பல வருடங்கள் எடுக்கலாம். ஆனால் உங்களுக்காக நாங்கள் போராடுவோம். நீங்கள் இப்பொழுது சற்று களைப்பாறுங்கள்.

Labels:

Monday, May 04, 2009

தமிழனுக்கு உணவில்லை எனினும் சும்மா இருந்திடுவோம்

இனிமேல் சாப்பிட எதுவுமே இல்லை எனும் அவலக்குரல் கொடுக்கிறர்கள் வன்னியில் உலகத்தால் சிறை பிடிக்கப்பட்டிருக்கும் சபிக்கப்பட்ட ஏழை மக்கள். அறிக்கைத் துண்டுகளின் மூலம் கூட ஆறுதல் அளிக்கத் தவறிய இவர்களா ”ஸோற்றுப் பார்சலை” விமானம் மூலம் போடப் போகிறார்கள். கண் முன்னே நடந்து கொண்டிருக்கும் இந்த அவலத்தை எப்படி ஜீரணிப்பது என்று தெரியவில்லை. அதற்குத் தேவையில்லாமல் முத்துக்குமார் போன்ற தைரியசாலிகள் முன்னரே செத்துப் போய்விட்டார்கள். எனக்கு அந்த அளவிற்கு தைரியமும் இல்லை, வேறெதையும் செய்ய வக்குமில்லை. இனிமேல் புலம்புவதற்கு கூட அருகதை இருக்கிறதா எனத் தெரியவில்லை. என் நண்பன் ஒருவன் அதைச் சுட்டிக்காட்டினான். “நீ இதைப்பற்றி பேசி என்ன கிழித்தாய்” என்று. அவன் சொல்வதும் சரிதானே.
----
என் சிற்றறிவிற்கு எட்டிய எந்த சித்தாந்தங்களின் மீதும் திடமான நம்பிக்கை எனக்கு இல்லை(மதங்களிலிருந்து, கம்யூனிசம் வரை). தனிப்பட்ட முறையில் இந்த உலகத்தையும் சமூகத்தையும் அதில் என்னுடைய இடத்தையும் நான் ஒரு விதத்தில் புரிந்து கொண்டிருந்தேன். அந்த புரிதலின் அடிப்படையில் ”எனக்கு நேர்மையாக நான் நடந்து கொள்ளவேண்டும்” என்பதே எனது கொள்கை. அதுதான் எனது சரிகளையும், தவறுகளையும் தீர்மானித்தது. யாருக்கும்(விலங்குகளுக்குக் கூட) நம்மால் துன்பம் விளையக்கூடாது என்பதற்காக அசைவம் சாப்பிடுவதை தவிர்த்தது மட்டுமல்லாமல்; பால், முட்டை மற்றும் தோல் பொருட்கள் போன்ற விலங்குப் பொருட்களைக்கூட தவிர்த்து வருகிறேன். குளோபல் வார்மிங்கிற்கு நான் பங்களிக்கக் கூடாது என்பதற்காக கொஞ்ச நாள் சைக்கிள் ஓட்டினேன்(பின்னர் சவுகரியப் படாததால், கொள்கைச் சமரம் செய்துகொண்டு தானுந்திக்கு மாறிவிட்டேன் என்பது வேறு விசயம்). ஆனால் இதுபோன்ற கொள்கைச் சூரத்தனங்கள் எல்லாம் இப்போது பைத்தியக்காரத் தனமாகத் தோன்றுகிறது. சமூகம் மற்றும் சமூகத்தில் என் இடம் பற்றிய எனது கேள்விகளும் எனது புரிதல்களும் கூட பைத்தியக்காரத் தனமாகத்தான் தோன்றுகிறது.

பிகு: தற்போது, குளோபல் வார்மிங் சீக்கிரம் வந்து உலகம் முழுவதையும் இப்போதே கபளீகரம் செய்து விடாதா என லேசாக ஒரு ஆசை அவ்வப்போது எட்டிப்பார்க்கிறது என்பதையும் நேர்மையுடன் ஒத்துக் கொள்கிறேன்.
----
தேர்தல் என்ற ஒரு மயிரு நடந்து கொண்டிருக்கிறது. ஈழத்தில் நடப்பது போலத்தான் இதுவும். கண்ணெதிரே நடக்கும் கேனத்தனங்களை ஒன்றும் செய்ய முடியாமல் ஒரத்தில் நின்று புலம்ப மட்டுமே முடிகிறது. இவர்கள் எல்லாம் ஓட்டுப் பொறுக்கிகள் என்று தெரியும் ஆனால் தமிழர்களின் குருதி நிரம்பிய குளத்தில் இறங்கி ஓட்டு பிடித்து விளையாடுவார்கள் என்று நான் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. அரசியல்வாதிகள்தான் இப்படி என்றால், சாமான்ய மக்களிடம் பேசினால் பித்தே பிடித்துவிடுகிறது. காவேரி டெல்டா பகுதிகளில் ஈழத்திற்கு ஆழமான ஆதரவு என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். தமிழர்கள் சாவதைப் பார்த்துவிட்டு ஓட்டுக்கேட்டு வருபவர்களை செருப்பால் அடிப்பார்கள் என்று நினைத்தேன். கூச்சமே இல்லாமல் எல்லோரும் திமுக கொடியை பைக்கில் கட்டிக்கொண்டு ஜாலி பன்னிக் கொண்டிருக்கிறார்கள்(பைக்கில் கொடியுடன் மாஸ் காட்டினால் இருநூறோ ஐநூறோ தருகிறார்களாம்).

மக்களிடம் தேர்தல் பற்றி கேட்டால், “அந்த ஊர்ல TV கொடுத்துட்டய்ங்க அவங்க எல்லாம் திமுகவுக்குத்தான் ஓட்டு போடுவாய்ங்க. எங்க ஊர்ல இன்னும் TV கொடுக்கல அதனால அம்மா கூட்டணிக்குத்தான் ஓட்டு போடுவாய்ங்க” என்று சர்வ சாதரணமாக அரசியல் சமன்பாட்டை விளக்குகிறார்கள். ஈழம் பற்றிய தெரிதலும் சுத்தமாக இல்லை, புரிதலும் சுத்தமாக இல்லை.
----
பாராளுமன்றத் தேர்தலில் ஒரு தமிழர் நலக்கூட்டணி அமைய முயற்சிக்கவும், அப்படி அமையும் கூட்டணிக்கு பிரச்சாரம் செய்யவும் http://voteforeelam.in என்ற தள முகவரியையும், PHP/MySQl வசதியுடன் கூடிய serverக்கும் பணம் கட்டி பதிந்து வைத்திருந்தேன். பின்னர் நடந்த நாடங்களைக் கண்டு மனதுடைந்ததில் அதை அப்படியே விட்டு விட்டேன். யாருக்காவது அந்த தளத்தை அமைத்து எழுது விருப்பம் இருந்தால் தெரிவிக்கவும். அதற்கான உரிமையயையும், எனது சோகங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.

Labels: , ,

Thursday, April 30, 2009

தமிழனாக இருப்பதை விட எருமையாக இருப்பதின் நன்மைகள்



நன்றி:
அனாதை ஆனந்தன்
NegativeSpace Media

Labels: ,

Sunday, March 29, 2009

அதே கேள்வி... அதே பதில்...

ஆனந்த விகடன் 1-ஏப்ரல்-2009 இதழில் ’டீன் கொஸ்டீன்’ என்ற பகுதியில் ஒரு கேள்வியும் அதற்கு ஒரு ’நிபுணரின்’ பதிலும்...

கேள்வி: ஆங்கிலம் தவிர இன்னொரு மொழி கற்றுக்கொள்ள ஆசை. இந்தி, பிரெஞ்சு, ஜாப்பனீஸ், மலாய் என்று ஆளாளுக்கு சாய்ஸ் சொல்லி குழப்புகிறார்கள். எனக்கு பார்மசி கம்பெனியில் மார்க்கெட்டிங் பணி. எந்த மொழி கற்றுக்கொள்ளலாம் என்று வழிகாட்டுவீர்களா? - எம். ஆறுமுகம், சென்னை-45


பதில்: சித்ரா கிருஷ்ணன், தலைவர், School of English and Foreign Languages, சென்னைப் பல்கலைக்கழகம்.

சர்வதேச அளவில் ஆங்கிலம் தவிர, பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், மற்றும் இத்தாலிய மொழிகளுக்குத்தான் முக்கியத்துவம் அதிகம். இந்தியாவில் இந்தி மொழிதான் பெருவாரியான மக்கள் பேசும் மொழி. எனவே அதைக் கற்றுக்கொண்டால் இந்தியாவில் எங்கு சென்றாலும் சமாளிக்கலாம். உலகில் அதிக மக்கள் பேசும் மொழி சீனம். ஆனால் அதற்கு இங்கு டிமாண்ட் கிடையாது. எனவே, அதைக் கற்றுக் கொள்வதால் புதிய மொழியைத் தெரிந்து கொண்டோம் என்ற திருப்தி மட்டுமே.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகள் பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பாகக் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு வெளிநாட்டுத் தூதரகத்திலும் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வெளி நாட்டுக்குச் செல்லும் வாய்ப்புகள் உங்களுக்கு இல்லாவிட்டால், இந்தி மொழியைக் கற்றுக் கொள்வது உசிதமாக இருக்கும் என்று நினைக்கிறேன்

Labels:

Tuesday, March 03, 2009

ஈழ ஆதரவு முன்னணி : தமிழக அரசியல் கட்சிகளுக்கு கடிதம்

எமது மரியாதைக்குரிய தலைவர்களே,

நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களைக் காக்க தமிழகம் ஏதாவது செய்யும் என்று உலகில் வாழும் எல்லாத் தமிழர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா கதவுகளையும் தட்டிவிட்டோம், மனிதச் சங்கிலி அமைத்து மழையில் நனைந்தோம், உண்ணாதிருந்தோம், இரயில் மறித்தோம், கடையடைத்தோம், பேரணி சென்றோம், தீக் குளித்துச் செத்தும் போனோம். ஆனால் இனவெறிப்போரை நடத்துபவர்களையும், அதற்குத் துணை நிற்பவர்களையும் எங்கள் குரல் சென்றடையவேயில்லை. காரணம் தமிழனின் குரல் ஒன்றாக ஒலிக்கவில்லை. ஒரு கோடியாக ஒலித்தது. இப்போது எமது கடைசி நம்பிக்கையாக நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. தமிழகத்தில் ஈழ மக்களுக்கான ஆதரவு பரவலானது, ஆழமானது. இதை தொடர்ந்து வந்த பல நடுநிலைப் பத்திரிக்கைகளின் கருத்துக் கணிப்புகள் தெளிவாகக் காட்டியுள்ளன. ஆனால் உள்ளூர் அரசியலில் துண்டு துண்டாகச் சிதறிப்போன தமிழரின் தலைமை வெவ்வேறு கூட்டணிகளில் சேர்ந்ததன் மூலம், தமிழர்களின் ஈழ ஆதரவுக் குரல் அதிகார வர்க்கத்தை எதுவும் செய்வதில்லை.

நாஜிக்களின் பிடியில் யூதர்கள் பட்ட அவலத்திற்கும் மேலான அவலத்தை ஈழத்தில் தமிழனாகப் பிறந்த ஒரே காரணத்திற்காக மக்கள் அனுபவித்து வருகிறார்கள். இன்னிலை தொடர்ந்தால், ஈழத்தில் இன்னும் சில நாட்களில் தமிழன் இருக்கமாட்டன். இந்த இன அழிப்பு நமது காலத்தில் நடைபெறுகிறது என்பதை மறவாதீர்கள். நாளைய வரலாறு இன அழிப்பு செய்தவர்களை மட்டும் தூற்றாது.அதற்குத் துணை போனவர்களையும், அதை எதிர்த்துக் குரல் கொடுக்கத் தவறியவர்களையும் சேர்த்தே குற்றாவளிக் கூண்டில் நிறுத்தும். எனவே, எல்லா சுயநலன்களையும் களைந்து ஈழத்தில் நடைபெறும் இன அழிப்பை நிறுத்தவும், அம்மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடுவது நமது வரலாற்றுக் கடமை. அந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது உங்களின் கடமை.

தமிழர்களின் குரல் பாராளுமன்றத்திலும் ஐக்கிய நாடுகளின் சபைகளிலும் ஒருங்கிணைந்து ஈழ மக்களின் நலன் கோரி எதிரொலிக்க வேண்டுமெனில், தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் ஈழ ஆதரவு அலையை சிந்தாமல் சிதறாமல் தமிழர்களின் வெற்றியாக மாற்ற வேண்டும். அதற்காக உங்கள் கட்சி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு ஈழ ஆதரவு முன்னணியை அமைத்து போட்டியிட வேண்டுமென உரிமையுடன் வலியுறுத்துகிறோம். அம்முன்னணியின் முக்கிய வாக்குறுதிகளாக பின் வருபவை இருக்க வேண்டும்


மத்திய அரசில் பங்கேற்றால் அல்லது ஆதரவு தந்தால்,

1) இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் கோருவோம். இலங்கை அதற்கு ஒத்துக்கொள்ளாத பட்சத்தில், இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிப்போம். விமான, கப்பல் மற்றும் சரக்கு போக்குவரத்தை துண்டிப்போம். இந்தியாவின் நேச நாடுகளையும் அவ்வாறு செய்யக் கோருவோம். ஐக்கிய நாடுகள் சபையில், காமன் வெல்த் சபையில் இலங்கையின் இன அழிப்பிற்கு எதிராக தீர்மானங்கள் கொண்டு வருவோம்.
2) நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை தமிழ் மக்களின் எல்லா மனித உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்துவோம்.
3) இலங்கை இனப் பிரச்சனைக்கான தீர்வு “ஒருங்கிணைந்த இலங்கை” என்ற வரையறைக்குள்ளாக இருக்க வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றுவோம். தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிப்பதுடன். ஐக்கிய நாடுகள் சபையின் முன்னிலையில், ஈழத்தமிழர்கள், முஸ்லீம்கள் ஆகியோரது விருப்பத்தைக் கோரி தேர்தல் நடத்தி அதன் படியான தீர்வை முதன்மைப் படுத்துவோம்.

எதிர்க் கட்சியாக இருக்கும் பட்சத்தில்

1) ஈழத்தில் போர் நிறுத்தம் அமலாகி ஈழத் தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமை கிடைக்கும் வரை நாடாளுமன்றத்திலும் மற்ற இடங்களிலும் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.


இவ்வாறு ஒரு தெளிவான ஈழ நிலைப்பாட்டை முன்னெடுக்கும் பட்சத்தில், தற்போது தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் ஈழ ஆதரவு அலையில் உங்களது முன்னணி நாற்பது இடங்களையும் பிடிக்கும் என்பது உறுதி. அதற்காக சாமான்யர்களான நாங்கள் துணை நிற்போம். எங்களது வேலைக்கு விடுப்பு போட்டு விட்டு உங்களது வெற்றிக்கு வாக்குகள் சேகரிப்போம். இந்த இக்கட்டான நிலையில் நல்ல தலைமையை பரிதாபத்துடன் எதிர் நோக்கியிருக்கும் தமிழர்களைக் கைவிட்டு விடாதீர்கள் எனக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு
அனாதைத் தமிழன்

Labels: , , ,

ஈழ ஆதரவு முன்னணி கோரி ஆயிரம் வலைப் பதிவுகள்

அன்புள்ள வலைப்பதிவுலக நண்பர்களே,

உலகின் எந்த மனிதாபிமானக் குரலும் ஈழத்தமிழருக்காக ஒலிக்காத நிலையில், நாடாளுமன்றத் தேர்தலைத்தான் நம்மில் பலரும் நம்பியிருந்தோம். நமக்காக நாம்தான் குரல் கொடுக்க வேண்டும் எனவே நாற்பது பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழகம் தேர்ந்தெடுக்கும் என்று கனவு கண்டு கொண்டிருந்தோம். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப் பட்ட இன்னிலையில் ஈழ ஆதரவுக் குரல் கொடுத்த சில கட்சிகள் கூட தமது அரசியல் வாழ்வைத் தக்கவைத்துக் கொள்வதற்காக தமிழின எதிரிகளுடனும், துரோகிகளுடனும் கூட்டணி அமைத்துக் கொள்ளத் தயாராகிவிட்டதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. தமிழர்களின் தலையில் கொல்லி வைத்த தற்போதைய அரசிற்கு முட்டுக் கொடுத்த அதே கூட்டணியையும், இந்த அரசின் ஈழக் கொள்கையுடன் தமக்கு உடன்பாடுதான் என்று சொன்ன எதிர்க்கட்சியின் கூட்டணியையுமா மீண்டும் நாம் தேர்ந்தெடுக்கப் போகிறோம்?

அரசியல் கட்சிகள்தான் என்ன செய்வார்கள்? ஈழத்தமிழர் நலன் முன்னிறுத்தி தேர்தல் களம் இறங்கினால் டெபாசிட் மிஞ்சாது என்பதே அவர்களது கருத்து. அதனால் கொஞ்சமேனும் குறுகுறுக்கும் மனச்சாட்சியையும் கழற்றி வைத்துவிட்டு சந்தர்ப்பவாத கூட்டணிகளுக்குத் தயாராகிவிடுகிறார்கள். ஆனால் அந்தக் காலம் இதுவல்ல. இத்தருணத்தில் ஈழ ஆதரவு நிலை எடுக்காத கட்சிகள்தான் டெபாசிட் இழக்கப் போகின்றன. எல்லாம் மாறிவிட்டது என்பதை அவர்கள் உணரவேண்டும். அல்லது நாம் அவர்களை உணரச்செய்யவேண்டும்.

ஆனால், தலைவர்களின் தவறான கூட்டணி முடிவுகளால், ஈழ ஆதரவு வாக்குகள் பிளவு பட்டு எதிரிகளுக்கு நன்மையாகிவிடும் நிலை ஏற்பட்டு விடுமோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது. அதைத் தடுப்பதற்காக நம்மாலான ஒரு முயற்சியாக நாம் தமிழக அரசியல் கட்சிகளை ஈழ ஆதரவு முன்னனி அமைக்கக் கோரி ஆயிரம் வலைப்பதிவுகள் எழுதுவோம் என உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். தமிழில், ஆங்கிலத்தில், மற்றும் நமக்குத் தெரிந்த அனைத்து மொழிகளிலும் எழுதுவோம். இந்தத் தேர்தலில் வலையுலகமும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும். உங்கள் வரலாற்றுக் கடமையை செய்ய உரிமையுடன் அழைக்கிறேன்.

சுருதி குறையாமல் குரல் கொடுப்போம், உறுதி குறையாமல் போராடுவோம். தமிழீழ சுயநிர்ணய உரிமையை ஆதரிக்காத எந்த அரசியல் கட்சியையும் புறக்கணிப்போம்.

Labels: , , ,