ஜேகேவின் சில குறிப்புகள்: அறிவு ஜீவி மரங்களுக்கு

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Friday, April 04, 2008

அறிவு ஜீவி மரங்களுக்கு

என்னைத் தாண்டியது
அறிவு ஜீவி மரம்
என்னிடம் இல்லை
சதுரத்தின் வளைவுகளின் தீர்க்கம்
வட்டத்தின் போக்கின் நிதானம்
எமது இருத்தலை
கூட்டலும் பெருக்கலுமா நிர்ணயிக்கும்

என் கோபங்களுக்கு நிகழ்தகவு புரிவதில்லை
அவை எப்போதும் நிகழ்பவை

உன் சொற் புனிதங்களை அழிக்கத்தான்
படை திரட்டிக் கொண்டிருக்கிறேன்

என் எதிரிகள்
அணியணியாய் வகுத்து நிற்கின்றனர்
என் அணியில்
ஒரு நிரையும் ஒரு நிரலும்

நீ மனித உரிமைகள் பேசுவது விசித்திரம்
அவ்வளவு சித்திரவதைகளை
நீ மட்டுமே செய்திருக்க முடியும்

கைதட்டல்களுக்காக நான் வாசிப்பதில்லை,
எனினும்,
கொஞ்சம் சலனங்களை
வெறுக்க முடியவில்லை

எவரது வருகைக்காகவும்
நான் பரிமாறவில்லை
எவராவது வந்தாரா
என வாயிலைப் பார்க்காமலும் இல்லை

என் தியானங்கள் என் குழப்பங்களை நோக்கியே
என் குழப்பங்கள் அத்தியானங்களிலிருந்தே

எல்லோருக்கும்
எதுவாகவாவுது தெரிகிறேன்
உனக்குமட்டும்தான்
நான் மனித வடிவிலான
வெற்றிடமாகப் படுகிறேன்

கவிதைகளை யார் கட்டிப் போட்டது?
அவை சொல் வட்டங்கட் குள்ளேயே சுற்றி வருகின்றன.

விரயமாக்கப்பட்ட இன்னொரு இரவின் முடிவில்
மற்றொன்றை எதிர்நோக்கி
சோம்பலுடன் விடியும் எதேச்சையான ஒரு காலையில்தான்
என் அடிமனது கலங்கி வெளியில் வருகிறது
யாரும் செய்து வைக்காத
இந்த சூன்யம் மிகுந்த குப்பை.

Labels:

படித்தவர்களின் கருத்துகள் - 0

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல