ஜேகேவின் சில குறிப்புகள்: April 2007

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Tuesday, April 10, 2007

இரண்டில் ஒரு குழந்தை பாலியல் வன்முறைக்கு ஆட்படுகிறது: அரசு அறிக்கை

இந்திய மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், குழந்தைகள் மீதான வன்முறையை பற்றி முதன் முறையாக ஒரு அதிகாரப் பூர்வமான அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இந்தியாவின் பதினைந்து மாநிலங்களில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் படி எழுதப்பட்ட இந்த அறிக்கையை படிக்க கொஞ்சம் மனதில் தெம்பு வேண்டும்.

1) பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, பெரும்பான்மையான குழந்தைகள் பாலியல் அல்லது உடலியல் வன்முறைகளுக்கு ஆளாகிறார்கள் எனக்கூறுகிறது இந்த அறிக்கை.

2) இந்த அறிக்கையின் படி 76% குழந்தைகள் உடல்(Physical) வன்முறைக்கு ஆளாகின்றனர். குழந்தைகளை அடித்து கண்டிப்பது இந்தியாவில் பரவலாக உள்ள மோசமான மற்றும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கலாச்சாரம். அதனால் இது ஒரு பெரிய ஆச்சரியத்தை தரவில்லை எனலாம். ஆனால் இது கண்டிக்கப்பட வேண்டியதும் தண்டிக்கப்பட வேண்டியதும் என்பதற்கு மாற்று கருத்து இருக்க முடியாது.

3) அறிக்கையில் அதிகம் அதிர்ச்சி தருவது, பாலியல் வன்முறைகள் பற்றிய முடிவுகள். இரண்டில் ஒரு குழந்தை பாலியல் வன்முறைக்கு ஆளாகிறது என்பது திகைக்க வைக்கிறது. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளைப் பொருத்தவரை, இந்திய சமூகத்தின் அனுகுமுறை, "இது ஒரு மேற்கத்திய நாட்டு பிரச்சனை, குடும்ப விழுமங்கள் அதிகம் மதிக்கப்படும் இங்கு இது ஒரு பெரிய பிரச்சனை இல்லை" என்ற போக்கிலேயே, இருந்துள்ளது. ஆனால் அறிக்கையில் தரப்பட்டுள்ள புள்ளி விபரங்களும் இந்த பிரச்சனையின் பரிமாணமும் மலைக்க வைக்கின்றன.

4) குழந்தைகளை பாலியல் முறையில் தாக்கும் கொடும்பாவிகள் பெரும்பான்மையாக குழந்தையின் உறவினராகவோ அல்லது தெரிந்தவராகவோ இருக்கிறார்கள் என்பது பொதுவாகவே சமூகத்தின் மீது நம்பிக்கை இழக்க வைக்கிறது.

இந்த கருத்துக்கணிப்பு தமிழகத்தில் நடை பெறவில்லை. தமிழக அரசு இது போன்ற ஆய்வை மேற்கொள்ள வேண்டும். குழந்தைகள் மீதான எல்லாவிதமான வன்முறைகளும் கடுமையான தண்டனைக்குறிய குற்றங்களாக்கப்பட வேண்டும். இந்த பிரச்சனை பற்றிய சமூக பிரக்ஞை மிக குறைவாக உள்ளது. இவ்வளவு டேமேஜிங்கான ஒரு அறிக்கை வந்தும் தமிழக பத்திரிக்கைகளிலோ வலைப்பதிவுகளிலோ இது அதிகம் விவாதிக்கப் படாதது ஒரு உதாரணம். அரசும், தன்னார்வ நிறுவனங்களும் மக்கள் விழிப்புணர்ச்சி பிரச்சாரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

"Study on Child Abuse: INDIA 2007" எனத் தலைப்பிடப் பட்ட இந்த அறிக்கையை இங்கே முழுதாக காணலாம். நீங்கள் சிறு குழந்தைகளின் பெற்றோராக இருக்கும் பட்சத்தில, சிறிது நேரம் ஒதுக்கி இந்த அறிக்கையை கட்டாயமாக படியுங்கள்.

Labels: ,

Sunday, April 01, 2007

சிறப்பு பொருளாதார மண்டலங்கள்

சமீபத்தில் நந்திகிராமில் நடந்த உயிரிழப்புகள் மிக வருந்தத்தக்கது. ஆனால் ஏன் இந்த நிலைக்குச் சென்றது என்பதற்கு சரியான விளக்கம் இல்லை என்பதே என் கருத்து. மேவ முதல்வரே நந்திகிராமில் விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் நிலம் கையகப்படுத்த மாட்டோம் எனத் தெரிவித்திருந்தார். அவசரப்பட்டு முடிவுகளை எடுத்துவிட்டதாக சில அதிகாரிகளையும் குறை சொல்லியிருந்தார். கடைசியில் எப்படி பிரச்சனை கைமீறிப்போனது என்று விளங்கவில்லை. விவசாயிகளின் சிரமங்கள் ஒரு புறம் இருக்க, இடையே அரசியல் இலாபம் பார்க்கும் கூட்டம் குட்டையை குழப்பிவிட்டிருப்பது நிச்சயம்.

நந்திகிராம் நிகழ்ச்சியின் அடிப்படையில், சிபொம சட்டத்தை ஒழிக்கக் கோரிக்கை எழுந்திருக்கிறது. இந்த நிலையில் நாம் சற்று நிதானமாக சிந்திக்க வேண்டியது அவசியம். சுதந்திர நாடாக இருந்தாலும், பெரும்பான்மை இந்தியா இன்னும் பொருளாதார அடிமையாகத்தான் இருக்கிறது. 3000 ரூபாய் மாத சம்பளத்துடன் உள்ள வேலைக்குக்கூட அடிதடி நடக்கிறது. அந்த வேலைகளும் அதிகம் இல்லை. படித்தவர்களின் நிலையே இப்படி என்றால் படிக்காதவர்கள் மற்றும் விவசாயக் கூலிகளின் நிலை என்ன? மக்களை பொருளாதார அடிமைத்தனத்திலிருந்து மீட்க வேண்டியது அவசரமும் அவசியமுமானது.

70% இந்தியர்கள் விவசாயத்தை நம்பி இருக்கிறார்கள். இது மிக மிக அதிகம். நெல் விலை 10 மடங்காக உயர்ந்தாலே ஒழிய, இன்றைய விவசாயிகளும் விவசாயக் கூலிகளும் ஒரு நல்ல வாழ்க்கையை நடத்த முடியாது. ஏனென்றால் விவசாயத்தில் கிடைக்கும் இலாபமும் கூலியும்(ஆண் 75ரூ, பெண் 50ரூ) அவ்வளவு குறைவு.எப்பொழுதும் ஏழைகளாகவே இருப்பார்கள். விவசாயிகளை மாற்றுத் தொழிலுக்கு தயார்படுத்தி பெரும்பான்மையான கூலித் தொழிலாளிகள் விவசாயத்தை நம்பி இருப்பதை மாற்ற வேண்டும். அதற்கு உற்பத்தித் துறையில் துரிதமான மற்றும் வெகுவாவான வளர்ச்சிவேண்டும். அதற்கு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஒரு வாய்ப்பு. சீனாவில் ஷென்சென்(Shenzhen) 20 வருடஙக்களுக்கு முன் சிபொம வாக உருவாக்கப் பட்டது. இன்று அசுர வளர்ச்சியடைந்திருப்பதை நேரடியாக பார்க்கும் அணுபவம் எனக்கு கிடைத்தது. சீனா மீது எவ்வளவு குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அவர்கள் கடந்த இருபது ஆண்டுகளில் உருவக்கியிருக்கும் வேலைவாய்ப்புகளும், உயர் கல்வி வளர்ச்சியும், வறுமை ஒழிப்பும் ஆச்சரியப்பட வைக்கிறது. ஷென்செனில் குறைந்தபட்ச ஊதியம் இந்திய மதிப்பில் ஏறக்குறைய 7500 ரூபாய். இங்கு மெத்த படித்தவர்களுக்கே அவ்வளவு கிடைப்பது சந்தேகம்தான். சீனாவை விட 30/40 ஆண்டுகள் இந்தியா பின்தங்கி இருக்கிறது.

சிபொம சட்டத்திலும் அதை நடைமுறைப் படுத்துவதிலும் நிறைய குறைபாடுகள் இருக்கலாம் அதற்காக சிபொம சட்டத்தை முற்றாக ஒழிக்கக் கோருபவர்கள், அடிமட்டத்தில் அன்றாடங்காய்ச்சிகளாக இருக்கும் மக்களுக்கும், படித்துவிட்டு நல்ல வேலைக்காக அலையும் இளைஞர்களுக்கும் முதலில் ஒரு வழி சொல்ல வேண்டும்.

"Imminent Domain" அதிகாரத்தைப் பயன்படுத்தி நிலங்களைக் கையகப்படுத்துவது சர்ச்சைக்குறிய விசயம்தான். ஒரு விவசாயி என்ற முறையில், நிச்சயம் அரசாங்க அதிகாரம் எங்கள் நிலத்தை கையகப் படுத்த வந்தால் நானும் எதிர்ப்பேன். அதே நேரத்தில் விவசாயம் இலாபகரமற்ற தொழிலாகிவிட்டது என்பதை மறுப்பது முழுப்ப்பூசனியை சோற்றில் மறைப்பது போல. இலாபகரமான நில மதிப்பையும் மாற்று வாழவழி(Livelyhood)யும், கிடைக்கச்செய்தால் இது எல்லா தரப்பாருக்கும் சுமுகமாக முடியும். உதாரணத்திற்கு சிபொமக்களில் நிலம் கொடுத்தவர்களை பங்காளிகளாக்கிக் கொள்ளலாம் அல்லது, புதிதாக உருவாக்கப் படும் நகரத்தின் முக்கியப் பகுதிகளில், நிலங்கொடுத்தவர்களுக்கு மாற்று நிலம் ஒதுக்கலாம். இதுபோன்று ஒரு "non-zero-sum" திட்டங்களை உருவாக நல்ல அரசியல் தலைமை வேண்டும். அதற்கு இங்கே எப்பொழுதும் பஞ்சம்தானே. அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் கிட்டப் பார்வையுடன் கூடிய "Politically Correct" முடிவுகளையே எடுக்க விரும்புகின்றன.

Status quo is not acceptable. Indians deserve better.

Labels: