ஜேகேவின் சில குறிப்புகள்: January 2009

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Tuesday, January 27, 2009

பழி தீர்த்த சோனியா...சோரம் போன தமிழர்கள்.

தனது கணவரை கொன்றதற்காக, புலிகளை மிகச் சாதுரியமாக சோனியா பழி தீர்த்துக் கொண்டிருக்கிறார். 40 தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவின் பேரில் அமைந்த அரசின் மூலமே இதைச் சாதித்திருக்கிறார் என்பது மலைப்பாக இருக்கிறது. தமிழக மக்கள், கூட்டணி அரசியல் தலைவர்கள், ஏன் புலிகள் கூட இதை கிஞ்சித்தும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்பதே உண்மை.

அமைதிப்படை/ராஜிவ் கொலை எனும் படுதோல்வி நிகழ்வுகளுக்குப் பின்னர் இந்தியா இலங்கைப் பிரச்சனையில் எவர் சார்பாகவும் தலையிடாமல் பெரும்பாலும் ஒதுங்கியே இருந்தது. அதன்பின்னர் வந்த நரசிம்ம ராவ், தேவகௌடா, குஜ்ரால், வாஜ்பாயி போன்றவர்களின் ஆட்சி காலகட்டத்தில் புலிகளும் அரசுத் தரப்பும் ஓரளவு சம பலத்துடன் யாரும் யாரையும் முற்றிலும் வெல்ல முடியாது என்ற நிலையிலேயே இருந்தனர். அதன் முடிவில் புலிகளின் கை ஓங்கியிருந்த தருணத்தில் போர்நிறுத்த ஒப்பந்தமும் அமலுக்கு வந்தது. அந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பின்புலத்தில் அப்போதைய மத்திய அரசும் குறிப்பாக பாதுகாப்பு ஆலோசகர் மிஸ்ராவும் முக்கிய பங்கு ஆற்றினர் என்பதை பின்னர் வந்த செய்திகள் தெரிவித்தன. மேலும் உடன்படிக்கையை ஏற்பாடு செய்த நார்வே தூதர்கள் இந்திய அரசுக்கு தொடர்ந்து தகவல்கள் தந்து அதன் ஆதரவை தக்க வைத்திருந்தார்கள்.

வாஜ்பாய் அரசிற்கு பின் வந்த மன்மோகன் சிங்-சோனியா ஆட்சிக் காலத்தில் தான் போர் நிறுத்த உடன்படிக்கை கொஞ்சம் கொஞ்சமாக மதிப்பிழக்கச் செய்யப்பட்டது. இந்த சமயத்திலேயே கருணா பிளவும் இந்திய உளவுத்துறையினர் உதவியுடன் நடைபெற்றது. முன்னர் இலங்கைப் பிரச்சனையில் இந்தியா சார்பில் பங்கேற்றிருந்த M K நாராயணனுக்கும், சிவ சங்கர் மேனனுக்கும், மத்திய அரசின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறைகளில் முக்கியமான பதவிகள் அளிக்கப் பட்டன. இவர்களில் நாராயணன் சோனியாவிற்கு மிக நெருக்கமானவராம்.இவர்களது கடந்த அனுபவத்தை வைத்துப் பார்க்கும் பொழுது, புலிகளை வஞ்சம் தீர்ப்பதற்காகவே இவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள் எனச் சொல்லலாம்.

இலங்கைப் பிரச்சனை மீதான அளவுக்கு அதிகமான கவனத்தினால்தான் மும்பை தாக்குதலை, உளவுத்துறை தகவல் இருந்தும், நாராயணன் கோட்டை விட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்ததும் நினைவிருக்கலாம். அந்த சமயத்தில் மக்கள் அழுத்தம் காரணமாக, மத்திய உள்துறை அமைச்சரும், மகாராஷ்டிர முதல், துணை முதல் மந்திரிகளும் பதவி விலக நேரிட்டது. ஆனால், பதவி விலகல் கடிதத்தை நாராயணன் பிரதமருக்கு அனுப்பியும் அது ஏற்றுக்கொள்ளப் படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அந்த அளவிற்கு சோனியாவிற்கு நாராயணனின் பணி தேவைப் பட்டிருக்கிறது.

தமிழகத்தில் ஏறக்குறைய நூறு நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போர் நிறுத்தம் கோரி பல்வேறு விதமான ஆர்ப்பாட்டங்கள் நடந்து வரும் பொழுதும், முக்கிய கூட்டணிக் கட்சிகள் ராஜினாமா மிரட்டல் விடுத்த பொழுதும், மத்திய அரசு போர்நிறுத்தத்தை கோரவேயில்லை என்பது கருத்தில் கொள்ளப்படவேண்டும். அவர்களின் நிலைப்பாட்டால் ஆட்சி கவிழலாம், தொடர்ந்து வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மிகப் பெரிய தோல்வியை சந்திக்க நேரிடலாம் என்ற ஆபத்துகள் இருந்த நிலையிலும் சோனியா ஒரு பேச்சிற்காகக் கூட போர் நிறுத்தத்தை வேண்டவில்லை. ஆரம்பத்தில் இலங்கைப் பிரச்சனைக்கு இராணுவத்தீர்வு ஓவ்வாது என்று வாய்ப்பாட்டு பாடிவந்ததையும் மத்திய அரசு பின்னர் நிறுத்திக் கொண்டு விட்டது.

இன்று சிங்கள இராணுவத்திற்கு பல்வேறு உதவிகள் வழங்கி புலிகளின் மீது தனது கணவரின் சாவிற்கான பழியைத் தீர்த்துக் கொண்டிருக்கிறார் சோனியா. ”தற்போதைய மத்திய அரசின் கடும் சிங்கள ஆதரவு/தமிழ் எதிர்ப்பு நிலைப்பாட்டிற்கு, சோனியா காரணம் அல்ல. மற்ற காங்கிரஸ் தலைவர்களே காரணம்” என சிலர் வாதிடலாம். ஆனால் அந்த தலைவர்கள் நரசிம்மராவின் ஆட்சியின் போதும் இருந்தார்கள். அந்த அரசு இப்படி ஒரு தீவிர தமிழ் எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்கவில்லை. இவ்வளவுக்குப் பிறகும் பழ நெடுமாறன், இராமதாஸ் போன்ற முன்னணி ஈழ ஆதரவாளர்கள் கூட சோனியா அப்பாவி என்று கருதுவது விந்தையாக இருக்கிறது.

தனிப்பட்ட முறையில் பாதிக்கப் பட்டவர் என்பதால் புலிகளின் மீதான சோனியாவின் தீவிர கோபத்தை புரிந்துகொள்ளலாம். ஆனால் தனிப்பட்ட பழியை தீர்ப்பதற்காக
1) இந்திய அரசின் இராணுவ உளவுத்துறை எந்திரங்கள் மற்றும் மக்களின் வரிப்பணத்தை பயன் படுத்துவது தேசத் துரோகம்.
2) புலிகளை அழிக்கிறேன் என்று ஒரு இனப் படுகொலைக்கு உடந்தையாக இருப்பது மனிதத்திற்கு செய்யப் படும் துரோகம்.
3) நம்மைப் போன்ற சாதாரணத் தமிழர்களின் ஓட்டுகளைப் பெற்று வென்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் தயவில் ஆட்சி செய்துகொண்டு தமிழர்களின் படுகொலைக்கு உடந்தையாக இருப்பது நம்பிக்கைத் துரோகம்.

Labels: ,

Monday, January 26, 2009

மீதமிருக்கும் தமிழர்களை சீக்கிரம் கொன்று விடுங்கள்

”தமிழகத்தில் அழுத்தம் அதிகமாகிக் கொண்டிருகிறது. மக்களின் போராட்டம் உக்கிரமாகிக் கொண்டிருக்கிறது. நான் இன்னும் 20 நாள் கெடு வாங்கியிருக்கிறேன். பின்னர் பொதுக்குழு தனிக்குழு என்று ஒரு பத்து நாட்களை ஓட்டிவிடலாம். அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது. இந்த 30 நாட்களுக்குள் நாளைக்கு 1000 வீதம் மீதமிருப்பவர்களில் 30,000 பேரை போட்டுவிடுங்கள். அதற்கப்பறம் ஒன்றும் பிசகாகது. பயங்கரவாதத்தை வென்று பின் “மக்களை காக்க” போர் நிறுத்தத்தை அறிவித்ததற்காக, "அமைதி விரும்பும் அதிபராக" உங்களையும், போர் நிறுத்தத்தை மத்தியரசிடம் கடுமையாக பேசி பெற்றதற்காக ”தமிழர்களின் நிரந்தரக் காவலனாக” என்னையும் இந்த உலகமென்ன அந்த பிரபஞ்சமே பாராட்டும்”

More than 300 civilians feared killed, people bleed to death on streets

கொலைப் பொறியாகும் "பாதுகாப்பு வலயம்"; வன்னி மக்களைச் சிக்க வைத்து சிறிலங்கா படையினர் அகோர பீரங்கித் தாக்குதல்: 60 வரையானோர் பலி; 200 பேர் வரை படுகாயம்

என்னையா நடக்குது இங்க...நீங்கல்லாம் என்னத்த திங்கிறீங்க..தூ தூ....

Labels: , ,

Friday, January 09, 2009

புலிகள் பற்றிய புத்தகங்கள் கண்காட்சியில் தடை

தமிழக அரசின் கருத்துச் சுதந்திர பறிப்பு/குரல்வளை நெறிப்பு தொடர்கிறது. பத்ரி மற்றும் பாரா வின் பதிவுகளின் படி, சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் விடுதலைப் புலிகள் மற்றும் பிரபாகரன் பற்றிய புத்தகங்களை விற்கக் கூடாதென தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ளதாம். இதைத் தொடர்ந்து பாபாசியினர் புத்தக கண்காட்சியில் இந்த புத்தகங்களை விற்கக் கூடாது என எல்லா பதிப்பகங்களுக்கும் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பற்றிய புத்தகங்கள் விற்கக் கூடாது என்ற போர்வையில் இந்த தடை உத்தரவு விதிக்கப் பட்டிருந்தாலும் இது யாரைக் குறி வைக்கிறது என்பது தெள்ளத் தெளிவு. தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் ஈழ ஆதரவு சூறாவளியால் புத்தகச் சந்தையில், புலிகள் பற்றிய புத்தகங்கள் அதிகம் விற்பனையாகியிருக்கும். உடனடியாக, உளவுத்துறை மூலம் இந்த உத்தரவு வந்திருக்கும்.

இது எவ்வளவு அடாவடியான பாசிசத்தனமான செயல் என்பதை பொழிப்புரை கொடுத்து விளக்க வேண்டியதில்லை. இவர்களின் இந்தச் செய்கை ஒன்றே போதும் இவர்கள் பக்கம் எந்த நியாயமும் இல்லை என்பதை உணர்த்த. ஈழத்தமிழர்களின் பிரச்சனை பற்றி படித்தவர்கள் கூட தவறான புரிதலைக் கொண்டிருக்கும் தமிழகத்தில், அதிக விழிப்புணர்வுதான் தேவை. ஆனால் இது அவர்களின் அஜென்டாவிற்கு எதிராக அமைவதால், மக்கள் இருட்டிற்குள்ளும் ஆதிக்க ஊடகங்களின் பிரச்சாரங்களுக்கு ம் கொட்டிக்கொண்டும் இருப்பதையே அவர்கள் விரும்புகிறார்கள்.

தமிழக அரசின் துரோகப் பட்டியலில் இன்னுமொரு வரி. இன்னும் என்னவெல்லாம் தடை செய்யப்பட விருக்கின்றனவோ. தமிழ் வலைப்பதிவுகளில் ஈழ ஆதரவு தூக்கலாக தெரிகிறதென்று அவற்றிற்கும் தடை பிறப்பத்தாலும் ஆச்சரியப் பட முடியாது.

மக்களே விழித்துக் கொள்ளுங்கள்...

-----------------

பத்ரியின் பதிவிலிருந்து

புத்தகங்கள் விற்பனை செய்யக்கூடாது...
(இந்தியாவில்) தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பற்றிய புத்தகங்களை சென்னை புத்தகக் கண்காட்சி அரங்குகளில் விற்பனை செய்யக்கூடாது என்று வாய்மொழி உத்தரவு ஒன்று காவல்துறையிடமிருந்து புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்துக்கு (பபாஸி) வந்துள்ளது.

பபாஸி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சென்னை புத்தகக் கண்காட்சியில், கிழக்கு பதிப்பகம் அரங்கில் கீழ்க்கண்ட புத்தகங்கள் இப்போதைக்கு விற்பனைக்குக் கிடைக்கா:

1. அல் காயிதா
2. தாலிபன்
3. விடுதலைப் புலிகள்
4. உல்ஃபா
5. பிரபாகரன்
6. லஷ்கர்-ஈ-தோய்பா
7. எல்.டி.டி.ஈ (மினிமேக்ஸ்)

இந்தப் புத்தகங்கள் எல்டாம்ஸ் ரோடில் உள்ள கிழக்கு பதிப்பகத்தின் காட்சியகத்திலும் இணையம் வழியாகவும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. தமிழகத்தின் அனைத்துக் கடைகளிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

இது தொடர்பாக மேலும் விவரங்கள் கேட்கும் நிலையில் இருக்கிறோம். எனவே மேற்கொண்டு தகவல் தெரிந்ததும் எழுதுகிறேன்.

Labels: ,

Tuesday, January 06, 2009

உதயமாகும் தமிழீழ ஆதரவுக் கூட்டணி

தமிழகத்தில் ஈழ விடுதலைக்கான ஆதரவு மக்களிடையே மிகப் பரவலாகவும் பெருவாரியாகவும் இருக்கிறதென்பது எல்லோரும் அறிந்த செய்தி. ஆனால் அதன் அரசியல் குரல் பெரிய அரசியல் கட்சிகளாலும் கூட்டணிகளாலும் எதிரொலிக்கப் படவேயில்லை. திமுக பதவியை தக்கவைத்துக் கொள்வதை முதன்மையாகக் கருதுவதால், ஈழத்திற்கான ஆதரவு நிலையை அவ்வப்போது ஊறுகாய் போல தொட்டுக்கொள்கிறது. மதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் போன்ற சிறிய கட்சிகளே தொடர்ந்து ஈழ ஆதரவிற்கு குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் அவையும் பிற அரசியல் காரணங்களுக்காக வெவ்வேறு அணிகளில் எதிரும் புதிருமாக இருந்து செயல்படுகின்றன. எனவே அரசியல் பல் இல்லாத தமிழர்களின் ஈழ ஆதரவுக்குரல் மத்திய அரசிற்கும், வட நாட்டு ஊடகங்களுக்கும் மற்றும் இலங்கை அரசிற்கும் நகைச்சுவை விருந்தாக அமைந்து விடுகிறது.

இப்பொழுது ஈழத்தில் நடைபெறும் இன அழிப்பும் சிங்கள அரசின் கொண்டாட்டக் கொக்கரிப்பும் உச்ச கட்டத்தை அடைந்து இருக்கும் நிலையில், ஈழ ஆதரவு என்பது சூறாவளி போல தமிழகத்தில் மையம் கொண்டுள்ளது. எந்தக் கூட்டணி ஈழ அதரவை முன்னிறுத்தி பாராளுமன்றத் தேர்தலில் இறங்குகிறதோ அது மிகப் பெரிய வெற்றி பெரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதைக் கருத்தில் கொண்டுதான் பாஜக கூட விடுதலை புலிகளின் மீதான தடை நீக்கப் படவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. பாமக தலைவர் இராமதாஸ், மத்திய அரசு தமிழர்களை அவமானப் படுத்திவிட்டது எனவும் கூட்டணி அரசிலிருந்து விலக நேரிடலாம் என்றும் அறிக்கை விட்டுள்ளார்.

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமா ஈழ ஆதரவுக் கூட்டணி அமைப்பதற்காக வைகோ, இராமதாஸ், பழ நெடுமாறன், வீரமணி மற்றும் தா பாண்டியன் போன்றோரை சந்திக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் திமுகவையும் ஈழத்தமிழர்களின் நலன் முன்னிட்டு "சரியான" முடிவெடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார். இவரது முயற்சி வெற்றி பெரும் பட்சத்தில் திமுக+பாமக+மதிமுக+விசி ஆகிய கட்சிகளை முன்னிறுத்தி ஒரு வலிமையான கூட்டணி அமையலாம். இவர்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோ அல்லது பாரதிய ஜனதாக் கட்சியோ சேர்வதற்கு வாய்ப்புகள் அதிகம். இவ்விரு கட்சிகளும் ஈழ ஆதவரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளன.

இந்த சமயத்தில் ஜெயலலிதா என்ன செய்வார் என்பதையும் அவதானிக்க வேண்டியுள்ளது. திமுக/அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் கொள்கைகள் என்பதைவிட தேர்தலில் வெற்றி என்பதே முக்கியமான நிலைப்பாடு. எனவே, தமிழகத்தின் ஈழ ஆதரவு அலையை சாதகமாகப் பயன்படுத்த எண்ணி அதிமுகவும் ஈழ ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவ்வளவு களேபரத்திலும் திமுக கூட ஈழத்தமிழர்களுக்கான சுய நிர்ணய உரிமையை ஆதரிப்பதாக அறிக்கை வெளியிடவில்லை. ஜெயலலிதாதான் அவ்வாறு அறிக்கை வெளியிட்டார் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். எனவே, அதிமுக ஈழ அதரவுக் கூட்டணியின் தலைமைக் கட்சியாக அமைவதற்கு வாய்பே இல்லை என்றும் ஒதுக்கிவிட முடியாது.

ஆனால் எந்தக் கட்சி உருப்பாக இருந்தாலும், ஈழத்தமிழர்களின் இன்றைய நாதியற்ற நிலையை நிவர்த்தி செய்து, அவர்களின் சுய நிர்ணய உரிமைக்காக குரல் கொடுக்கும் நிலைப்பாட்டை எடுக்கும் கூட்டணிக்கு ஆதரவு தருவது என்பது இப்பொழுது இந்தியத் தமிழர்களின் தார்மீகக் கடமை. ஏனெனில், ஈழப்போரில் வரலாறு காணாத அளவிற்கு தமிழர்கள் பின்னடைவை இப்போது சந்தித்து இருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்களின் போராட்டத்தில் வலிமை இல்லாமை அல்ல. மாறாக அவர்கள் தேசமற்ற, உரிமையற்ற, பணபலமற்ற சட்ட அங்கீகாரமற்ற, அநாதைகளாக இருந்து கொண்டு உரிமைக்காக இராணுவ, பண பலம் வாய்ந்த அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற சர்வதேசங்களையும் அவர்களின் கைத்தடி பேரினவாத இலங்கையையும் எதிர்த்துப் போராடுவதுதான் சிங்களர்களின் இந்த கொக்கரிப்புக்குக் காரணம். இந்த சர்வதேச சுயநலவாத கூட்டணியை எதிர்த்து எந்த போராளி அமைப்பு இவ்வளவு நாட்களுக்குப் போராட முடியும்?

எது எப்படி இருப்பினும், போராளித் தமிழர்களுக்கு இப்பொழுது வலிமையாக குரல் கொடுப்பது தமிழர்களின் வரலாற்றுக் கடமை. இந்த கடமையிலிருந்து வழுவினால், ஈழத்தமிழர்களின் நிலை ஒரு நாள் இந்தியாவில் வசிப்பவர்களுக்கும் வரலாம். அப்பொழுது வரலாறு கைகொட்டிச் சிரிக்கும். அதைப் பர்ர்ப்பதற்குக்கூட தமிழினம் என்ற ஒன்று இருக்காது.

Labels: ,

Friday, January 02, 2009

கிளிநொச்சி வீழ்ந்தது! What the Fuck!

நானொன்றும் விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளன் இல்லை. ஆனால் குழந்தைக்கு கூட புரியும் புலிகளை ஒழித்த பின் சிங்கள அரசாங்கம் யாரிடம் சமாதனம் பேசப்போகிறார்கள் என்று. ஒன்று இரண்டாம்தர குடிமகனாக இருக்க ஒத்துக்கொள் இல்லை போரில் எந்த நாதியும் இல்லாமல்மடி என்று ஏன் ஒரு தலைவிதி இவர்களுக்கு. தமிழர்களாய்ப் பிறந்ததாலா?

பிரபாகரன் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று அவருக்குத்தான் வெளிச்சம். தமிழர்களுக்கு ஈழம், ஈழம், இறுதிப்போர் என்று ஆசைகாட்டிவிட்டு இப்படி ஒரு அழிவில் போர் முடிந்ததென்றால் பிரபாகரனின் துரோகம்தான் எல்லாவற்றையும் விட பெரிதாக இருக்கும். எத்தனை பேர் தமது உயிரை இவரது கையில் கேள்வி கேட்காமல் கொடுத்தார்கள்....

பதவி சுகத்திற்காக இடுப்பில் இருக்கும் வேட்டியையும் அவிழ்த்துத் தர முதலில் நிற்பார் போல இருக்கிறது நமது தமிழினக் காவலர். தூ....இப்படியும் ஒரு பிழைப்பு...

ஆனால் பாருங்கள் அந்த பதவிக்கே வேட்டு வரப்போகிறது. காங்கிரசையும், மத்திய பதவியையும் இப்போதும் உதற மறுத்தால், திமுகவிற்கு வரலாறு காணாத தோல்வி கிடைக்கும் என்பது உறுதி....

கலைஞரே(இதுவே கடைசி முறை இவரை கலைஞர் என்று அழைக்கப்போவது)...இந்த சமயத்திலும் நீங்கள் தீர்க்கமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதை மன்னிக்கவே முடியாது. திமுக தமிழகத்தில் ஆழ குழிதோண்டி புதைக்கப் படும். மக்கள் கொதிப்பதின் வெப்பம் உங்களுக்கு மட்டும் எப்படி சுடாமல் இருக்கிறது.... பதவி துண்டென்று நீங்கள் தானே சொன்னீர்கள். வேட்டி அவிழ்கிறது இனம் அழிகிறது இனியும் தேவையா இந்த மானங்கெட்ட துண்டு...

Labels: , ,

Thursday, January 01, 2009

பிச்சாவரம் & கங்கைகொண்டான் : ஒரு பயணம், சில மனிதர்கள்

பயணம்: ஓவ்வொரு பயணமும் ஒரு புதிய அனுபவம். சமீபத்தில் நான் வாங்கிய புல்லட்டில் வெகு தொலைவு செல்ல வேண்டும் என்பதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்டது இந்தப் பயணம்.


திட்டம்: சென்னையிலிருந்து கிளம்புவது. சென்னைக்கு வந்து சேர்வது. மற்றபடி எல்லாம் சந்தர்ப்பத்திற்கும் அப்போதய மனநிலைக்கும் ஏற்ப மாறலாம் என்பதே திட்டம்.


பாண்டிச்சேரி: உள்ளூர் காவலர்கள் சங்கம் அமைத்து அசட்டுத்தனமாக நீதித்துறையை எதிர்த்து போராடியதற்காக ரிசர்வ் போலீஸ் காரர்கள் SLR உடன் நடமாடிக்கொண்டிருந்தார்கள். அங்கே சாப்பிட்டுவிட்டு பாரதி பூங்காவில் படுத்து இளைப்பாறிவிட்டு பின்னர் பயனத்தை பிச்சாவரம் நோக்கி தொடர்ந்தோம்


பிச்சாவரம்: தமிழ்நாடு சுற்றுலா வளர்சிக் கழக வளாகத்தை அடையும் போது மாலை ஆகிவிட்டிருந்தது. தங்க அறை பற்றி விசாரித்தற்கு, “ஏன்டா இங்க வந்து எங்க கழுத்தறுக்குறீங்க” போன்ற தொனியில் பதில் கிடைத்தது. இது சரிவராது என்று திரும்பினோம். வழியில் வண்டியை நிறுத்தி அங்கு நின்று கொண்டிந்த ஒருவரிடம், “இங்கு மீனவர்கள் யாராவது படகில் உள்ளே அழைத்துச் செல்வார்களா எனக் கேட்டோம்”

தன்னிடமே படகு இருப்பதாகவும், தானே அழைத்துச் செல்வதாகவும் அவர் சொன்னார். அவர் பெயர் குப்புராஜ் என்றும் சொன்னார். பின்னர், சிதம்பரம் திரும்பி வண்டிகேட் என்ற இடத்தில் அறை எடுத்து தங்கினோம்.


குப்புராஜ்: இவர் ஒரு ஜாலியான நல்ல மனிதர். மீனவரான இவர் கடந்த நான்காண்டுகளாக சிங்கப்பூரில் வேலைபார்த்துவிட்டு சில மாதங்களுக்கு முன்னர்தான் ஊர் திரும்பியிருக்கிறார். எவ்வளவு ஆகும் எனக்கேட்டதற்கு, சும்மா நட்பிற்காகத்தான் அழைத்துபோகிறேன் நீங்க கொடுக்கறத கொடுங்க என்று நட்பு பாராட்டி அசத்தினார். ஒரு சிறு தோனியில் குப்புராஜ், அவரது நண்பர் ராஜு, எனது நண்பர் மற்றும் நான் என பிச்சாவரம் ஆற்றில் துடுப்பு போட்டு உள்ளே சென்றோம். கடந்த முறை காரைக்காலில் படகு கவிழ்ந்த அனுபவம் (அது ஒரு தனிக் கதை) ஞாபகத்திற்கு வந்து திகில் ஊட்டியது. இருந்தாலும் உற்சாகமாக இருந்தது. ஆறு பெரும்பாலான இடங்களில் ஆழம் மிகக் குறைவே, அதனால் பயமில்லை.

சின்ன வாய்க்கால்: துடுப்பு போட்டுக்கொண்டு சின்ன வாய்க்கால் என்ற ஒரு சிறிய திட்டை அடைந்தோம். சில ஏக்கர் பரப்பளவே உள்ள இது ஒரு தீவு போன்றது. கிழக்கே கடல் மேற்கே ஆறு. இந்த இடங்களில் தான் காவிரியின் சில கிளைகள் கடலில் கலக்கின்றன. இங்கிருந்து சூரிய உதயத்தையும் , அத்தமனத்தையும் பார்க்கலாமாம்.

சின்ன வாய்க்காலுக்கு ஒரு சோகம் நிறைந்த பின்கதை உண்டு. நாங்கள் அங்கிருந்த தினம் டிசம்பர்-26. சரியாக நான்காண்டுகளுக்கு முன்னார் ஆழிப்பேரலையால் மிகப்பெரிய தாக்குதலுக்குட்பட்ட இடம். அதற்கு முன், மீனவர்கள் சிலர் அங்கே தங்கியிருந்து மீன்பிடித்தொழிலை செய்து வந்திருக்கிறார்கள். ஆழிப்பேரலையில் அங்கிருந்தவர்களில் பெரும்பாலானோர் இறந்துவிட்டனர். இருப்பிடங்கள் எல்லாம் மொத்தமாக கடலில் சென்றுவிட்டன. உயிர்பிழைத்தவர்கள் பிச்சாவரத்தில் வந்து தங்கிவிட்டார்கள். சின்ன வாய்க்காலில் இப்பொழுது யாரும் வசிக்கவில்லை. இதுபோன்று அருகில் உள்ள இன்னொரு இடம் எம்ஜியார் திட்டு. அந்த இடத்திற்கும் இதே நிலைதானாம்.

இவ்வளவு சோகங்களையும் தாண்டி அழகான, சுத்தமான, நீண்ட, ஆள் நடமாட்டமற்ற கடற்கரையும், பச்சைப் பசேலென்ற தென்னந்தோப்பும் சேர்ந்து அற்புதமான ஒரு இடமாக காட்சி தருகிறது சின்ன வாய்க்கால் திட்டு. வெகு நேரம் கடலில் விளையாடிவிட்டு மீண்டும் தோனியேறி சதுப்பு நிலக்காடுகளுக்குள் சென்றோம்.

சுரப்புன்னைக் காடுகள்: இருபுறங்களும் பச்சைப்பசேலென சுரப்புன்னை மரங்கள் நிறைந்த சதுப்பு நிலக் காடுகள் சூழ, தோனியில் செல்வது அற்புதம். தன்னீரில் மீன்கள் ஓடுவதை குப்புராஜ் அவதானித்துவிட்டு மீன்பிடிக்கலாம் என்றார். பின்னர் வலையை வீசிவிட்டு மீன்கள் படுவதற்காக குப்புராஜின் செல்பேசியிலிருந்து பின்னனி இசையுடன் காத்திருந்தோம். கில்லாடி மீன்கள் பகல் வெளிச்சத்தில் வலையைப் பார்த்து ஒதுங்கி சென்றுவிட்டன. ஒரு மீன்கூட அகப்படவில்லை. மீன்பிடித்து ஆற்றில் மீண்டும் விட முடியவில்லை. பின்னர் பிச்சாவரம் கரை நோக்கி தோனியை செலுத்தினோம். சிறிது நேரம் துடுப்பை நான் வலித்தேன். கை நன்றாக வலித்தது.

ஜெயங்கொண்டான்: புல்லட்டை எடுத்துக்கொண்டு சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்குடி சென்று அங்கே சுகாதார ஆய்வாளராக இருக்கும் நண்பர் ஒருவரை சந்தித்து விட்டு மீன்சுருட்டி வழியாக கங்கைகொண்ட சோழபுரம் வந்தடைந்தோம். அங்கு தங்குவதற்கு ஏதும் இடமில்லை. எனவே ஜெயங்கொண்டானில் அறையெடுடுத்து தங்கினோம்.

மணிமாறன்: காலையில் புல்லட் ஸ்டார்ட் ஆகமாட்டேன் என சண்டித்தனம் செய்ய ஆரம்பித்தது. வெகு நேரம் முயற்சி செய்தும் ஒன்றும் நடக்கவில்லை. ஜெயங்கொண்டானில் நாங்கள் எங்கே பட்டறை தேடுவது? எனினும் தள்ளிக்கொண்டு சில மீட்டர் நடந்தபொழுது எதிரில் சைக்கிளில் ஒரு இளைஞர் வந்தார். அவரிடம் விசாரித்தோம். அவர் பெயர் மணிமாறன் என்றும், கொஞ்சம் தொலைவில் பட்டறை இருப்பதாகவும் கூறினார். பின்னர் அவரது மெக்கானிக் நண்பர் ஒருவருக்கு போனடித்து வரமுடியுமா எனக்கேட்டார். அவர் வேறெங்கோ செல்லவேண்டியிருந்ததாம். கொஞ்சம் யோசித்துவிட்டு எங்கள் இருவரையும் புல்லட்டுடன் அங்கேயே நிற்கவைத்துவிட்டு அவரே சைக்கிளில் முஸ்தபா என்பவரின் பட்டறைக்கு சென்று அவரை நாங்கள் நின்றுகொண்டிருந்த இடத்திற்கு வரவைத்து விட்டு சென்றார். இந்த காலத்திலும் இப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். புல்லட்டின் சண்டித்தனத்தில் கடுப்பாக இருந்தாலும், மணிமாறனின் உதவி உற்சாகத்தை ஊட்டியது. முஸ்தபாவின் கைவண்ணத்தில் புல்லட் தம்ப் தம்ப் என உயிர்த்துக்கொண்டது

கங்கைகொண்ட சோழபுரம்: ஜெயங்கொண்டானில் இருந்து கங்கைகொண்ட சோழபுரம் போகும் வழியில் பொன்னேரி எனும் பெரிய ஏரி இருந்தது. அந்த இடத்திலிருந்தே பெரிய கோவிலின் கோபுரம் அட்டகாசமாக தெரிந்தது. அந்த ஏரியும் இராஜேந்திரச் சோழன் காலத்தில் வெட்டப்பட்டதாம். அதற்கு சோழகங்கம் என்றொரு பெயரும் உண்டாம். கோவிலின் பிரம்மாண்டத்தையும் சிற்பங்களின் அழகையும் இதுவரை படித்திருக்கிறேன். இருந்தும் நேரில் அவை வியப்பூட்ட தவறவில்லை. பிரபலமான ஆடவல்லான் சிலை எந்த இடத்தில் இருக்கிறதென கொஞ்ச நேரம் தேட வேண்டியிருந்தது. அங்கு கற்பக்கிரகத்தில் இருந்த பூசாரியிடம் கேட்டேன். அவர்க்கு ஒன்றும் புரியவில்லை. யோசித்துவிட்டு இங்கு உள்ள எல்லா சிலைகளிலும் சிவன் ஆடுவது போலத்தான் இருக்கென்றார். ஹ்ம்ம்ம்... கோவிலைச் சுற்றிவரும்போது வடபுறம் பின்பகுதியில் அதை கண்டுபிடித்து, சிலையில் காரைக்கால் அம்மையாரை தேடிக் கண்டுபிடித்து எனது கொஞ்சுனூண்டு அறிவை நானே மெச்சிக்கொண்டேன்.

மாளிகை மேடு: அங்கிருந்து மாளிகைமேட்டிற்கு சென்றோம். அகழ்வாரய்ச்சி செய்யப்பட்டு வெளிப்படுத்தப்பட்ட அரண்மனையின் ஒருபகுதி இருந்த குழி மழைநீரில் கொஞ்சம் நிரம்பி இருந்தது. ஒரு அன்பர் அதில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அந்த காட்சியும் அந்த இடத்தின் வரலாறும் எனக்கு எதையோ சொல்வது போன்றிருந்தது. ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்கு ஒரு மிகப் பெரிய பலமான பேரரசின் தலைநகராக இருந்து கங்கைகொண்ட சோழபுரம் இன்று ஒரு சிற்றூராக மாறிவிட்டது. காலச்சக்கரத்தின் முன் பேரரசும் ஒன்றுதான் துணி துவைப்பரும் ஒன்றுதான்.

புல்லட்: அவ்வப்போது ஸ்டார்டாகாமல் சண்டித்தனம் செய்தாலும் சக்கரங்களின் ரப்பர் சாலையைத்தொட்டு உருள ஆரம்பித்து விட்டால் எல்லா சாலைகளும் இராஜபாட்டைதான். நெடுஞ்சாலைகளில் 80, 90லும் முக்கல் முனகல் இல்லாமல் ஓடுகிறது. என்ன ஒரே ஒரு விசயம், இந்த மாதிரி ஒரு தண்ணி வண்டியை பார்க்க முடியாதப்பா. ஊற்ற ஊற்ற குடிக்கிறது. லிட்டருக்கு 20 என்ற ரேஞ்சில் பர்சை நன்றாக பதம் பார்த்துவிட்டது.


Labels: