ஜேகேவின் சில குறிப்புகள்: April 2008

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Friday, April 04, 2008

அறிவு ஜீவி மரங்களுக்கு

என்னைத் தாண்டியது
அறிவு ஜீவி மரம்
என்னிடம் இல்லை
சதுரத்தின் வளைவுகளின் தீர்க்கம்
வட்டத்தின் போக்கின் நிதானம்
எமது இருத்தலை
கூட்டலும் பெருக்கலுமா நிர்ணயிக்கும்

என் கோபங்களுக்கு நிகழ்தகவு புரிவதில்லை
அவை எப்போதும் நிகழ்பவை

உன் சொற் புனிதங்களை அழிக்கத்தான்
படை திரட்டிக் கொண்டிருக்கிறேன்

என் எதிரிகள்
அணியணியாய் வகுத்து நிற்கின்றனர்
என் அணியில்
ஒரு நிரையும் ஒரு நிரலும்

நீ மனித உரிமைகள் பேசுவது விசித்திரம்
அவ்வளவு சித்திரவதைகளை
நீ மட்டுமே செய்திருக்க முடியும்

கைதட்டல்களுக்காக நான் வாசிப்பதில்லை,
எனினும்,
கொஞ்சம் சலனங்களை
வெறுக்க முடியவில்லை

எவரது வருகைக்காகவும்
நான் பரிமாறவில்லை
எவராவது வந்தாரா
என வாயிலைப் பார்க்காமலும் இல்லை

என் தியானங்கள் என் குழப்பங்களை நோக்கியே
என் குழப்பங்கள் அத்தியானங்களிலிருந்தே

எல்லோருக்கும்
எதுவாகவாவுது தெரிகிறேன்
உனக்குமட்டும்தான்
நான் மனித வடிவிலான
வெற்றிடமாகப் படுகிறேன்

கவிதைகளை யார் கட்டிப் போட்டது?
அவை சொல் வட்டங்கட் குள்ளேயே சுற்றி வருகின்றன.

விரயமாக்கப்பட்ட இன்னொரு இரவின் முடிவில்
மற்றொன்றை எதிர்நோக்கி
சோம்பலுடன் விடியும் எதேச்சையான ஒரு காலையில்தான்
என் அடிமனது கலங்கி வெளியில் வருகிறது
யாரும் செய்து வைக்காத
இந்த சூன்யம் மிகுந்த குப்பை.

Labels:

Wednesday, April 02, 2008

நெகிழும் சீனப் பெருஞ்சுவர்(வலைச்சுவர்)

என்ன ஆச்சரியம். சீனத்தின் வலைத்தடுப்புச்சுவர் நெகிழத் தொடங்கியிருக்கிறது. பல ஆண்டுகளாக முடக்கப்பட்டிருந்த BBC செய்தித்தளம் இப்பொழுது தெரிகிறது. சென்ற வாரம்கூட வலைப்பதிவுகளை படிக்க முடியவில்லை. blogspot மற்றும் wordpress முடக்கப்பட்டிருந்தது. அதையெல்லாவற்றையும் விட ஆச்சரியமானது விக்கியப்பீடியாவைக் கூட தடுத்திருந்தார்கள்.

நேற்றுமுதல் வலைப்பதிவுகளை படிக்க முடிந்தது. இன்று சோதித்த பொழுது விக்கிப்பீடியாவும் திறக்கிறது. தமிழ் விக்கியை விட ஆங்கில விக்கி மெதுவாக திறக்கிறது போலிருக்கிறது. எனினும் வீக்கி, வலைப்பதிவுப் பக்கங்கள் இல்லாமல் கையொடிந்திருந்தது. இப்பொழுது கொஞ்சம் மகிழ்ச்சி.

பலகாலமாக இருந்துவரும் இவ்வலைத் தணிக்கை பற்றி மக்கள் சீனத்தின் திடீர் மனமாற்றம் மிகுந்த ஆச்சரியத்தைத் தருகிறது. திபெத் போராட்டங்களால் உலக அளவில் தமது பெயருக்கு ஏற்பட்டிருக்கும் கலங்கத்தை கலைவதற்கான ஏற்பாடா? இல்லை உலக ஒலிம்பிக் சம்மேளனத்தின் இந்த வேண்டுகோளுக்கு செவி மடுத்திருக்கிறார்களா எனத்தெரியவில்லை. வலைப் பயனர்கள் வலைத்தணிக்கையை பெரும்பாலும் தொழில்நுட்பம் கொண்டு தாண்டிவிடலாம். எனவே பெரும்பாலும் அது உபயோகமற்றது என நினைத்துவிட்டார்களா. எப்படி இருப்பினும் இது ஒரு வரவேற்கவேண்டிய நடவடிக்கை. எத்தனைகாலம் இப்படியெனப் பார்க்கலாம்.

Labels: , ,

Tuesday, April 01, 2008

உன் கவிதைகளை நான் முற்றிலும் வெறுக்கிறேன்

உன் கவிதைகளுக்கு என்னிடம் பொறுமையில்லை
சரம் வெடிப்பது போலிருக்கிறது
எனது அன்றாடம்
சோகம் சொட்டும் வரிகளுக்கிடையில்
சில மணித்துளிகளல்ல
பல யுகங்கள் கடந்து விடுகின்றன

உன் கவிதைகளுக்கு என்னிடம் நேரம் இல்லை
மேசையை நிறைத்திருக்கும் இன்று
எனது மாலையையும்
இரவையும்
விழுங்கப் பசித்திருக்கிறது

உன் கவிதைகள் எனக்குப் பிடிக்கவில்லை
அவை நெருஞ்சி முள்ளைப் போல்
குத்துவதும் அல்லாமல்
நிரந்தரமாய் நின்று உறுத்துகின்றன

அழகியல் உனக்கு சுத்தமாய் தெரியவில்லை
உன் கவிதைகள் அசிங்கமாய்
சீழ் நிறைந்த சிறு புண்களாய் வீச்சமடிக்கின்றன

உன் கவிதைகளை நான் முற்றிலும் வெறுக்கிறேன்
ஏன் தெரியுமா
அவற்றை
நீ எழுதினாய்
நான் வாழ்கிறேன்

Labels: