ஜேகேவின் சில குறிப்புகள்

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Thursday, August 07, 2008

Flip-Flop/அந்தர் பல்டி(குசேலன் மேட்டர் இல்லை)

இரத்தக் கறை தோய்ந்த பீஜிங் ஒலிம்பிக்கை ஆதரித்து ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தில் பங்கேற்க கூடாது என நடிகர் அமிர்கானுக்கு கோரிக்கை விடுத்து திறந்த மடல் எழுதினார் முன்னாள் இந்திய உளவுத்துறை முக்கியஸ்தர் பி இராமன்.

I have been of the view that we should not help China in giving a great shine to the Games despite all that has been happening in Tibet, Sichuan, Gansu, Qinghai, Xinjiang and Inner Mongolia as if nothing has happened. A lot has happened in the Tibetan-inhabited areas of China. A lot of blood has flown. A highly-respected religious leader of the world has been insulted and demonised like no other religious leader of the world has ever been demonised.



நான்கு மாதங்களில் பல மேட்டர்கள் நடக்கலாம் இல்லையா. இன்றைக்கு அவர் பதிவில் பீஜிங் ஒலிம்பிக்கின் வெற்றி இந்தியாவின் வெற்றியாகும் என புலகாங்கிதம் அடைந்திருக்கிறார். இடையில் என்ன நடந்தது. திடீரென எப்படி பீஜிங் ஒலிம்பிக் டெல்லி ஒலிம்பிக் ஆக மாறும் அளவிற்கு நாம் ஒன்னுக்குள்ள ஒன்னானோம்னு தெரில...

At the end of my visit to Shanghai in May, an important personality had hosted a lunch for me. In my toast, I said: "In India, we all without exception want you to succeed and want the Beijing Olympics to be a memorable success. We want to hold the Olympics in New Delhi one day. We will learn from you how to organise a spectacular Olympics." I could see everybody at the lunch was touched. We are all Chinese today. Chinese success will be our success. Chinese pride will be our pride.
இராமன் சார்...விசயம் இதுதானா...உங்களை பயங்கரவாத ஆலோசகராக சீன அரசாங்கம் அழைத்து உங்களது சேவையையும் ஆசியையும் பெற்றுக்கொண்டார்களா. ரொம்ப நல்லது. எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கி..

Labels: ,

Thursday, June 19, 2008

என். ராம் பற்றி பி. ராமன் - மறுபடியும்

பி இராமன், "த ஹிந்து" என். ராமை மறுபடி ஒரு பிடி பிடித்துள்ளார். காரணம் சில மாதங்களுக்கு முன் நடந்த திபெத் கொந்தளிப்பின் பொழுது, ராம் எழுதிய ஒரு கருத்துப் பத்தி. இந்த கருத்துப் பத்தியை கண்டு உள்ளம் குளிர்ந்த சீன காம்ரேடுகள் அதை பல மொழிகளில் பெயர்த்து தமது உள்/வெளி நாட்டு பிரச்சாரத்துக்கும் "நாட்டுப் பற்று" போதனைகளுக்கும் பயன்படுத்தி வருகிறார்களாம்.

பி ராமன் எல்லோரையும் "த ஹிந்து"வை புறக்கனியுங்கள் எனச் சொல்லாமல் சொல்கிறார்.

SHRI N.RAM, THE TOAST OF CHINA


//As you move around Chennai, you see thousands of advertisements inviting you to buy "The Hindu". When you see those advertisements,think of Shri Ram and his writings in support of the Chinese and in demonisation of the Dalai Lama and the Tibetans and ask yourself thequestion:" Does such a newspaper deserve my continued support?". The choice is yours. Fortunately, despite Shri Ram and his ilk, India isnot China. We have a wide choice and we are not captive readers of Hsinhua. We don't have to worry that if we stop buying and reading"The Hindu", we may end in patriotic re-education classes.(18-6-08) //

தொடர்புடைய மற்றொரு பதிவு : திபெத் போராட்டங்கள்: இந்து நாளிதழ் மீது B Raman விமர்சனம்

பிகு: மனிதர்களின் "நல்வழி திசைகாட்டி(moral compass)" எத்தனை திசைகளைத்தான் காட்டுகிறது. என்னமோ போங்க எல்லாம் நல்லா நடந்தா சரிதான்.

Labels: , ,

Tuesday, June 10, 2008

ஷாங்காய் குறிப்புகள் II

- சீனாவில் எண்ணற்ற கார் வகைகள். அதில் ஒரு இந்திய காரை பார்ப்பேன் என்று எதிர்பார்க்கவேயில்லை. நமது அன்பிற்கும், மரியாதைக்கும் உரிய "மாருதி 800"ஐ சுசுகி நிறுவனம் "ஆல்டோ" என பெயர் மாற்றி சீனாவில் விற்று வருகிறது.

- முன்னர் சொன்னது போல சாப்பாடு பெரும்பாடு என்பதால், என்னை "இந்தியா கிச்சன்" எனும் ஒரு இந்திய உணவகத்திற்கு நண்பர் அழைத்துச் சென்றார். உணவகத்தின் வெளியே கழுத்தில் பாம்பு, கையில் உடுக்கையென அட்டகாசமான கெட்டப்பில் ஒரு பிரம்மாண்டமான சிவன் சிலை வைக்கப்பட்டிருந்தது. நம்ம ஊர் ஆட்கள் போலிருக்கிறதே என்று நினைத்துக் கொண்டே உள்ளே சென்றேன். அப்படியே. "இந்தியா கிச்சன்" சீனாவின் எல்லா முக்கிய நகரங்களிலும் கிளைகளை உடைய இந்திய உணவக நிறுவனமாம். முதலாளி, முன்னாள் காரைக்குடி வாசியாம். இப்ப ஒரு சீனப்பெண்ணை மணந்துகொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டாராம். உணவகம் அட்டகாசமாயிருந்தது. விலைதான் சென்னையில் உள்ள 5 நட்சத்திர உணவகங்களின் விலையை மிஞ்சுவதாக இருந்தது.

- சீனாவின் வலைத்தனிக்கை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் என்னவெல்லாம் தனிக்கை செய்யப்படுகின்றன எனத் தெரிந்தால் கொஞ்சம் விசித்திரமாக இருக்கும். "இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக" தளம் கூடத் தனிக்கை செய்யப்பட்டுள்ளது. ஒரு "நேச" நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத் தளத்தினால் அப்படியென்ன குந்தகம் சீனாவிற்கு
விளைந்துவிடுமென நினைத்தார்களோ தெரியவில்லை.

- ஷாங்காய் நகரை இரண்டாக பிரித்து "வுவாங்பூ" நதி ஓடிகொண்டிருக்கிறது. எப்பொழுதும் சரக்கு, மற்றும் சொகுசுக் கப்பல்கள் சென்றவன்னம் இருந்தன. நதிமுகப்பில் இருக்கும் வானளாவிய கட்டிடங்கள் மாலையில் மின்னொளியில் மிக அட்டகாசமாக இருக்குமாம்(நான் சென்ற சமயத்தில் மின்சார சேமிப்பிற்காக அவை பெரும்பாலும் எரியவில்லை). நதியின் மேற்குப்புறம் பழமை வாய்ந்த "புக்சி" பகுதியும், கிழக்கில் புதிதாக வளர்ந்து வரும் புதோங் பகுதியும் இருக்கின்றன. புதோங் பகுதியில்தான் ஷாங்காயின் மிக உயரமான "ஜின் மாவோ" கட்டிடமும், அதை விட உயரமாகக் கட்டப்படும் புதிய கட்டிடங்களும் அமைந்துள்ளன.

- அதிவேகமாகப் பெருகி வரும் கார்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ஷாங்காய் நிர்வாகம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான் புதிய கார்களை மட்டுமே அனுமதிக்கிறார்கள். எனவே கார் எண்களை ஏலத்தில் விடுகிறார்கள். இந்த எண்களை வாங்குவதற்கு பல நேரங்களில் காரின் விலையளவிற்கு செலவிட வேண்டியிருக்கிறதாம். :(

- ஒரு அதி முக்கியமான விசயமென்ன தெரியுமா? நான் இதுவரை சென்ற நாடுகளில் பியர் விலை குறைவாக இருப்பது சீனாவில்தான்(பாண்டிச்சேரியை விட குறைவென்றுதான் நினைக்கிறேன்). ஒரு 650ml Tsingtao பியர் 5.5RMB தான்(சுமார் 30ரூபாய்). நீங்கள் இருக்கும் இடத்தில் இதற்கு குறைவாக பியர் விற்கப்பட்டால் தவறாமல் தகவல் தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!!

ஷாங்காயின் வெனிஸ் : ஷொ ஜியா ஜியாவ் (Zhou Jia Jiao)




- சீனக்கட்டிட அமைப்பின் முக்கிய குறியீடான வளைந்த கூறைகளை உடைய ஒரு கட்டிடத்தைக் கூட ஷாங்காயில் என்னால் பார்க்க முடியவில்லை. அசுர வேகத்தில் வளரும் இப்பிந்தியத்தின் பழைய கலாச்சார சுவடுகளை அருங்காட்சியகத்தில்தான் காணவேண்டும் என நினைக்கிறேன். அதற்கேற்றார்போல ஷாங்காயிலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள 150 சதுர கிலோ மீட்டர் பரப்பிலுள்ள ஷொ ஜியா ஜியாவ் நகரத்தின் 2.4சதுர கிலோ மீட்டர் பகுதியை ஒரு "புராதானமான நகரம்" என அருங்காட்சியகம் போல பாதுகாத்து வருகிறார்கள்.

- பொதுவாகவே, கீழைச் சீன கடலையொட்டிய பகுதிகளில் நீர் நிலைகள் அதிகம். அங்குதான் மிகப்பெரிய யாங்ட்சி ஆற்றின் 100 கிலோ மீட்டர் அகலமுள்ள முகத்துவாரமும் உள்ளது. அதுபோலவே, இந்த ஊரும் ஒரு ஏரி மற்றும் பல ஆறுகளின் அண்மையில் அமைந்துள்ளது. ஏரி மற்றும் ஆற்றின் காரைகளில் அமைந்துள்ள நகரவீதிகளால், அப்பகுதியை ஷாங்காயின் வெனிஸ் என்று உள்ளூர்வாசிகள் பெருமையுடன் கூறிக் கொள்கிறார்கள்.

- சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இந்நகரில் பழைமையான கட்டிடங்கள், ட்ராகன் கட்டியது என்று அவர்கள் கருதும் பாலங்கள், நம்மூர் ஐயனார் போல உள்ளூர் கடவுளுக்கான கோயில், புத்த விகார், சீனாவிலேயே பழைமையான அஞ்சலகம் எல்லாவற்றையும் பாதுகாத்து வருகிறார்கள். அவர்களது உள்ளூர் காவல் தெய்வத்திற்கான கோவிலில் எக்கச்சக்க கூட்டம். ஒரு நாடகம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. புத்த விகாரில் யாருமே இல்லை.

புத்த விகார்


உள்ளூர் சாமிக்கான கோயிலில் நாடகம்




- தெருக்களில் விற்கப்படும், மசால் டோஃபு, ஊறவைத்து வறுக்கப்பட்ட டோஃபு(Stinky Tofu), முக்கோணமாக மடிக்கப்பட்ட பனையோலை(அல்லது அதுபோன்றது)யில் மசாலா சேர்க்கப்பட்ட சோறு என விதவிதமான பாராம்பரிய சீன உணவுவகைகளை வெளுத்துக்கட்டினோம்(முதலில் கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. பழகிய பின் ஓகே).

Labels: ,

Monday, June 09, 2008

ஷாங்காய் குறிப்புகள்.

ஷாங்காய் வெகுவேகமாக வளர்ந்திருக்கிறது(வளர்கிறது). இங்கு வரும் யாரும் தவறிப்போய் தாம் அமெரிக்காவிலோ அல்லது ஐரோப்பாவிலோ உள்ள ஒரு பெரு நகருக்கு வந்துவிட்டதாக நினைக்க நிறைய வாய்ப்பு. நாம் சீனாவின் ஒரு நகரத்தில் இருக்கிறோம் என்பதை ஆங்காங்கே தெரியும் சீன எழுத்துக்களாலும், எதிரில் வரும் சீன முகங்களாலும் மட்டுமே உணர வேண்டியிருக்கிறது. அதுவும் பெரும்பாலான சீனார்கள் மேலைநாட்டவர்கள் போலவே உடையும் அணிந்துகொள்கிறார்கள். கட்டிடங்கள் முழுவதும் அதிபுதுக்கால வடிவமைப்புகள். பளிச்சென்றும், நல்ல அகலமாகவும் அமைக்கப்பட்டிருக்கும் பல்வழிச்சாலைகளும், அவற்றில் பவனிவரும் பள-பளா கார்களும் முன்னேறிய நாட்டவர்களைக்கூட கொஞ்சம் பொறாமை படவைக்கும்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் நிகழ்ந்த ஷாங்காய் பயனமாயினும் இப்பொழுதுதான் எழுதக்கிடைக்கிறது. இதற்கிடையில் ஒரு கடுப்பான நிகழ்வு. ஷாங்காயில், அதற்கு முன் கோலாலம்பூரில், இடையில் தஞ்சாவூர் பெரிய கோவிலில் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் அனது கேமராவின் SD நினைவட்டையிலேயே இருந்தன. சில நாட்களுக்கு முன் மடிக்கணினிக்கு மாற்ற முயற்சிக்கையில் ஒரு வைரஸ் எல்லா படங்களையும் சுவாஹா செய்து அதீத கடுப்பேற்றிவிட்டது. இப்பதிவில் இருக்கும் ஓரிரு படங்கள் என் உடன் வந்த சீன நண்பரால் எடுக்கப்பட்டவை.

- சீனாவில் உணவு ஒரு பெரிய பாடு. காரணம் சீன உணவு பிடிக்காமையல்ல.
பொதுவாக சீன உணவு வகைகளை வெளுத்துக் கட்டுவேன். பிரச்சனை சைவ சீன உணவை கண்டுபிடிப்பதுதான். சீனர்கள் pure-அசைவம் சாப்பிடுபவர்களாக இருக்கிறார்கள். ஆனால் பாருங்கள் ஷாங்காயில் ஒரு "சுத்த சைவ" உணவகம் ஒன்று இருந்தது. நனும் நண்பரும் உள்ளே சென்று "சுறா முள் சூப்", "வறுத்த பன்றி கறி", "அவித்த இறால்" என ஒரு கட்டு கட்டினோம். "சுத்த சைவ" உணவகத்தில் "வறுத்த பன்றி கறி"யா என யோசிக்க வேண்டாம், பன்றி கறி போல இருக்கும் சைவக் கறிதான் (பெரும்பாலும் டோஃபுவைக் கொண்டு செய்திருந்தார்கள்). சாப்பிட்டுவிட்டு எங்களுக்கு பரிமாறிய ஊழியருக்கு டிப்ஸ் கொடுத்தேன் அதை வாங்க மறுத்துவிட்டு என்னிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

- அந்த சமயத்தில் தான் திபெத் பிரச்சனை வெடித்திருந்தது. என் நண்பரிடம் அதைப்பற்றிக் கேட்க யத்தனித்தபொழுது, அது காதிலேயே விழாத மாதிரி காட்டிக்கொண்டு அந்த மேட்டரையே தவிர்த்துவிட்டார். நானும் ஒழுங்காக ஊர் வந்து சேரவேண்டும் என்ற அவாவில் வேறு யாரிடம் அந்த மேட்டரை பின்னர் எடுக்கவில்லை.

- ஷாங்காயின் புதிய புதோங் விமான நிலையம் நகரின் மையத்திலிருந்து ~30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. புத்தம் புதிதாக ஒரு இரண்டாவது டெர்மினலை அப்போதுதான் திறந்திருந்தார்கள். எம்மாம் பெருசு...

- நகரிலிருந்து விமான நிலையம் சென்றுவர "காந்த மிதவை" இரயில் விட்டிருக்கிறார்கள். 8 நிமிடத்தில் நகரிலிருந்து விமான நிலையம் செல்கிறது.

- சென்னையில் ஓடும் இன்போசிஸ் பணியாளர் பேருந்துகள் எல்லாம் சாதரணமானவையாக இருந்தே பார்த்திருக்கிறேன். ஷாங்காய் இன்போசிஸ் பணியாளர்களுக்கு A/C பேருந்துகள். ஹ்ம்ம்ம்ம்...

-நம்மூரில் மட்டும்தான் பெட்ரோல் டீசல் பிரச்சனை என்றில்லை. சீனாவிலும் இவை சகாய விலையில் அரசு நிறுவனங்களால் விற்கப்படுகின்றன. குருட்டாம் போக்கில் குருடாயில் விலை ஏறியிருக்கிறதல்லவா. அதனால் பலத்த நட்டத்தில் இயங்கிய அரசு எண்ணை நிறுவனங்களால் போதுமான அளவு டீசல் தரமுடியாததால், பல கனரக வாகனங்கள் பல எண்ணைக் கடைகளில் வெகு தொலைவிற்கு வரிசை கட்டி நின்றிருந்தன. சீனாவில் டீசல் தட்டுப்பாடா...ஆச்சரியமாயிருந்தது..யானைக்கும் அடி சருக்கும்போல.

- திரும்பும் பொழுது இரண்டு தமிழ் அன்பர்களைச் சந்திக்க நேர்ந்தது. வின்சென்ட் மனப்பாறையில் கதவு, சாளரம் போன்றவற்றில் மர வேலைப்பாடுகளைச் செய்யும் கலைஞர். 30 வயது இளைஞர். பன்னிரண்டாம் வகுப்புவரைதான் படித்திருக்கிறார். ஆனால் நவீன நுட்பங்களைப் கையாளுவதில் முன்னோடியாக இருக்கிறார். கணினிகளை பயன்படுத்துவதில் வல்லுணர். CNC இயந்திரங்களைக் கொண்டு மரவேலைகளை துரிதமாக முடிக்கும் ஒரு தொழிற்சாலையை மனப்பாறையில் தொடங்கியிருக்கிறார். மேலும் பல புதிய இரக CNC இயந்திரங்களை வாங்குவதற்காக தனியாக ஷங்காய் வந்திருந்தார். தென்னிந்தியாவில் மர வேலைகளுக்கு CNC இயந்திரங்களைப் பயன்படுத்துவதில் தான் ஒரு முன்னோடி எனத் தெரிவித்தார். அவரின் தன்னம்பிக்கையும் தொழில் முனைப்பும் என்னை ஆச்சரியப்படுத்தின. அவரது நிறுவனத்தின் வலைத்தளம் http://wood3dart.com/cus.htm

- இன்னொரு அன்பரை கோலாலம்பூர் விமான நிலையத்தில் சந்தித்தோம்(நானும் வின்சென்டும்). பெரம்பலூரைச் சேர்ந்த அவருக்கு திருமணமாகி மூன்று பெண்கள். இரண்டாண்டுகளுக்கு முன் வேலைக்காக மலேசியா வந்தவர், சட்டப்பூர்வமான வேலை கிடைக்காமலும், செய்த வேலைக்கு சம்பளம் கிடைக்காமலும் தொடர்ந்து பலரால் ஏமாற்றப் பட்டிருக்கிறார். கடைசியில் எப்படியாவது ஊருக்க வரவேண்டும் என்று கொஞ்சம் இருந்த பணத்தையும் ஒரு முகவரிடம் கொடுத்து ஒரு போலி பாஸ்போர்ட்/விசா/டிக்கெட் பெற்று இந்தியாவிற்கு திரும்பவிருந்தார். மலேசிய சோதனைகளைத் தாண்டி விமானத்தில் ஏறிவிட்டார். வழி நெடுக கவலையாகவே இருந்தவரை சென்னையில் குடியுரிமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். எனக்கு மிக வருத்தமாக இருந்தது. அவர் செய்த ஒரே பாவம் இந்தியாவில் பிறந்ததுதானோ என்று நினைத்துக் கொண்டேன். மற்ற நாடுகளில் யாரும் ஒரு நல்ல கூலி வேலை கிடைப்பதற்காக இவ்வளவு சிரமப்படுவதில்லை.

- என் வழக்கமான குட்டிப் பதிவுகளைவிட இது இரண்டு மடங்கு நீண்டு விட்டதாலும். நீளமாய் எழுதி உங்களை இம்சை படுத்த விரும்பாததாலும்(அதாவது நீளமாய் எழுதனால் நீங்கள் யாரும் படிக்கமாட்டீர்கள் என்பதாலும்) இப்போதைக்கு ஒரு "தொடரும்" என்பதோடு முடித்துக் கொள்கிறேன்.

பிகு: தொடராவிட்டாலும் "பொளந்து கட்டிவிடமாட்டீர்கள்" என்ற நம்பிக்கைதான்

Labels: ,

Wednesday, April 02, 2008

நெகிழும் சீனப் பெருஞ்சுவர்(வலைச்சுவர்)

என்ன ஆச்சரியம். சீனத்தின் வலைத்தடுப்புச்சுவர் நெகிழத் தொடங்கியிருக்கிறது. பல ஆண்டுகளாக முடக்கப்பட்டிருந்த BBC செய்தித்தளம் இப்பொழுது தெரிகிறது. சென்ற வாரம்கூட வலைப்பதிவுகளை படிக்க முடியவில்லை. blogspot மற்றும் wordpress முடக்கப்பட்டிருந்தது. அதையெல்லாவற்றையும் விட ஆச்சரியமானது விக்கியப்பீடியாவைக் கூட தடுத்திருந்தார்கள்.

நேற்றுமுதல் வலைப்பதிவுகளை படிக்க முடிந்தது. இன்று சோதித்த பொழுது விக்கிப்பீடியாவும் திறக்கிறது. தமிழ் விக்கியை விட ஆங்கில விக்கி மெதுவாக திறக்கிறது போலிருக்கிறது. எனினும் வீக்கி, வலைப்பதிவுப் பக்கங்கள் இல்லாமல் கையொடிந்திருந்தது. இப்பொழுது கொஞ்சம் மகிழ்ச்சி.

பலகாலமாக இருந்துவரும் இவ்வலைத் தணிக்கை பற்றி மக்கள் சீனத்தின் திடீர் மனமாற்றம் மிகுந்த ஆச்சரியத்தைத் தருகிறது. திபெத் போராட்டங்களால் உலக அளவில் தமது பெயருக்கு ஏற்பட்டிருக்கும் கலங்கத்தை கலைவதற்கான ஏற்பாடா? இல்லை உலக ஒலிம்பிக் சம்மேளனத்தின் இந்த வேண்டுகோளுக்கு செவி மடுத்திருக்கிறார்களா எனத்தெரியவில்லை. வலைப் பயனர்கள் வலைத்தணிக்கையை பெரும்பாலும் தொழில்நுட்பம் கொண்டு தாண்டிவிடலாம். எனவே பெரும்பாலும் அது உபயோகமற்றது என நினைத்துவிட்டார்களா. எப்படி இருப்பினும் இது ஒரு வரவேற்கவேண்டிய நடவடிக்கை. எத்தனைகாலம் இப்படியெனப் பார்க்கலாம்.

Labels: , ,

Monday, March 31, 2008

திபெத் விவகாரம்: இந்தியாவிற்கு சீனாவின் நோஸ்கட்

சமீபத்திய திபெத் ஆதரவு போராட்டங்களில் இந்தியா சீனாவிற்கு ஆதரவான நிலையை எடுத்திருந்தது. சில போராட்டங்களை தடை செய்ததுடன், ஆர்ப்பாட்டக்காரர்களையும் கைது செய்திருந்தது. இருப்பினும் சீனாவிற்கு இந்தியாவின் நிலைப்பாடும் நடவடிக்கைகளும் திருப்தி அளிக்கவில்லை போலும்.

சில முக்கிய முடிவுகளின் மூலம் இந்தியாவிற்கு தமது அதிருப்தியை தெரிவித்துள்ளது.
1) புது தில்லியில் சீன தூதரகத்தின் முன் நடந்த திபெத் போராட்டங்கள் குறித்து இந்தியாவின் சீன தூதரை வரவழைத்து தமது கண்டனங்களைத் தெரிவித்தது. வேறு நாடுகளிலும் இதுபோன்ற போராட்டங்கள் நடந்திருக்கும் நிலையில், அந்நாட்டு தூதுவர்களை இது போன்று வரவழைத்து கண்டித்ததா எனச் செய்திகள் அதிகம் வரவில்லை.
2) இந்திய-சீன வணிகத்துறை அமைச்சர்களுக்கிடையே பெய்ஜிங்கில் நடைபெறவிருந்த சந்திப்பை, தமது நாட்டு அமைச்சருக்கு தேதிகள் ஒத்து வரவில்லை எனக் காரணம்காட்டி மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்க கோரியுள்ளது. இதனால் இந்தியா லேசாக கடுப்பானது மாதிரி காட்டிக்கொண்டது.
3) திபெத் இப்பொழுது சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டது என்பதை பிரச்சாரம் செய்ய வெளிநாட்டு தூதரக அதிகாரிகளை திபெத்திற்கு சீன அரசாங்கம் அழைத்துச் சென்று சுற்றிக்காட்டியது. இதில் இந்தியா புறக்கனிக்கப்பட்டது.
4) மேலும் ஒலிம்பிக் தீபம் எடுத்துவரப்படும் பொழுது தகுந்த பாதுகாப்பு தரப்பட வேண்டும் என்றும் அப்படி பாதுகாப்பு ஏற்பாடு செய்யாவிட்டால் ஒலிம்பிக் தீப ஓட்ட பட்டியலில் இந்தியா ஒதுக்கி வைக்கப்படலாமென்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் M K நாராயணனை, அவருக்கு இணையான சீன அதிகாரி தொலைபேசியில் தொடர்புகொண்டு "இந்தியாவின் ஆதரவை கோரியதாக" செய்திகள் தெரிவிக்கின்றன. (கோரினாரா? மிரட்டினாரா? என்பது நாராயணனுக்கே வெளிச்சம்)

ஏறக்குறைய இந்திய-சீன உறவு லேசாக ஆட்டம்காணும் அளவிற்கு வந்திருக்கிறது. தமது நெடுநாளைய கொள்கைகளை கைவிட்டு, சீன ஆதரவு நிலைப்பாட்டை இந்தியா எடுத்திருக்கும் பொழுதும், சீனா இவ்வளவு குதிக்கிறது. தமது பொருளாதார, இராணுவ இயந்திரத்தின் அதிவேக வளர்ச்சியால் வந்த தைரியம். தமது பாடலுக்கு இந்தியா எவ்வளவு தூரம நடணமாட வேண்டும் என சீனா நினைக்கிறதென்று தெரியவில்லை. திபெத்தியர்கள் எல்லோரையம் கைது செய்து சீனாவிடம் ஒப்படைத்தால் போதுமா? இல்லை அவர்களை நேரடியாக இங்கேயே கழுவிலேற்றிவிட வேண்டுமா? இந்திய வெளியுறவு கொள்கை மேதாவிகளுக்கே வெளிச்சம்.

Labels: ,

Sunday, March 23, 2008

சீனப் பெருஞ்சுவர் (Not that old one, the new one..the firewall)

அலுவல் காரணமாக ஷாங்ஹாய் வந்தேன். நவ சீனாவின் மாபெரும் சுவரான அவர்களின் இணைய தடுப்புச்சுவர்(Firewall) வழக்கம்போல காரியத்தில் கண்ணாக நிற்கிறது. பிளாக்கர், வோர்ட்ப்ரெஸ் தள வலைப்பதிவுகள் எதுவும் தெரியவில்லை. ஆனால் இடுகை எழுதுவதற்கான பக்கம் திறக்கிறது.

வலைப்பதிவுகளை கொஞ்ச நாட்களுக்கு படிக்க முடியாது. அது ஒருபுறம் இருக்க, அதற்காக வருத்துப்படுவதா இல்லை மகிழ்ச்சியடைவதா என்றுதான் இப்பொழுது குழம்பிக்கொண்டிருக்கிறேன்.

Labels:

Wednesday, March 19, 2008

திபெத் போராட்டங்கள்: இந்து நாளிதழ் மீது B Raman விமர்சனம்

இராணுவம், வெளியுறவு பற்றி கருத்துப்பத்திகள் எழுதும் முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி பி இராமன் தனது வலைப்பதிவில் இந்து நாளிதழை பெயர் சொல்லாமல் மிக காட்டமாக விமர்சித்துள்ளார்.

சமீபத்திய திபெத் போராட்டங்களைப் பற்றி, இந்து நாளிதழ் "சீன அரசாங்கப் பிரச்சாரத்"தனமான செய்திகளையே வெளியிட்டு வருகிறது. இந்துவின் சீன கம்யூனிச கட்சி சார்பு எல்லோரும் அறிந்ததே. தற்போதைய அதன் போக்க ஒரு சிலருக்கு மட்டுமே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும். இந்துவை இதற்காக பலரும் விமர்சிக்கும் நிலையிலும், பி இராமனின் விமர்சனம் மிக ஆச்சரியமாக இருக்கிறது. இக்கருத்தை நேர்மையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் சொன்னதற்கு அவர் நிச்சயமாக பாராட்டப்பட வேண்டியவர்.

இன்னிலையில், இந்துவின் இலங்கை பிரச்சனை தொடர்பான செய்திகளைப்பற்றி பி இராமன் என்ன நினைக்கிறார் என்பதை அறியவும் மிக ஆவல். அக்கேள்வியை அங்கே கேட்டிருக்கிறேன்.

பி இராமனின் வலைப்பதிவு.
THE PEOPLE'S DAILY OF CHENNAI

Labels: ,

Friday, March 14, 2008

திபெத்

நம்பிக்கையே மனிதர்களின் மிக முக்கிய வாழ்வாதாரம். ஆனால், உலகின் மிகப்பெரிய பொருளாதார, இராணுவ சக்திகளுள் ஒன்றாகவும், ஒருகட்சி சர்வாதிகார அரசாகவும் உருவெடுத்துள்ள சீனாவிடம் இருந்து திபெத் விடுதலை பெறுவது என்பது எனக்கென்னவோ சாத்தியமானதாகப் படவில்லை. ஒன்றுக்கும் திறனற்ற சிங்கள அரசே தமிழர்களின் சுதந்திர தாகத்தை இவ்வளவு ஆண்டுகளாக அடக்கி வைத்திருக்கிறது.

உலகின் மிகப்பலம் பொருந்தியதும், தொழில்நுட்பத்தில் வளர்ந்ததுமான அமெரிக்க அரசின் இராணுவம்கூட சீனாவை ஒரு சம எதிரியாகப் பார்க்கிறது. திபெத்திற்கு ஆதரவாக ஒரு துரும்பை கிள்ளி எந்த நாடாவது போட்டால்கூட உடனே தாம் தூம் என்று குதித்து, பொருளாதார/வியாபார வகைகளில் மிரட்டல் விடுத்து வருகிறது சீனா. முன் திபெத்திற்கு வெளிப்படையாக ஆதரவளித்து வந்த இந்திய அரசாங்கம், சுதந்திர திபெத்தை வெளிப்படையாகவே எதிர்க்கத் தொடங்கியிருக்கிறது. காரணம் சீனாவின் இராணுவ பொருளாதார பலம்தான்.

சீனாவில் ஒலிம்பிக் நடக்கவிருப்பதை முன்னிட்டு உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக திபெத்தியர்கள் உலகெங்கும் போராடத் தொடங்கியிருக்கிறார்கள். சீன அரசிற்கெதிராக இந்தியாவிலிருந்து போராடிய திபெத்தியரை காவல்துறையினர் கைது செய்து போராட்டத்தைத் தடுத்துள்ளனர்.(இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அகிம்சை போராட்டங்களுக்கு இந்தியாவே வழிவிடவில்லை எனில், நாமெல்லாம், காந்திக்குப் பதில் மாசேதுங்கையே தேசத்தந்தையாக சொல்லிக் கொள்ளலாமோ?) திபெத் தலைநகரான லாசாவில் புத்த துறவிகளும் பொது மக்களும் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துகிறார்கள். வழக்கம் போல, சீன அரசு இராணுவ பலம் கொண்டு அமைதிப் போராட்டத்தை அடக்க முயல்கிறது. மியான்மரில் நடந்தது போல, எவ்வளவு பெரிய போராட்டமானாலும் இதை சீன இராணுவமும், அரசும் வெகு எளிதாக வெளியுலகிற்கு தெரியாமல் நசுக்கிவிடும்.

ஆனால், எல்லா வழிகளும் அடைக்கப்பட்ட பின்னரும் கொழுந்து விட்டெரியும் திபெத்தியரின் சுதந்திர வேட்கையை சீனர்கள் அவ்வளவு எளிதாக அனைத்துவிட முடியாது. எந்த நம்பிக்கைக்கும் வழியற்றபொழுதும் விடியலுக்காக நம்பிக்கை தளராமல் காத்திருப்பதுதான் மனிதனின் மகத்துவம். அதுவே திபெத்தியரின் மகத்துவமும். திபெத்திய விடுதலைப் போராளிகளே, உங்களுக்கு என்னால் முடிந்தது. "உங்களின் போராட்டத்திற்கு எனது ஆதரவுகள், வாழ்த்துக்கள்".

Labels: ,