தமிழனுக்கு உணவில்லை எனினும் சும்மா இருந்திடுவோம்
இனிமேல் சாப்பிட எதுவுமே இல்லை எனும் அவலக்குரல் கொடுக்கிறர்கள் வன்னியில் உலகத்தால் சிறை பிடிக்கப்பட்டிருக்கும் சபிக்கப்பட்ட ஏழை மக்கள். அறிக்கைத் துண்டுகளின் மூலம் கூட ஆறுதல் அளிக்கத் தவறிய இவர்களா ”ஸோற்றுப் பார்சலை” விமானம் மூலம் போடப் போகிறார்கள். கண் முன்னே நடந்து கொண்டிருக்கும் இந்த அவலத்தை எப்படி ஜீரணிப்பது என்று தெரியவில்லை. அதற்குத் தேவையில்லாமல் முத்துக்குமார் போன்ற தைரியசாலிகள் முன்னரே செத்துப் போய்விட்டார்கள். எனக்கு அந்த அளவிற்கு தைரியமும் இல்லை, வேறெதையும் செய்ய வக்குமில்லை. இனிமேல் புலம்புவதற்கு கூட அருகதை இருக்கிறதா எனத் தெரியவில்லை. என் நண்பன் ஒருவன் அதைச் சுட்டிக்காட்டினான். “நீ இதைப்பற்றி பேசி என்ன கிழித்தாய்” என்று. அவன் சொல்வதும் சரிதானே.
----
என் சிற்றறிவிற்கு எட்டிய எந்த சித்தாந்தங்களின் மீதும் திடமான நம்பிக்கை எனக்கு இல்லை(மதங்களிலிருந்து, கம்யூனிசம் வரை). தனிப்பட்ட முறையில் இந்த உலகத்தையும் சமூகத்தையும் அதில் என்னுடைய இடத்தையும் நான் ஒரு விதத்தில் புரிந்து கொண்டிருந்தேன். அந்த புரிதலின் அடிப்படையில் ”எனக்கு நேர்மையாக நான் நடந்து கொள்ளவேண்டும்” என்பதே எனது கொள்கை. அதுதான் எனது சரிகளையும், தவறுகளையும் தீர்மானித்தது. யாருக்கும்(விலங்குகளுக்குக் கூட) நம்மால் துன்பம் விளையக்கூடாது என்பதற்காக அசைவம் சாப்பிடுவதை தவிர்த்தது மட்டுமல்லாமல்; பால், முட்டை மற்றும் தோல் பொருட்கள் போன்ற விலங்குப் பொருட்களைக்கூட தவிர்த்து வருகிறேன். குளோபல் வார்மிங்கிற்கு நான் பங்களிக்கக் கூடாது என்பதற்காக கொஞ்ச நாள் சைக்கிள் ஓட்டினேன்(பின்னர் சவுகரியப் படாததால், கொள்கைச் சமரம் செய்துகொண்டு தானுந்திக்கு மாறிவிட்டேன் என்பது வேறு விசயம்). ஆனால் இதுபோன்ற கொள்கைச் சூரத்தனங்கள் எல்லாம் இப்போது பைத்தியக்காரத் தனமாகத் தோன்றுகிறது. சமூகம் மற்றும் சமூகத்தில் என் இடம் பற்றிய எனது கேள்விகளும் எனது புரிதல்களும் கூட பைத்தியக்காரத் தனமாகத்தான் தோன்றுகிறது.
பிகு: தற்போது, குளோபல் வார்மிங் சீக்கிரம் வந்து உலகம் முழுவதையும் இப்போதே கபளீகரம் செய்து விடாதா என லேசாக ஒரு ஆசை அவ்வப்போது எட்டிப்பார்க்கிறது என்பதையும் நேர்மையுடன் ஒத்துக் கொள்கிறேன்.
----
தேர்தல் என்ற ஒரு மயிரு நடந்து கொண்டிருக்கிறது. ஈழத்தில் நடப்பது போலத்தான் இதுவும். கண்ணெதிரே நடக்கும் கேனத்தனங்களை ஒன்றும் செய்ய முடியாமல் ஒரத்தில் நின்று புலம்ப மட்டுமே முடிகிறது. இவர்கள் எல்லாம் ஓட்டுப் பொறுக்கிகள் என்று தெரியும் ஆனால் தமிழர்களின் குருதி நிரம்பிய குளத்தில் இறங்கி ஓட்டு பிடித்து விளையாடுவார்கள் என்று நான் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. அரசியல்வாதிகள்தான் இப்படி என்றால், சாமான்ய மக்களிடம் பேசினால் பித்தே பிடித்துவிடுகிறது. காவேரி டெல்டா பகுதிகளில் ஈழத்திற்கு ஆழமான ஆதரவு என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். தமிழர்கள் சாவதைப் பார்த்துவிட்டு ஓட்டுக்கேட்டு வருபவர்களை செருப்பால் அடிப்பார்கள் என்று நினைத்தேன். கூச்சமே இல்லாமல் எல்லோரும் திமுக கொடியை பைக்கில் கட்டிக்கொண்டு ஜாலி பன்னிக் கொண்டிருக்கிறார்கள்(பைக்கில் கொடியுடன் மாஸ் காட்டினால் இருநூறோ ஐநூறோ தருகிறார்களாம்).
மக்களிடம் தேர்தல் பற்றி கேட்டால், “அந்த ஊர்ல TV கொடுத்துட்டய்ங்க அவங்க எல்லாம் திமுகவுக்குத்தான் ஓட்டு போடுவாய்ங்க. எங்க ஊர்ல இன்னும் TV கொடுக்கல அதனால அம்மா கூட்டணிக்குத்தான் ஓட்டு போடுவாய்ங்க” என்று சர்வ சாதரணமாக அரசியல் சமன்பாட்டை விளக்குகிறார்கள். ஈழம் பற்றிய தெரிதலும் சுத்தமாக இல்லை, புரிதலும் சுத்தமாக இல்லை.
----
பாராளுமன்றத் தேர்தலில் ஒரு தமிழர் நலக்கூட்டணி அமைய முயற்சிக்கவும், அப்படி அமையும் கூட்டணிக்கு பிரச்சாரம் செய்யவும் http://voteforeelam.in என்ற தள முகவரியையும், PHP/MySQl வசதியுடன் கூடிய serverக்கும் பணம் கட்டி பதிந்து வைத்திருந்தேன். பின்னர் நடந்த நாடங்களைக் கண்டு மனதுடைந்ததில் அதை அப்படியே விட்டு விட்டேன். யாருக்காவது அந்த தளத்தை அமைத்து எழுது விருப்பம் இருந்தால் தெரிவிக்கவும். அதற்கான உரிமையயையும், எனது சோகங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.










