ஜேகேவின் சில குறிப்புகள்

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Wednesday, May 20, 2009

இருத்தலெனும் சாபம்

மரணங்களின் நிழல்கள்
கட்டி இழுக்கின்றன
என் கால்களை
படுகொலையின் ஓலங்கள்
தேடியலைகின்றன செவிப்பறைகளை
ஊடக வாய்க்கால்களில் ஓடும்
தேசியச் சாக்கடைகள் தெறிக்கின்றன
மனிதத்தின் முகத்தில்
எனக்கும் ஆசைதான்
அப்பழுக்கற்ற இருத்தலைத் தேடுவதில்
ஆனால் இன்றெனக்கு
இருப்பதற்கு பொருமையில்லை
இருக்கவும் தெரியவில்லை
பெருவெளியை நிறைத்திருக்கும் விசும்பில்
சாவின் சுவடுகளில் படிந்திருக்கும்
துரோகப் புண்களில் வடியும்
சீழ் துடைக்க
என்னிடம் இல்லை
மயிலிறகோ, விரல்களோ, கரங்களோ
கோபங்கள் என்னைச்
சிறிது சிறிதாக சிதைக்கின்றன
கவிதைச் சுயமைதுனம் செய்து
காயங்களில் களிம்பு தடவுகிறேன்
எல்லாம் குமட்டுகிறது
இக் கவிதை உட்பட

Labels: , ,

இதுவும் ஊரா இவரும் மனிதரா

யாதும் ஊரே யாவரும் கேளிர்
இதுவும் ஊரா இவரும் மனிதரா
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னா தென்றலும் இலமே - மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

Labels: ,

Monday, May 04, 2009

தமிழனுக்கு உணவில்லை எனினும் சும்மா இருந்திடுவோம்

இனிமேல் சாப்பிட எதுவுமே இல்லை எனும் அவலக்குரல் கொடுக்கிறர்கள் வன்னியில் உலகத்தால் சிறை பிடிக்கப்பட்டிருக்கும் சபிக்கப்பட்ட ஏழை மக்கள். அறிக்கைத் துண்டுகளின் மூலம் கூட ஆறுதல் அளிக்கத் தவறிய இவர்களா ”ஸோற்றுப் பார்சலை” விமானம் மூலம் போடப் போகிறார்கள். கண் முன்னே நடந்து கொண்டிருக்கும் இந்த அவலத்தை எப்படி ஜீரணிப்பது என்று தெரியவில்லை. அதற்குத் தேவையில்லாமல் முத்துக்குமார் போன்ற தைரியசாலிகள் முன்னரே செத்துப் போய்விட்டார்கள். எனக்கு அந்த அளவிற்கு தைரியமும் இல்லை, வேறெதையும் செய்ய வக்குமில்லை. இனிமேல் புலம்புவதற்கு கூட அருகதை இருக்கிறதா எனத் தெரியவில்லை. என் நண்பன் ஒருவன் அதைச் சுட்டிக்காட்டினான். “நீ இதைப்பற்றி பேசி என்ன கிழித்தாய்” என்று. அவன் சொல்வதும் சரிதானே.
----
என் சிற்றறிவிற்கு எட்டிய எந்த சித்தாந்தங்களின் மீதும் திடமான நம்பிக்கை எனக்கு இல்லை(மதங்களிலிருந்து, கம்யூனிசம் வரை). தனிப்பட்ட முறையில் இந்த உலகத்தையும் சமூகத்தையும் அதில் என்னுடைய இடத்தையும் நான் ஒரு விதத்தில் புரிந்து கொண்டிருந்தேன். அந்த புரிதலின் அடிப்படையில் ”எனக்கு நேர்மையாக நான் நடந்து கொள்ளவேண்டும்” என்பதே எனது கொள்கை. அதுதான் எனது சரிகளையும், தவறுகளையும் தீர்மானித்தது. யாருக்கும்(விலங்குகளுக்குக் கூட) நம்மால் துன்பம் விளையக்கூடாது என்பதற்காக அசைவம் சாப்பிடுவதை தவிர்த்தது மட்டுமல்லாமல்; பால், முட்டை மற்றும் தோல் பொருட்கள் போன்ற விலங்குப் பொருட்களைக்கூட தவிர்த்து வருகிறேன். குளோபல் வார்மிங்கிற்கு நான் பங்களிக்கக் கூடாது என்பதற்காக கொஞ்ச நாள் சைக்கிள் ஓட்டினேன்(பின்னர் சவுகரியப் படாததால், கொள்கைச் சமரம் செய்துகொண்டு தானுந்திக்கு மாறிவிட்டேன் என்பது வேறு விசயம்). ஆனால் இதுபோன்ற கொள்கைச் சூரத்தனங்கள் எல்லாம் இப்போது பைத்தியக்காரத் தனமாகத் தோன்றுகிறது. சமூகம் மற்றும் சமூகத்தில் என் இடம் பற்றிய எனது கேள்விகளும் எனது புரிதல்களும் கூட பைத்தியக்காரத் தனமாகத்தான் தோன்றுகிறது.

பிகு: தற்போது, குளோபல் வார்மிங் சீக்கிரம் வந்து உலகம் முழுவதையும் இப்போதே கபளீகரம் செய்து விடாதா என லேசாக ஒரு ஆசை அவ்வப்போது எட்டிப்பார்க்கிறது என்பதையும் நேர்மையுடன் ஒத்துக் கொள்கிறேன்.
----
தேர்தல் என்ற ஒரு மயிரு நடந்து கொண்டிருக்கிறது. ஈழத்தில் நடப்பது போலத்தான் இதுவும். கண்ணெதிரே நடக்கும் கேனத்தனங்களை ஒன்றும் செய்ய முடியாமல் ஒரத்தில் நின்று புலம்ப மட்டுமே முடிகிறது. இவர்கள் எல்லாம் ஓட்டுப் பொறுக்கிகள் என்று தெரியும் ஆனால் தமிழர்களின் குருதி நிரம்பிய குளத்தில் இறங்கி ஓட்டு பிடித்து விளையாடுவார்கள் என்று நான் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. அரசியல்வாதிகள்தான் இப்படி என்றால், சாமான்ய மக்களிடம் பேசினால் பித்தே பிடித்துவிடுகிறது. காவேரி டெல்டா பகுதிகளில் ஈழத்திற்கு ஆழமான ஆதரவு என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். தமிழர்கள் சாவதைப் பார்த்துவிட்டு ஓட்டுக்கேட்டு வருபவர்களை செருப்பால் அடிப்பார்கள் என்று நினைத்தேன். கூச்சமே இல்லாமல் எல்லோரும் திமுக கொடியை பைக்கில் கட்டிக்கொண்டு ஜாலி பன்னிக் கொண்டிருக்கிறார்கள்(பைக்கில் கொடியுடன் மாஸ் காட்டினால் இருநூறோ ஐநூறோ தருகிறார்களாம்).

மக்களிடம் தேர்தல் பற்றி கேட்டால், “அந்த ஊர்ல TV கொடுத்துட்டய்ங்க அவங்க எல்லாம் திமுகவுக்குத்தான் ஓட்டு போடுவாய்ங்க. எங்க ஊர்ல இன்னும் TV கொடுக்கல அதனால அம்மா கூட்டணிக்குத்தான் ஓட்டு போடுவாய்ங்க” என்று சர்வ சாதரணமாக அரசியல் சமன்பாட்டை விளக்குகிறார்கள். ஈழம் பற்றிய தெரிதலும் சுத்தமாக இல்லை, புரிதலும் சுத்தமாக இல்லை.
----
பாராளுமன்றத் தேர்தலில் ஒரு தமிழர் நலக்கூட்டணி அமைய முயற்சிக்கவும், அப்படி அமையும் கூட்டணிக்கு பிரச்சாரம் செய்யவும் http://voteforeelam.in என்ற தள முகவரியையும், PHP/MySQl வசதியுடன் கூடிய serverக்கும் பணம் கட்டி பதிந்து வைத்திருந்தேன். பின்னர் நடந்த நாடங்களைக் கண்டு மனதுடைந்ததில் அதை அப்படியே விட்டு விட்டேன். யாருக்காவது அந்த தளத்தை அமைத்து எழுது விருப்பம் இருந்தால் தெரிவிக்கவும். அதற்கான உரிமையயையும், எனது சோகங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.

Labels: , ,

Thursday, April 30, 2009

தமிழனாக இருப்பதை விட எருமையாக இருப்பதின் நன்மைகள்



நன்றி:
அனாதை ஆனந்தன்
NegativeSpace Media

Labels: ,

Monday, January 26, 2009

மீதமிருக்கும் தமிழர்களை சீக்கிரம் கொன்று விடுங்கள்

”தமிழகத்தில் அழுத்தம் அதிகமாகிக் கொண்டிருகிறது. மக்களின் போராட்டம் உக்கிரமாகிக் கொண்டிருக்கிறது. நான் இன்னும் 20 நாள் கெடு வாங்கியிருக்கிறேன். பின்னர் பொதுக்குழு தனிக்குழு என்று ஒரு பத்து நாட்களை ஓட்டிவிடலாம். அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது. இந்த 30 நாட்களுக்குள் நாளைக்கு 1000 வீதம் மீதமிருப்பவர்களில் 30,000 பேரை போட்டுவிடுங்கள். அதற்கப்பறம் ஒன்றும் பிசகாகது. பயங்கரவாதத்தை வென்று பின் “மக்களை காக்க” போர் நிறுத்தத்தை அறிவித்ததற்காக, "அமைதி விரும்பும் அதிபராக" உங்களையும், போர் நிறுத்தத்தை மத்தியரசிடம் கடுமையாக பேசி பெற்றதற்காக ”தமிழர்களின் நிரந்தரக் காவலனாக” என்னையும் இந்த உலகமென்ன அந்த பிரபஞ்சமே பாராட்டும்”

More than 300 civilians feared killed, people bleed to death on streets

கொலைப் பொறியாகும் "பாதுகாப்பு வலயம்"; வன்னி மக்களைச் சிக்க வைத்து சிறிலங்கா படையினர் அகோர பீரங்கித் தாக்குதல்: 60 வரையானோர் பலி; 200 பேர் வரை படுகாயம்

என்னையா நடக்குது இங்க...நீங்கல்லாம் என்னத்த திங்கிறீங்க..தூ தூ....

Labels: , ,

Friday, January 02, 2009

கிளிநொச்சி வீழ்ந்தது! What the Fuck!

நானொன்றும் விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளன் இல்லை. ஆனால் குழந்தைக்கு கூட புரியும் புலிகளை ஒழித்த பின் சிங்கள அரசாங்கம் யாரிடம் சமாதனம் பேசப்போகிறார்கள் என்று. ஒன்று இரண்டாம்தர குடிமகனாக இருக்க ஒத்துக்கொள் இல்லை போரில் எந்த நாதியும் இல்லாமல்மடி என்று ஏன் ஒரு தலைவிதி இவர்களுக்கு. தமிழர்களாய்ப் பிறந்ததாலா?

பிரபாகரன் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று அவருக்குத்தான் வெளிச்சம். தமிழர்களுக்கு ஈழம், ஈழம், இறுதிப்போர் என்று ஆசைகாட்டிவிட்டு இப்படி ஒரு அழிவில் போர் முடிந்ததென்றால் பிரபாகரனின் துரோகம்தான் எல்லாவற்றையும் விட பெரிதாக இருக்கும். எத்தனை பேர் தமது உயிரை இவரது கையில் கேள்வி கேட்காமல் கொடுத்தார்கள்....

பதவி சுகத்திற்காக இடுப்பில் இருக்கும் வேட்டியையும் அவிழ்த்துத் தர முதலில் நிற்பார் போல இருக்கிறது நமது தமிழினக் காவலர். தூ....இப்படியும் ஒரு பிழைப்பு...

ஆனால் பாருங்கள் அந்த பதவிக்கே வேட்டு வரப்போகிறது. காங்கிரசையும், மத்திய பதவியையும் இப்போதும் உதற மறுத்தால், திமுகவிற்கு வரலாறு காணாத தோல்வி கிடைக்கும் என்பது உறுதி....

கலைஞரே(இதுவே கடைசி முறை இவரை கலைஞர் என்று அழைக்கப்போவது)...இந்த சமயத்திலும் நீங்கள் தீர்க்கமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதை மன்னிக்கவே முடியாது. திமுக தமிழகத்தில் ஆழ குழிதோண்டி புதைக்கப் படும். மக்கள் கொதிப்பதின் வெப்பம் உங்களுக்கு மட்டும் எப்படி சுடாமல் இருக்கிறது.... பதவி துண்டென்று நீங்கள் தானே சொன்னீர்கள். வேட்டி அவிழ்கிறது இனம் அழிகிறது இனியும் தேவையா இந்த மானங்கெட்ட துண்டு...

Labels: , ,

Sunday, August 03, 2008

சோளகர் தொட்டி: வதையின் கதை

ச. பாலமுருகனின் இந்த நாவல் அன்மையில் படித்தவற்றில் என்னில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய ஒன்று. சமூக, கலாச்சார, அரசியல் ஏகாதிபத்தியத்தால் நாம் பாதிக்கப் பட்டவர்கள் மட்டுமல்ல, அந்த குற்றத்தை செய்தவர்களும் கூட என்பதை வருத்தத்துடன் உணரச் செய்கிறது இப்புதினம். "என் பெயராலும் இப்படி ஒரு அரச வன்முறை நிகழ்ந்திருக்கிறது" என நினைக்கும் பொழுது கூனிக் குறுக வேண்டியிருக்கிறது.

தமிழக-கர்நாடக வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் சோளகர். அவர்கள் வசிக்கும் தொட்டிகளில் ஒன்றே சோளகர் தொட்டி. வனத்தை "ஜடைசாமியாகவும், மாதேஸ்வரன் சாமியாகவும்" தெய்வங்களாக வணங்கி நீதிக்கும் நியாத்திற்கும் அந்தக் கடவுள்களை மட்டுமே எதிர்ந்நோக்கியிருக்கும் ஒரு அப்பாவித்தனம் மிக்க கூட்டம். அவர்கள் "வீரப்பன் வேட்டையில்" சிக்கி எப்படி சீரழிக்கப் பட்டார்கள் என்பதை மிக எளிமையான, அதே சமயம் வலி மிகுந்த நடையில் புதினமாகத் தீட்டியிருக்கிறார் பால முருகன். புதினம் உண்மை நிகழ்வுகளின் பின்னனியில் எழுதப்படும் பொழுது அவை பல பரிமாணங்களை எடுக்கின்றன. இதுவும் அது போலவே.

முதல் பாதியில் சோளகர்களின் சமூக வாழ்க்கை முறை கதைப்போக்கில் சொல்லப் படுகிறது. சோளகர்களின் சமூக கட்டமைப்புகள் சமகால தமிழர்களினதைவிட முன்னேறியதாக உள்ளது. திருமணங்கள் புனிதமாக கருதப்பட்டாலும், விதவைகள் மறுமணம் அங்கீகரிக்கப் படுகிறது. திருமணங்களுக்கு அப்பால் உறவு ஏற்படும் பொழுது, அவையும் எல்லோருக்கும் நியாயம் கிடைக்கும்படியான தீர்வுடன் அங்கீகரிக்கப்படுகிறது. போதைப்பொருள் பழகுவதை தனிநபர்களின் விருப்புகளுக்கு விட்டுவிடுகிறார்கள். கஞ்சா புகைத்தல் கதையில் ஒரு பாத்திரமாகவே வருகிறது.
பாலப்படுகை தொட்டியில் மாதியுடன் சிவண்ணா தங்கிவிட்டது எல்லோருக்கும் தெரிந்த நிகழ்வாயிருந்தது. ஆனாலும், ஜவணன் அக்கறையற்றே அரசமரத்தடியில் கஞ்சா புகைத்துக் கிடந்தான். தொட்டியில் சிலர் அவனை உசுப்பிவிட, அவன் பாலப்படுகைக் கொத்தல்லியிடம் அவனது மனைவி நடத்தை பிடிக்கவில்லை. அவள் வேறு ஆடனுடன் சேர்ந்துவிட்டாள். எனவே, பரிசப்பணம் ரூபாய் ஐநூறும், தாலியும் வேண்டுமென்று நியாயம் வைத்து விட்டான்.

அந்த தொட்டியில் நியாயத்தைப் பேச தொட்டியினர் வந்திருந்த சமயம் மாதி எவ்விதத் தயக்கமுமின்றி அவளது தாலியைக் கழட்டி ஒரு வெற்றிலையில் வைத்து அவள் கணவன் ஜவணனிடம் கொடுத்துவிடும்படி பட்டக்காரனிடம் ஒப்படைத்தாள்.

ஜவணன் பரிசப்பணம் வேண்டுமென்றபோது, அவனைத் திருமண நாளிலிருந்து பராமரித்து வந்ததால் அதனைத் தர இயலாது என்று கூறினாள். அதையும் பட்டக்காரன் ஏற்றுக் கொண்டு சிவண்ணாவிடம், "மாதியையும், அவள் மகள் சித்தியையும் வைத்துக் காப்பாற்றுவாயா?” எனக் கேட்டான். சிவண்ணா அந்த தொட்டியின் மண் மீது அடித்துச் சத்தியம் செய்தான்.

அத்துடன் தொட்டியின் கூட்டம் முடிவுக்கு வந்தது.

அடுத்த நாள் மதிய வேளையில் சிவண்ணா, மாதி, சித்தி இருவருடனும், மாதி மூட்டை கட்டி வைத்திருந்த சில வீட்டுச் சாமான்களுடனும் தன் சோளக தொட்டிக்கு வந்து சேர்ந்தான். உடனடியாக தொட்டியின் கொத்தல்லிக் கிழவனைப் போய்ப் பார்த்தான். அந்த தொட்டியில் சிவண்ணாவுடன் மாதியும், சித்தியும் வாழ ஒரு படியில் ராகியை வைத்துக் கொண்டு அனுமதி கோரினான்.

கொத்தல்லி பிரச்சனை ஒரு நிலைக்கு மேல் ஓடிக் கொண்டிருப்பதைக் கண்டு வேறு ஏதுவும் பேசாமல்,

“உன் மனைவி சின்னதாயியும், மகன் ரேசண் வந்தால் என்ன சொல்வது? அதற்கு ஒரு வழி செய்திருக்கலாம்" என்றான்.

“இவளையும் இவள் மகளையும் பாலப்படுகையிலிருந்து அழைத்து வந்து விட்டேன். இவர்களுக்கு இனி என்னை விட்டால் வேறு யாருமில்லை. எனக்கும் அப்படித்தான். ஒரு வேளை இங்கே வந்து, சின்னத்தாயி இவளுடன் ஒற்றுமையாக வாழ நினைத்தால், எனக்குத் தடையில்லை. வேறு எதுவும் என்னால் முடியாது" என்றான் சிவண்ணா.

“உன் தாய் ஜோகம்மாவிடமாவது ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். அவள் என்ன நினைக்கிறாள்...” என்று கொத்தல்லி இழுத்தான்.

“அவளுக்கு இதில் தலையிட எதுவுமில்லை. எனக்கு வேறு வழியுமில்லை. எங்களுக்கு அனுமதி கொடுங்கள்" என்றான்.

கொத்தல்லி படி ராகியைப் பெற்றுக் கொண்டு,

“யார் விருப்பத்தையும் யாரும் தடுக்க முடியாதப்பா. ஆனா ஊருக்கு ஒரு நாள் நீங்க விருந்து வச்சிடுங்க" எனக்கூறி சம்மதித்தான்.


அதே சமயத்தில் சாதி ஏற்றத்தாழ்வுகள் நமது சமூகத்தின் ஜீன்களில் எந்த அளவிற்கு தீர்க்கமாக கலந்துவிட்டது என்பதை ஒரு சோளகப் பெண் ஒரு கீழ் நாட்டு இளைஞனை காதலித்து திருமணம் செய்து கொள்ளும் பொழுது அவளது குடும்பத்தினரின் எடுக்கும் நிலைப்பாட்டில் ஆசிரியர் காண்பிக்கிறார்.

....ரதி கூட, ஜோகம்மாளுக்கு ஆதரவாய் இருக்க சீர்கட்டில் கூலி வேலைக்குச் சென்று வந்து கொண்டிருந்தாள். அந்த சமயம், சீர்காட்டில் உழவு டிரேக்டர் ஓட்ட கோத்தகிரியிலிருந்து வந்திருந்த சேகரன் என்பவனுடன் அவளுக்கு நட்பு ஏற்பட்டது. இருவரும் பல இடங்களில் மறைவாய்ச் சந்தித்துக் கொண்டார்கள்.

....

ஜோகம்மாள் தனது மகளைப் பற்றி அறிந்து கலங்கி கொத்தல்லியிடன் சென்று, நல்ல சோளகனாய் ஒருத்தனை தனது வீட்டிற்கு சீக்கிரம் விதை தானியம் கேட்டு தன் மகளைப் பெண்பார்க்க கூட்டி வரச் சொல்லி இருந்தாள். அவன் சீக்கிரம் ஏற்பாடு செய்வதாகக் கூறினான். இந்த பேச்சு நடைபெற்ற அடுத்த வாரத்திலேயே அதிகாலை நேரத்தில் ரதி டிரேக்டர் ஓட்டும் சேகரனுடன் சோளகர் தொட்டியை விட்டு யாரும் அறியாமல் ஓடிப்போய் விட்டிருந்தாள்.

அதனால், ஜோகம்மாள் மிகுந்த வேதனையடைந்து தனது மகள் தன் குலத்தின் பெருமையைப் பாழ்படுத்தி விட்டதாகப் புலம்பி வந்தாள். ஆனாலும், சேகரன், ரதிக்கு ஏற்ற பையன்தான் என்றும் மனதிற்குள் கூறிக் கொண்டாள். இரண்டு வாரங்களுக்குப் பின் சேகரனின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து கோத்தகிரி சென்றான் ஜடையன். அங்கே சென்று சேகரன் செருப்பு தைக்கும் சாதியைச் சேர்ந்தவன் என்று அறிந்ததும், அதனை தொட்டியில் வெளிப்படுத்தினால், மற்ற சோளகர்கள் தனது குடும்பத்தை இழி பார்வை பார்த்துவிடுவார்கள் என்று எண்ணினான். இதையெல்லாம் மனதில் கொண்டு அவன் தங்கையிடம் அழுதும், மிரட்டியும் பலவகைகளில் எப்படியாவது அவளைப் பிரித்து தொட்டிக்கு அழைத்துக் கொண்டு போக முயற்சித்தான். ஆனால் சேகரனைப் பிரிந்து வரமுடியாது எனத் திட்டமாகக்கூறி அவனை அனுப்பினாள் ரதி.

ஜடையன் நடந்தவற்றையும் தனது மைத்துனனாக வந்தவனின் சாதியையும் ஜோகம்மாளிடம் கூறினான். அவள் அதை தொட்டிக்கு வெளிப்படுத்தி விடாதே என்று அவனை எச்சரித்தாள்.


-------

புதினத்தின் பின் பகுதியில் வீரப்பன் சந்தன கட்டை வெட்டுவதுடனும், யானைகளை வேட்டையாடுவதுடனும் கதை சூடு பிடிக்கிறது. வீரப்பனை தேடும் அதிரடிப்படையினர் வருகையால் சிறிது சிறிதாக சோளகர் வாழ்வு சீரழியத் தொடங்குகிறது. சோளகர்கள் வீரப்பனுக்கு உதவுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுடன் பலர் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு முகாம்களில் எந்த சட்டப் பரிகாரமும் இல்லாமல் அடைத்து வைக்கப் படுகிறார்கள். விசாரணை என்ற பெயரில் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என எல்லோரும் கடுமையாக வதைக்கப்படுகிறார்கள்.

கதையில் காட்டப் பட்டுள்ள சோளகர்களின் மீது, நமது அரசு, அதிரடிப்படையினர் மூலம், கட்டவிழ்த்து விட்ட வன்முறை உலகின் வேறெந்த பகுதியிலும் நடக்கும் மனித உரிமை மீறல்களையும் விஞ்சி விடுவதாகவே உள்ளன. கதையின் அந்த பகுதிகளைப் படிக்கும் பொழுது சோகம் நிரம்பிய அதீதமான குற்ற உணர்வு நம்மைச் சூழ்ந்து கொள்கிறது. DJவின் வலைப்பதிவில் அந்த வதைமுறைகள் பற்றிய புதினத்தின் சில பகுதிகளை படிக்கலாம்.

சோளகர்களை சித்திரவதைப்படுத்துவதில் அதிக பங்கு கர்நாடக அதிரடிப்படையினருக்கே இருப்பது போன்று கதையில் காண்பிக்கப்பட்டுள்ளதாகத் தோன்றியது.. மாதியும் அவளது மகள் சித்தியும் கர்நாடக வனப்பகுதியில் இருந்தே கைது செய்யப்படுகின்றனர். அவர்களை வைத்திருந்த முகாமில்தான் பெரும்பான்மையான் வதைக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. உண்மையில் இப்படிதான் நடந்ததா அல்லது கதையில் எதேச்சையாக இப்படி அமைந்து விட்டதா எனத் தெரியவில்லை.

வீரப்பன் என்கவண்டரில் கொல்லப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. வீர தீரங்களுக்காக பல பதக்கங்கள் அளிக்கப்பட்டன. எல்லாம் சுபம். ஆனால், இந்த வேட்டையில் இடையில் மாட்டிக் கொண்டு சீரழிந்த அப்பாவிகளின் நிலைதான் இன்னும் பரிதாபமாக உள்ளது.

இந்த சமயத்தில் நடந்த பல மனித உரிமை மீறல்களை விசாரிக்க தேசிய மனித உரிமை அமைப்பு "சதாசிவம் விசாரணை கமிசன்" அமைத்தது. அந்த விசாரணைக் கமிசன் பல உரிமை மீறல்களை விசாரித்து ஆவணப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டிருந்தது.

ஆனால் அதன் அறிக்கையின் மீது இதுவரை அரசாங்கங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ( இது பற்றி அண்மைச் செய்திகள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்). இது பற்றிய பாலமுருகனின் கட்டுரை - வீரப்பன் தேடுதல் வேட்டை: அவலத்திற்குத் தீர்வு என்ன?. இன்னொரு கட்டுரை - சாதாசிவம் கமிஷன் அறிக்கையும் காலதாமதமாகும் நிவாரணமும். தீரா நதியில் அ. மார்க்ஸ் எழுதிய கட்டுரையின் பிரதி, தீவு அவர்களின் பதிவில் பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’ நாவலைப்படித்ததால் ஏற்பட்ட பதட்டம் அது. பாதிக்கப்பட்டவர்கள் மறுவாழ்வும், உதவியும் நீதியும் பெறும் வரை நாமெல்லாம் குற்றவாளிகள்தான்.

Labels: ,

Sunday, July 27, 2008

"பயம்"கரவாதம்

பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியது. அஹமதாபாத் தொடர் வெடிப்பு மிகுந்த பீதியை உண்டாக்கியது. சென்னையில்கூட இரயில் நிலையங்கள், பேரூந்து நிலையங்கள், வலிபாட்டுத்தலங்கள், திரையரங்கங்கள், பூங்காக்கள், கடற்கரைகள், வணிக வளாககங்கள், பெரிய தொழில் நிறுவனங்கள் என எல்லா இடங்களிலும் அச்சுறுத்தல் இருக்கலாம் என தமிழக உயர் போலீஸ் அதிகாரி தெரிவிக்கிறார்.

என் வீட்டில் தொலைக்காட்சி இல்லை. நண்பரின் வீட்டிற்கு சென்றபொழுது முழு நேரச் செய்தி சானல்களில் முழு நேரச் செய்தியாக தொடர் வெடிப்பு ஆகிப்போயிருந்தது, எரிகின்ற பீதியில் எண்ணையை ஊற்றுவதாக இருந்தது. இந்த வன்முறைகளை முற்றிலும் கண்டிக்கிறேன். அதில் மாற்றுக் கருத்திற்கு இடமேயில்லை. இந்த நிகழ்வுகளில் உயிரிழந்தவர்களும், காயமுற்றவர்களும் என்ன பாவம் செய்தார்கள். அவர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எவ்வளவு பெரிய இழப்பாக இருக்கும் என்பதை வெறும் எண்ணிக்கைகளை பார்த்து சொல்லவே முடியாது. "பாதிக்கப்பட்டவர்கள் நாமாயிருந்தால்!" என்றெண்ணும் போது ஏற்படும் கிலியே அதை நமக்கு உணர்த்தும். பாதிக்கப் பட்டவர்களுக்கு நமது ஆறுதல்களும், அனுதாபங்களும்.

அதே சமயத்தில், நாம் வாழும் இந்த சம காலத்தில், தனி மனிதராக இது போன்ற நிகழ்வுகளுக்காக நம்மை எப்படி தயார்செய்து கொள்வது(அதீதமாக பீதியடைவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் என்றெனக்கு தெரியவில்லை) என சிந்திக்கும் பொழுது நாம் தேவைக்கதிகமாக எதிர்வினை செய்கிறோமோ என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. அது போன்ற எதிர்வினை ஏற்படுத்துவதற்கு ஊடகங்களே முக்கிய காரணம்.

தொடர் வெடிப்பு பற்றிய செய்திகளை திரும்பத் திரும்ப முன்னிலைப்படுத்துவதைப் பார்க்கும் எந்த நபரும் மிக விரைவாக முன்முடிவுகளுக்கு வருவது தவிர்க்க முடியாதது. பெரும்பாலான குண்டுவெடிப்புகளுக்கு இசுலாமிய தீவிரவாதம் காரணமாக இருப்பதால், மக்களின் கோபம் பொதுப்படையாக இசுலாமியருக்கு எதிராக வெளிப்படுகிறது. அது ஒரு முடிவற்ற சுழற்சியில் கொண்டு போய்விடும். இருபக்கங்களிலும் உள்ள தீவிர வலதுசாரிகளால் அது எளிதில் அரசியலாக்கப் படுகிறது. அவர்களது அரசியலுக்கு சிறந்த ஊக்க மருந்தல்லவா இது?

  • கோத்ரா-இந்து பயங்கர வாதிகளுக்கு ஆயுதம்.
  • குஜராத் படுகொலைகள்-இசுலாமிய பயங்கர வாதிகளுக்கு ஆயுதம்.

மக்களின் பயத்தையும், அதன் மூலம் மாற்று மதத்தினருக்கெதிரான கோபத்தை துண்டிவிடுவதிலும் ஊடகங்கள் தெரிந்தோ தெரியாமலோ பங்காற்றுகின்றன. இந்தியாவில் உள்ள பலவிதமான பயங்கரவாதங்களினால் என் உயிருக்கு தனிப்பட்ட முறையில் எந்த அளவிற்கு பாதிப்பு என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. இணையத்தில் காணக்கிடைக்கும் சில தகவல்களை வைத்து தோராயமாக ஒரு கணக்குப் போட்டேன்.

எச்சரிக்கை: கீழ்காணும் அட்டவனையில் காணப்படும் தகவல்கள் தோராயமானவையே.



பயங்கரவாத தாக்குதலினால் ஒருவர் பாதிக்கப் படுவதற்கான நிகழ்தகவைவிட, சாலை விபத்தில் பாதிக்கப் படுவதற்கான நிகழ்தகவு பல மடங்குகள் அதிகம். நாம் பயப்படுவதாக இருந்தால் சாலை விபத்தைப் பற்றியே அதிகம் பயப்படவேண்டும்.

பிகு 1: நீங்கள் இந்த பதிவு தவறான நேரத்தில் பதியப்பட்டுள்ளது என எண்ணலாம். இத்தனை பேர் இறந்துள்ள நிலையில், மேலும் அச்சுறுத்தல் உள்ள நிலையில் இது தேவையா என நினைக்கலாம். முன்னர் குறிப்பிட்டது போல பாதிக்கப்பட்டவர்களின் துயரம் மிகப் பெரியது. அவற்றை வெறும் எண்ணிக்கைகளாக குறைக்க முடியவே முடியாது. அதே சமயத்தில் மக்கள் ஊடகங்களினால் அதிக அளவிற்கு பயமுறுத்தப்படுகிறார்கள். இது ஒரு reality check.

பிகு 2: பயங்கரவாத தாக்குதலினாலான இழப்புகளின் நிகழ்தகவு குறைவென்பதால் பயங்கரவாதத்தை சும்மா விடலாமா என நீங்கள் கேட்கலாம். நிச்சயம் சும்மா விடக்கூடாது. அவர்களுக்கு உச்ச பட்ச தண்டனை கிடைக்க வேண்டும். அரசு இந்த கொடும்பிரச்சனையை முற்றிலும் அகற்ற அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். அதே சமயத்தில் வேறு பல பிரச்சனைகளும் இருக்கின்றன. எல்லாமே சம அளவில் அரசியல் படுத்தப்படவேண்டும். ஆனால் நமது விதி அது நடப்பதில்லை. சாலை விபத்தை குறைப்போம் என எந்த கட்சியும் தேர்தல் வாக்குறுதி கொடுக்கப் போவதில்லை. அப்படியே கொடுத்தாலும் அவர்கள் வெல்லப்போதில்லை. பயங்கரவாதம் ஒரு நல்ல அரசியல் ஆயுதம். எல்லோருக்கும்.

பிகு 3: மேலே குறிப்பிட்ட அதே காரணத்திற்காக தனிப்பட்ட முறையில் அஜாக்கிரதையாக இருந்து விடலாமா என்றாலும் இல்லையென்றுதான் சொல்வேன். தற்போதைய நிலவரப்படி அடுத்த வெடிப்பு எங்கே நடக்கும் என யாருக்கும் தெரியாது. அதனால் எல்லோரும் முடிந்த அளவில் கவனமாக இருக்க வேண்டியதுதான். அதே சமயத்தில் வண்டி ஓட்டி செல்லும் போதும் கவனமாகவே போங்கள்.

தகவல்களுக்கான மூலச்சுட்டிகள்.

Terrorism in India

Road Accidents in India, 1970-2005

மக்கள் தொகை பற்றிய தகவல்கள்

சி ஐ ஏ தகவல்கள்

Labels: ,

Thursday, June 12, 2008

இறுதித்தீர்வுகள் - நாசிசம், சிங்களப் பேரினவாதம்

என்னுடைய முந்தைய யூதரின அழிப்பைப் பற்றிய பதிவின் பின்னூட்டத்தில் எவராவது நாசிசத்தை சம காலத்தில் ஈழத்தில் நடைபெறும் இன அழிப்புடன் ஒப்பிடுவார்களா என ஆவலுடன் எதிர் நோக்கினேன். வாசித்தவர்களில் பலருக்கு மனதில் தோன்றியிருக்கலாம். தங்கமணியும், தஞ்சாவூரானும் மட்டும் அதைக் கோடிட்டு இந்திய தமிழ் சமுதாயத்தின் மீதான எரிச்சலை எழுதியிருந்தார்கள்.

யூதர் இன அழிப்பு பற்றிய ஆக்கங்களை எதிர்கொள்ளும் பொழுதெல்லாம் எனக்கு மனக்கண் முன் வருவது ஈழத் தமிழரின் அவல நிலைதான். நாஜிக்களின் கொடுமைக்கும் சிங்கள அரசின் கொடுமைக்கும் ஏராளமான ஒற்றுமைகள்.

எனது முந்தைய பதிவிலிருந்து

//....தொடர்ந்த அவரது யூத வெறுப்புக் கொள்கைகள் மூலம், ஜெர்மானிய யூதர்கள் குடியிரிமையை இழந்தார்கள், பின்னர் சில தொழில் செய்யும் உரிமைகளை இழந்தார்கள், பின்னர் வேலை செய்யும் உரிமைகளை இழந்தார்கள், பின்னர் நகரில் நடமாடும் உரிமைகளை இழந்து கெட்டோக்களில் அடைத்து வைக்கப்பட்டார்கள். கடைசியாக வாழ்வதற்கான உரிமையை இழந்தார்கள்.//

இதில் யூதர்களுக்குப் பதில் தமிழர்கள் என மாற்றி எழுதினால் அது பெரும்பாலும் பொருந்தும். உள்நாட்டு அகதி முகாம்கள், சிறப்பு பாதுகாப்பு பகுதிகள், சாலைப் போக்குவரத்து துண்டிப்பு, ஊரடங்கு உத்தரவு, அவசர நிலைப் பிரகடனத்தால் பறிக்கப்பட்ட எல்லாவிதமான சட்டப்பூர்வமான பாதுகாப்பு, ஆள்கடத்தல், கொலை, விமான குண்டு வீச்சு, கன்னி வெடித்தாக்குதல், உணவுப் பற்றாக்குறை, மருந்து பற்றாக்குறை என கெட்டோக்களில் அடைக்கப்பட்ட யூதர்களைப் போலத்தான் ஈழத்தமிழர்களும் அன்றாடம் உயிருக்குப் பயந்து வாழவேண்டியிருக்கிறது.

ஆனால் நாமும் ஈழத்தமிழர்கள் படும் இன்னலுக்கு மௌன சாட்சியாகவே பெரும்பாலும் இருக்கிறோம். அவ்வளவு கொடுமைகள் நிறைந்த நாஜிக்களின் அட்டகாசம்கூட ஏறக்குறைய 10 ஆண்டுகள்தான் நீடித்தது. ஆனால் ஈழத்தமிழர்களின் மீதான அடக்குமுறை 30 ஆண்டுகளுக்குப் பின்னரும் குறைவதற்குப் பதில் கூடிக்கொண்டே போகிறது.

ஹிட்லரைப் போல, மஹிந்தாவும் அவரது இனவெறிக் கூட்டத்தாரும் தமிழ் பிரச்சனைக்கான கடைசித் தீர்வை முன்னெடுத்திருக்கிறார்கள். என்ன விலை(அது தமிழர்களின் உயிரில் கணக்கிடப்படுகிறது) கொடுத்தாலும் அவர்களது சிங்கள மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவது தான் அது. கொலை செய்யப்பட்டவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இந்திய அரசாங்கத்தின் ஆதரவோடு. சமீபத்தில்தான் இந்தியா, மஹிந்தாவிற்கு 100 மில்லியன் டாலர் கொடுத்து அவரது முதுகில் தட்டிக் கொடுத்தது. எப்படியாவது தமிழ் பிரச்சனையை முடித்துவிடுங்கள் நாங்கள் வேறுதிசையில் பார்த்துக் கொள்கிறோம் என்பது போன்ற மனப்பான்மை...

தங்கமணி, தஞ்சாவூரான் சொல்வதைப்போல ஒவ்வொருமுறையும் கையாலாகாமையை மட்டுமே வருத்தத்துடன் வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. ஒரு தனிப்பட்ட குடிமகனாக என்னால் பெரிதாக மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும் என்ற கனவுகளெல்லாம் இல்லை. ஆனால் எதுவுமே சொல்லாமல்/செய்யாமல் இருந்தால், பிற்காலத்தில் வரலாற்றின் முன் நிறுத்தப்பட்டு நாம் கேள்வி கேட்கப்படுவோம். நஜிக்களின் கைக்கூலிகளாக இருந்து இலட்சக் கணக்கான பிரஞ்சு-யூதர்களின் படுகொலைக்கு துணை நின்ற பிரஞ்சு-போலீசாரை வரலாறு காறித் துப்புவது போல் நம்மையும் துப்பும்.

நான் முழு/பகுதி நேர அரசியல்வாதியல்ல, போராளியல்ல, ஆக்டிவிஸ்ட் அல்ல. நானுண்டு என் வேலையுண்டு என்றிருக்கும் ஒரு சாமான்யன். என்னால் செய்ய முடிந்ததெல்லாம்

1) என் ஓட்டுக்களை கேட்டு வரும் அரசியல்வாதிகளிடம் இதைச் சொல்வதுதான். "சுதந்திர தமிழ் ஈழத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? ஆட்சிக்கு வந்தால் அந்த கொள்கையை முன்னெடுத்துச் செல்வீர்களா? இந்திய அரசின் தற்போதைய நிலைப்பாடான 'சிங்கள ஆதரவு, ஒருங்கிணைந்த இலங்கைக்குள்ளான தீர்வு' என்ற ஜனநாயகமற்ற கொள்கையை மாற்றுவீர்களா? அப்படியெனில் உங்களுக்கு என் ஓட்டு"
2) என்னைப்போல ஈழத்தமிழின அழிப்பைக் கண்டு மனம் நொந்து இருப்பவர்களையும் மேற்கண்டதுபோல அரசியல் வாதிகளிடம் சொல்லச் சொல்வது.
3) ஈழத்தமிழ் பிரச்சனை பற்றிய தவறான புரிதல் கொண்ட சக இந்தியர்களிடம் அதைப் பற்றிய தெளிவான கருத்துகளை எடுத்துச் சொல்வது. அவர்களையும் மேற்கண்ட கொள்கை நிலைப்பாட்டை எடுக்கக் கோருவது.

இவ்வாறு ஒரு நல்ல "ஓட்டு வங்கியை" ஏற்படுத்தினால் மத்தியிலிருக்கும் ஆட்சியாளர்களுக்கு உறைக்கும் என்பது என் நம்பிக்கை. இந்தியா நினைத்தால் ஈழத்தமிழர்களின் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்கலாம்.

இதை யொட்டி நான் எழுதிய முந்தைய பதிவு.... சுதந்திர தமிழீழத்திற்கு ஒரு ஓட்டு

இதை யொட்டி நான் ஆர்குட்டில் ஏற்படுத்திய குழு... My Vote For Free Tamil Eelam

மேற் சொன்ன எனது கருத்துக்களை நீங்கள் ஆமோதித்தால் இந்த மக்கள் இயக்கத்திற்கு ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

பிகு: ஈழத்தமிழருக்கு ஆதரவு என்ற உடன் "புலிப்பயங்கரவாதிகள்" ஆதரவு என்று பலருக்கு அலர்ஜி வந்துவிடுகிறது. நான் எல்லா வன்முறைகளுக்கும் எதிரானவன். இங்கு நான் தருவது/கோருவது விடுதலைப் புலிகளுக்கான ஆதரவல்ல. ஈழத்தமிழர் எனும் ஒரு இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு.

பிகே: மிக அடிப்படையான ஒரு கேள்வி. ஈழத்தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உள்ளதா. இல்லையா?

பிதுகே அ: உள்ளது எனில் நீங்கள் நம்ம கட்சி. அந்த உரிமையை அவர்கள் எப்படி பெருவது. அதற்கு நாம்(எந்த கட்சியையும் சாராத தனி நபர்கள்) மேற்குறிப்பிட்ட வழியை அல்லாது எப்படி உதவலாம்?

பிதுகே ஆ: இல்லையெனில், ஏன்? நீங்கள் ஒரு ஈழத்தமிழராக கொழும்பிலோ, யாழ்பாணத்திலோ இருந்தாலும் இதே பதிலைத்தான் தருவீர்களா?

Labels: , , ,

Monday, September 24, 2007

காவிப்படை + மூடநம்பிக்கை = 200 கோடி இந்தியர்கள்?

பாஜக இராமர் பெயரைச் சொல்லி மீண்டும் அரசியல் இலாபம் தேடத்துடிக்கிறது. "இந்துக்களின் உணர்வுகளை" பாதுகாப்பதை மொத்த குத்தகைக்கு எடுத்திருப்பதாக நினைத்துக்கொள்ளும் காவிப்படைகள் உண்மையிலேயே அவர்களின் நலன்களை முன்னிருத்துமானால் "இராமர் பாலம்" போன்ற மூடநம்பிக்கை பிரச்சாரங்களை துறந்துவிட்டு பகுத்தறிவை பற்றியிருப்பார்கள்.

உயர்சாதி இந்துக்களால் சொல்லப்படும் மந்திரம்கூட

"எமை பொய்யிலிருந்து மெய்யிற்கு இட்டுச்செல்,
எமை இருளிலிருந்து வெளிச்சத்திற்கு இட்டுச்செல்"

"Lead Us From Untruth To Truth
Lead Us From Darkness To Light"

என்றுதானே சொல்கிறது.

ஆனால் காவிப்படைகள் மக்களுக்கு அதையே உல்டாவாக கற்பித்து வருகின்றன போலும். அதனால் தான் வட மாநிலங்களில் இராமர் பெயரைச்சொன்னவுடன் எல்லோருக்கும் குருதி கொப்பளிக்கிறது. அவசரமான பிரச்சனைகள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. காவிப்படைகளின் மற்றும் மத அடிப்படைவாதிகளின் மூடநம்பிக்கை பிரச்சாரங்களின்
பிடியிலிருந்து வெளி வர இயலாமல்தான் வடக்கில் தெற்கைவிட வறுமை மிகுந்தும், கல்வியறிவு குறைந்தும் இருக்கின்றன. மக்கள் தொகை வளர்ந்து கொண்டே போகிறது.
இந்த கட்டுரையின்படி(India heading for 2 billion
population.
A new assessment of India's population prospects has concluded that its numbers will almost certainly be near 1.8 billion by 2050 and could top 2 billion by the end of this century unless fertility rates decline more rapidly in India's largest and poorest states.
), இப்பொழுதைய நிலை தொடர்ந்தால், வட
மாநிலங்களின் பங்கு காரணமாக, 2100ல் இந்திய மக்கள்தொகை 200 கோடியாக இருக்கலாம். ஏற்கனவே இந்தியாவில் ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமைகள்(இருக்க இடம், உண்ண உணவு, குடிக்க நல்ல தண்ணீர்) அற்ப சொற்பமானவை. இன்னும் 50-100 ஆண்டுகளில் அவை பாதியாக குறையப்போகின்றன.

விழித்துக் கொள்ளுங்கள் நண்பர்களே.

Labels: ,