ஜேகேவின் சில குறிப்புகள்

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Monday, June 22, 2009

ஒரு சாபம்! சில அதிர்வுகள்!

கவிஞர் தாமரையின் கவிதைச் “சாபம்” சில அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழகத் தமிழர்களில் பலர்(சிலர்?) கடந்த சில மாதங்களில் தமது தேசம் பற்றிய தீர்மானமான மறுபரிசீலனையை செய்யத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனம். அவர்களுக்கு இந்தச் சாபம் ஒரு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் இந்திய தேசியத்தில் நம்பிக்கை கொண்ட பலருக்கு இது மிகப்பெரும் அதிர்ச்சியைத் தந்திருக்கும் என்பதை மிக எளிதில் உணர்ந்து கொள்ளலாம். பலர் வஞ்சினத்துடன் கவிஞர் தாமரையின் கவிதையை எதிர்கொள்கிறார்கள்.

எங்கள் ஊருக்கு அருகில் கோபக்கார சாமிகளுக்கான கோயில்கள் உள்ளன. காளி கோயில், கட்டெறும்பு அய்யனார் கோயில் என்று. ஒருவருக்கு அநீதி நேர்ந்து, எதிராளியை தட்டிக்கேட்க, அவருக்காக நீதி கேட்க, யாருமில்லை என்ற பட்சத்தில் அவர் அந்த கோயில்களுக்குச் சென்று ”படி கட்டி” அல்லது ”காசை வெட்டி” நீதி கேட்பார். இந்த சக்தி வாய்ந்த சாமிகள் மிகப் பெரிய தண்டனையை எதிரிக்கு வழங்கும் என்பது மக்களது தீவிர நம்பிக்கை. எனக்கு இறை நம்பிக்கை எதுவும் இல்லை. ஆனால் கடந்த மாதங்களில் ஏற்பட்ட தாங்க இயலாத ஆற்றாமையில், அந்த கோயிலுக்குச் சென்று ”படி கட்டினால்” தான் என்ன என்று தோன்றியது. நான் கட்டும் படி யாரிடமும் சென்று நீதியை நிலை நாட்டப்போவதில்லை என்று தெரிந்தாலும், “நான் படி கட்டிட்டேன்” என்று எல்லோரிடமும் சொல்வதற்காகவாவது அப்படிச் செய்திருக்கலாம். தெருச்சண்டையில் வீழ்த்தப்பட்ட தாய்மார்கள் மண்ணை வாரி இறைத்து “நீ நாசமாப் போவ” என்பார்களே, அது போல!

தமது சாபத்தால் உண்மையிலேயே நதிகளெல்லாம் வற்றி, கழனிகளெல்லாம் கருகி மக்கள் பசியில் மடிய வேண்டும் என்பதற்காக விடப்பட்ட சாபமல்ல அது. “தாயே” என்று பாசமுடன் அழைத்த அந்த தேசத்தை தான் எப்படி இழக்கிறேன், அந்த தேசத்தின் துரோகத்தை எப்படிச் சாடுகிறேன் என்பது தான் அக்கவிதை. தந்தையால் தொடர்ந்து பாலியல் பலவந்தம் செய்யப்பட்ட ஒரு பெண் குழந்தைக்கு வளர்ந்து விவரம் தெரிய வரும் பொழுது அதுவரை அவளது தந்தை மீது வைத்திருந்து பாசமெல்லாம் வஞ்சினமாக மாறுமே அது போன்றதொரு கோபம்.

எவ்வளவு நடந்த பொழுதும் ஒரு சில தமிழரைத் தவிர பிற இந்தியர் எல்லோரும் எதுவுமே நடக்காதது போலவே இருந்தார்கள். இன்னும் சிலர் கோலாகலமாகக் கொண்டாடினார்கள். அவர்களுக்கெல்லாம் இக்கவிதை மிக அதிர்ச்சி தரும். இது போன்று எழுதுமளவிற்கு யார் இவர்களுக்கு சுதந்திரம் கொடுத்தார்கள் என கர்ஜிப்பார்கள். இப்படி எழுதியவர்களை தடாவிலோ பொடாவிலோ போடவேண்டும் என்பார்கள்.ஆனால் ஒரு நொடிக்கு “எது இவளை இவ்வளவு கோபமான நிலைக்குத் தள்ளியிருக்கும்” என நினைத்தார்களென்றால் அது போதும்.

இந்தக்கவிதையை தமிழர்களைவிட பிற மொழி பேசுபவர்கள் படிக்கவேண்டும். அவர்களுக்கு இது இன்னும் அதிர்ச்சியாக இருக்கும். சில நேரங்களில் அதிர்ச்சி வைத்தியங்களும் தேவைப்படுகின்றனவே. அதற்காக என்னால் இயன்ற அளவிற்கு இந்தக் கவிதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளேன். முடிந்தால் தமிழ் பேசாத பிற இந்திய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Labels:

Wednesday, May 20, 2009

இருத்தலெனும் சாபம்

மரணங்களின் நிழல்கள்
கட்டி இழுக்கின்றன
என் கால்களை
படுகொலையின் ஓலங்கள்
தேடியலைகின்றன செவிப்பறைகளை
ஊடக வாய்க்கால்களில் ஓடும்
தேசியச் சாக்கடைகள் தெறிக்கின்றன
மனிதத்தின் முகத்தில்
எனக்கும் ஆசைதான்
அப்பழுக்கற்ற இருத்தலைத் தேடுவதில்
ஆனால் இன்றெனக்கு
இருப்பதற்கு பொருமையில்லை
இருக்கவும் தெரியவில்லை
பெருவெளியை நிறைத்திருக்கும் விசும்பில்
சாவின் சுவடுகளில் படிந்திருக்கும்
துரோகப் புண்களில் வடியும்
சீழ் துடைக்க
என்னிடம் இல்லை
மயிலிறகோ, விரல்களோ, கரங்களோ
கோபங்கள் என்னைச்
சிறிது சிறிதாக சிதைக்கின்றன
கவிதைச் சுயமைதுனம் செய்து
காயங்களில் களிம்பு தடவுகிறேன்
எல்லாம் குமட்டுகிறது
இக் கவிதை உட்பட

Labels: , ,

Sunday, May 17, 2009

உங்களுக்காக நாங்கள் போராடுவோம்

சென்ற நூற்றாண்டின் இரத்தக்கறை நிறைந்த யூத இன அழிப்பு குரூரமானது. அதீதமான அறிவியல் மற்றும் திட்டமிடல் கொண்டு பல இலட்சம் யூதர்களை விச வாயு அறைகளில் ஹிட்லரின் நாஜிப்படை கொன்றது. கொல்லப்பட்டவர்களின் எல்லா உடைமைகளும் நாஜிக்களால் சூறையாடப்பட்டன. அவர்கள் கடைசியாக அணிந்திருந்த ஆடைகள் உட்பட. விச வாயுவால் இறந்த பிறகு அவர்களின் ஆடைகளை எளிதாக கழற்ற முடியாது என்பதற்காக, விச வாயு அறைகளுக்கு அனுப்புவதற்கு முன்னரே, அவர்களை தமது உடைகளை முற்றிலும் கழற்றி விடுமாறு நாஜிக்கள் அவர்களிடம் சொல்வார்கள். தாம் கொலை செய்யப்படப் போகிறோம் என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்தும் எந்தவிதமான சிறு எதிர்ப்பும் இன்றி தமது உடைகளைக் கழற்றிவிட்டு விச வாயு அறைகளுக்குள் சென்று ஈசல் போல செத்து மடிந்தார்கள் 50 இலட்சத்துக்கும் மேற்பட்ட யூதர்கள். அப்பொழுது உலகம் கேட்டது, ”எப்படி ஒரு சின்ன எதிர்ப்பைக்கூட காட்டாமல் இவர்கள் தமது அழிவை ஏற்றுக்கொண்டார்கள்?” என்று. அதே உலகம் சொன்னது ”இனிமேல் இது போல ஒரு கொடுமை உலகில் வேறெங்கும் நடக்க விட மாட்டோம்” என்று.

ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக அரை நூற்றாண்டாக அநீதிகள் நடைபெற்றுவருவதை எல்லோரும் ஒத்துக் கொள்கிறார்கள். தமிழர்களின் மனித உரிமைகள் சில கோடி முறைகளாவது மீறப்பட்டிருக்கும். ஆனால் யூதர்களைப்போல தமிழர்கள் சாகவில்லை. எதிர்த்துக் குரல் கொடுத்தார்கள். எதிர்த்து ஆயுதம் ஏந்தினார்கள். ஆனால் அதே உலகம் தமிழர்களுக்கு பயங்கரவாதிகள் பட்டம் சூட்டி தமது புனித பிம்பங்களை தமக்குத்தாமே நிரூபித்துக்கொண்டார்கள். அவர்களின் ஆயுதம் தாங்கிய எதிர்ப்பையும் தாண்டி, அவர்களின் ஆயுதம் தாங்கிய எதிர்ப்பிற்காகவே, பல ஆயிரம் தமிழர்கள் ஈசல் போல கொல்லப்பட்டனர். இது போல வேறு எங்கும் நடைபெற விட மாட்டோம் என்று சூளுரைத்த உலகம் கொலைகாரர்களை தட்டிக்கொடுத்தது. கொலை செய்யப்படுபவர்களை கண்டித்தது. அவர்கள் எதற்காக காத்திருந்தார்களோ அந்த இனப் படுகொலை நடந்து முடிந்துவிட்டது. இனிமேல் வருவார்கள் சாரி சாரியாக. ”நாம் தவறு செய்துவிட்டோம், இனிமேல் இது போல மற்றொரு இனப்படுகொலை நடைபெற அனுமதிக்க மாட்டோம்” என சூளுரைப்பார்கள். திரைப்படங்கள் எடுத்து/பார்த்து கண்ணீர் சிந்தி ஆஸ்கர் பரிசுகொடுத்து தமது தூய்மையை நினைவூட்டிக்கொள்வார்கள். கட்டுரைகள் எழுதி புலிட்சர் பரிசுவாங்குவார்கள். ஏன் இலங்கையில் அமைதி கொண்டுவந்ததற்காக இந்திய இலங்கை ஏகாதிபத்தியங்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசுகூட கொடுத்தாலும் கொடுப்பார்கள்.

இந்த உலகம் பைத்தியக்காரத்தனமானது.

இங்கே யாருமே பரிசுத்தமில்லை. புலிகளும்தான். அவர்களின் முரட்டுத்தனங்களாலும், முட்டாள்தனங்களாலும் தமிழர்கள் அடைந்ததைவிட இழந்தது அதிகமாக இருக்கலாம். உண்மை என்னவென்று அவர்களுக்கு முன்னும் பின்னும் நின்ற ஈழத் தமிழர்களுக்குத்தான் தெரியும்.

இதோ அந்த புலிகள் முப்பதாண்டுகளில் முதன் முதலாக தாம் தோல்வியடைந்து விட்டதாக அறிவித்திருக்கிறார்கள். எப்படிப்பட்ட ஒரு போராட்டம் இப்படி முடிந்து விட்டதென்று வருத்தமாக இருக்கிறது. புலிகளின் மீது கோபமாகக்கூட இருக்கிறது. அதெல்லாம் ஒருபுறம் இருக்க, நான் நிச்சயமாக புலிகளின் பேரில் பெருமையடைகிறேன். அவர்கள் தோல்வியில் ஒன்றும் அவமானமில்லை. அதீதமான பெருமைதான் மிச்சமிருக்கமுடியும். புலிகளே! புலிகளின் பின்னின்ற ஈழத் தமிழ் மக்களே! உங்களின் மன உறுதியும் வீரமும் வரலாற்றில் வேறெங்கும் யாரும் கண்டதில்லை. இயக்கத்தைச் சேர்ந்த ஒவ்வொரு புலியின் தியாகமும் ஒரு சகாப்தம். உங்களுக்கு ஒத்தாசையாக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போட முடியாத எமது கையாலாகாமையை எண்ணி வெட்கப்படும் அதே நேரம், நீங்கள் பேசிய மொழியை நானும் பேசுகிறேன் என்பதற்காக நான் பெருமை அடைகிறேன். அந்த மொழிக்காக நீங்கள் உயிரையும் கொடுக்க முன் வந்தீர்கள் என்பதை நினைக்கும் ஓவ்வொரு பொழுதும் என் மெய் சிலிர்க்கிறது. எங்களை உங்களது தொப்புள் கொடி உறவுகள் என்று நீங்கள் அழைப்பீர்களே அதற்கு என்ன கைமாறு என்னால் செய்ய முடியும். உங்களது வீரத்தை நாங்கள் ஒரு காலத்திலும் மறக்கமாட்டோம். சர்வ தேசங்களின் துரோகத்தையும், இந்திய ஏகாதிபத்தியத்தின் துரோகத்தையும் நாங்கள் ஒரு போதும் மறக்க மாட்டோம்.

முப்பதாண்டு போராட்டம் ஒன்றும் இல்லாமல் முடிந்து விட்டதென்று துக்கமுற வேண்டாம். இலட்சம் மக்களின் தியாகத்தினால் எதுவும் நடக்கவில்லையே என்று அழுது புலம்ப வேண்டாம். முப்பது இலட்சம் தமிழர்கள் அன்றாடம் பட்ட அவதிகளுக்கு ஒரு முடிவில்லையா என வருந்த வேண்டாம். உங்களது தொப்புள் கொடி உறவுகள் உங்களை கைவிட்டு விட்டார்களே என்று துயரமடைய வேண்டாம். நீங்கள் முப்பதாண்டுகளாக தொடர்ந்து போராடி களைத்துப்போய் இருப்பீர்கள். நீங்கள் இப்போது ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். உங்களிடமிருந்து போராட்டச் சுடரை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம் உங்களுக்காக நாங்கள் போராடுவோம். அமைதியான முறையில் நமது இலக்கை அடையும் வரை நாங்கள் போராடுகிறோம். இது ஓரிரு வருடங்களில் முடியலாம் இல்லை பல வருடங்கள் எடுக்கலாம். ஆனால் உங்களுக்காக நாங்கள் போராடுவோம். நீங்கள் இப்பொழுது சற்று களைப்பாறுங்கள்.

Labels:

Monday, May 04, 2009

தமிழனுக்கு உணவில்லை எனினும் சும்மா இருந்திடுவோம்

இனிமேல் சாப்பிட எதுவுமே இல்லை எனும் அவலக்குரல் கொடுக்கிறர்கள் வன்னியில் உலகத்தால் சிறை பிடிக்கப்பட்டிருக்கும் சபிக்கப்பட்ட ஏழை மக்கள். அறிக்கைத் துண்டுகளின் மூலம் கூட ஆறுதல் அளிக்கத் தவறிய இவர்களா ”ஸோற்றுப் பார்சலை” விமானம் மூலம் போடப் போகிறார்கள். கண் முன்னே நடந்து கொண்டிருக்கும் இந்த அவலத்தை எப்படி ஜீரணிப்பது என்று தெரியவில்லை. அதற்குத் தேவையில்லாமல் முத்துக்குமார் போன்ற தைரியசாலிகள் முன்னரே செத்துப் போய்விட்டார்கள். எனக்கு அந்த அளவிற்கு தைரியமும் இல்லை, வேறெதையும் செய்ய வக்குமில்லை. இனிமேல் புலம்புவதற்கு கூட அருகதை இருக்கிறதா எனத் தெரியவில்லை. என் நண்பன் ஒருவன் அதைச் சுட்டிக்காட்டினான். “நீ இதைப்பற்றி பேசி என்ன கிழித்தாய்” என்று. அவன் சொல்வதும் சரிதானே.
----
என் சிற்றறிவிற்கு எட்டிய எந்த சித்தாந்தங்களின் மீதும் திடமான நம்பிக்கை எனக்கு இல்லை(மதங்களிலிருந்து, கம்யூனிசம் வரை). தனிப்பட்ட முறையில் இந்த உலகத்தையும் சமூகத்தையும் அதில் என்னுடைய இடத்தையும் நான் ஒரு விதத்தில் புரிந்து கொண்டிருந்தேன். அந்த புரிதலின் அடிப்படையில் ”எனக்கு நேர்மையாக நான் நடந்து கொள்ளவேண்டும்” என்பதே எனது கொள்கை. அதுதான் எனது சரிகளையும், தவறுகளையும் தீர்மானித்தது. யாருக்கும்(விலங்குகளுக்குக் கூட) நம்மால் துன்பம் விளையக்கூடாது என்பதற்காக அசைவம் சாப்பிடுவதை தவிர்த்தது மட்டுமல்லாமல்; பால், முட்டை மற்றும் தோல் பொருட்கள் போன்ற விலங்குப் பொருட்களைக்கூட தவிர்த்து வருகிறேன். குளோபல் வார்மிங்கிற்கு நான் பங்களிக்கக் கூடாது என்பதற்காக கொஞ்ச நாள் சைக்கிள் ஓட்டினேன்(பின்னர் சவுகரியப் படாததால், கொள்கைச் சமரம் செய்துகொண்டு தானுந்திக்கு மாறிவிட்டேன் என்பது வேறு விசயம்). ஆனால் இதுபோன்ற கொள்கைச் சூரத்தனங்கள் எல்லாம் இப்போது பைத்தியக்காரத் தனமாகத் தோன்றுகிறது. சமூகம் மற்றும் சமூகத்தில் என் இடம் பற்றிய எனது கேள்விகளும் எனது புரிதல்களும் கூட பைத்தியக்காரத் தனமாகத்தான் தோன்றுகிறது.

பிகு: தற்போது, குளோபல் வார்மிங் சீக்கிரம் வந்து உலகம் முழுவதையும் இப்போதே கபளீகரம் செய்து விடாதா என லேசாக ஒரு ஆசை அவ்வப்போது எட்டிப்பார்க்கிறது என்பதையும் நேர்மையுடன் ஒத்துக் கொள்கிறேன்.
----
தேர்தல் என்ற ஒரு மயிரு நடந்து கொண்டிருக்கிறது. ஈழத்தில் நடப்பது போலத்தான் இதுவும். கண்ணெதிரே நடக்கும் கேனத்தனங்களை ஒன்றும் செய்ய முடியாமல் ஒரத்தில் நின்று புலம்ப மட்டுமே முடிகிறது. இவர்கள் எல்லாம் ஓட்டுப் பொறுக்கிகள் என்று தெரியும் ஆனால் தமிழர்களின் குருதி நிரம்பிய குளத்தில் இறங்கி ஓட்டு பிடித்து விளையாடுவார்கள் என்று நான் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. அரசியல்வாதிகள்தான் இப்படி என்றால், சாமான்ய மக்களிடம் பேசினால் பித்தே பிடித்துவிடுகிறது. காவேரி டெல்டா பகுதிகளில் ஈழத்திற்கு ஆழமான ஆதரவு என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். தமிழர்கள் சாவதைப் பார்த்துவிட்டு ஓட்டுக்கேட்டு வருபவர்களை செருப்பால் அடிப்பார்கள் என்று நினைத்தேன். கூச்சமே இல்லாமல் எல்லோரும் திமுக கொடியை பைக்கில் கட்டிக்கொண்டு ஜாலி பன்னிக் கொண்டிருக்கிறார்கள்(பைக்கில் கொடியுடன் மாஸ் காட்டினால் இருநூறோ ஐநூறோ தருகிறார்களாம்).

மக்களிடம் தேர்தல் பற்றி கேட்டால், “அந்த ஊர்ல TV கொடுத்துட்டய்ங்க அவங்க எல்லாம் திமுகவுக்குத்தான் ஓட்டு போடுவாய்ங்க. எங்க ஊர்ல இன்னும் TV கொடுக்கல அதனால அம்மா கூட்டணிக்குத்தான் ஓட்டு போடுவாய்ங்க” என்று சர்வ சாதரணமாக அரசியல் சமன்பாட்டை விளக்குகிறார்கள். ஈழம் பற்றிய தெரிதலும் சுத்தமாக இல்லை, புரிதலும் சுத்தமாக இல்லை.
----
பாராளுமன்றத் தேர்தலில் ஒரு தமிழர் நலக்கூட்டணி அமைய முயற்சிக்கவும், அப்படி அமையும் கூட்டணிக்கு பிரச்சாரம் செய்யவும் http://voteforeelam.in என்ற தள முகவரியையும், PHP/MySQl வசதியுடன் கூடிய serverக்கும் பணம் கட்டி பதிந்து வைத்திருந்தேன். பின்னர் நடந்த நாடங்களைக் கண்டு மனதுடைந்ததில் அதை அப்படியே விட்டு விட்டேன். யாருக்காவது அந்த தளத்தை அமைத்து எழுது விருப்பம் இருந்தால் தெரிவிக்கவும். அதற்கான உரிமையயையும், எனது சோகங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.

Labels: , ,

Thursday, April 30, 2009

தமிழனாக இருப்பதை விட எருமையாக இருப்பதின் நன்மைகள்



நன்றி:
அனாதை ஆனந்தன்
NegativeSpace Media

Labels: ,

Tuesday, March 03, 2009

ஈழ ஆதரவு முன்னணி : தமிழக அரசியல் கட்சிகளுக்கு கடிதம்

எமது மரியாதைக்குரிய தலைவர்களே,

நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களைக் காக்க தமிழகம் ஏதாவது செய்யும் என்று உலகில் வாழும் எல்லாத் தமிழர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா கதவுகளையும் தட்டிவிட்டோம், மனிதச் சங்கிலி அமைத்து மழையில் நனைந்தோம், உண்ணாதிருந்தோம், இரயில் மறித்தோம், கடையடைத்தோம், பேரணி சென்றோம், தீக் குளித்துச் செத்தும் போனோம். ஆனால் இனவெறிப்போரை நடத்துபவர்களையும், அதற்குத் துணை நிற்பவர்களையும் எங்கள் குரல் சென்றடையவேயில்லை. காரணம் தமிழனின் குரல் ஒன்றாக ஒலிக்கவில்லை. ஒரு கோடியாக ஒலித்தது. இப்போது எமது கடைசி நம்பிக்கையாக நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. தமிழகத்தில் ஈழ மக்களுக்கான ஆதரவு பரவலானது, ஆழமானது. இதை தொடர்ந்து வந்த பல நடுநிலைப் பத்திரிக்கைகளின் கருத்துக் கணிப்புகள் தெளிவாகக் காட்டியுள்ளன. ஆனால் உள்ளூர் அரசியலில் துண்டு துண்டாகச் சிதறிப்போன தமிழரின் தலைமை வெவ்வேறு கூட்டணிகளில் சேர்ந்ததன் மூலம், தமிழர்களின் ஈழ ஆதரவுக் குரல் அதிகார வர்க்கத்தை எதுவும் செய்வதில்லை.

நாஜிக்களின் பிடியில் யூதர்கள் பட்ட அவலத்திற்கும் மேலான அவலத்தை ஈழத்தில் தமிழனாகப் பிறந்த ஒரே காரணத்திற்காக மக்கள் அனுபவித்து வருகிறார்கள். இன்னிலை தொடர்ந்தால், ஈழத்தில் இன்னும் சில நாட்களில் தமிழன் இருக்கமாட்டன். இந்த இன அழிப்பு நமது காலத்தில் நடைபெறுகிறது என்பதை மறவாதீர்கள். நாளைய வரலாறு இன அழிப்பு செய்தவர்களை மட்டும் தூற்றாது.அதற்குத் துணை போனவர்களையும், அதை எதிர்த்துக் குரல் கொடுக்கத் தவறியவர்களையும் சேர்த்தே குற்றாவளிக் கூண்டில் நிறுத்தும். எனவே, எல்லா சுயநலன்களையும் களைந்து ஈழத்தில் நடைபெறும் இன அழிப்பை நிறுத்தவும், அம்மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடுவது நமது வரலாற்றுக் கடமை. அந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது உங்களின் கடமை.

தமிழர்களின் குரல் பாராளுமன்றத்திலும் ஐக்கிய நாடுகளின் சபைகளிலும் ஒருங்கிணைந்து ஈழ மக்களின் நலன் கோரி எதிரொலிக்க வேண்டுமெனில், தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் ஈழ ஆதரவு அலையை சிந்தாமல் சிதறாமல் தமிழர்களின் வெற்றியாக மாற்ற வேண்டும். அதற்காக உங்கள் கட்சி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு ஈழ ஆதரவு முன்னணியை அமைத்து போட்டியிட வேண்டுமென உரிமையுடன் வலியுறுத்துகிறோம். அம்முன்னணியின் முக்கிய வாக்குறுதிகளாக பின் வருபவை இருக்க வேண்டும்


மத்திய அரசில் பங்கேற்றால் அல்லது ஆதரவு தந்தால்,

1) இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் கோருவோம். இலங்கை அதற்கு ஒத்துக்கொள்ளாத பட்சத்தில், இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிப்போம். விமான, கப்பல் மற்றும் சரக்கு போக்குவரத்தை துண்டிப்போம். இந்தியாவின் நேச நாடுகளையும் அவ்வாறு செய்யக் கோருவோம். ஐக்கிய நாடுகள் சபையில், காமன் வெல்த் சபையில் இலங்கையின் இன அழிப்பிற்கு எதிராக தீர்மானங்கள் கொண்டு வருவோம்.
2) நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை தமிழ் மக்களின் எல்லா மனித உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்துவோம்.
3) இலங்கை இனப் பிரச்சனைக்கான தீர்வு “ஒருங்கிணைந்த இலங்கை” என்ற வரையறைக்குள்ளாக இருக்க வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றுவோம். தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிப்பதுடன். ஐக்கிய நாடுகள் சபையின் முன்னிலையில், ஈழத்தமிழர்கள், முஸ்லீம்கள் ஆகியோரது விருப்பத்தைக் கோரி தேர்தல் நடத்தி அதன் படியான தீர்வை முதன்மைப் படுத்துவோம்.

எதிர்க் கட்சியாக இருக்கும் பட்சத்தில்

1) ஈழத்தில் போர் நிறுத்தம் அமலாகி ஈழத் தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமை கிடைக்கும் வரை நாடாளுமன்றத்திலும் மற்ற இடங்களிலும் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.


இவ்வாறு ஒரு தெளிவான ஈழ நிலைப்பாட்டை முன்னெடுக்கும் பட்சத்தில், தற்போது தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் ஈழ ஆதரவு அலையில் உங்களது முன்னணி நாற்பது இடங்களையும் பிடிக்கும் என்பது உறுதி. அதற்காக சாமான்யர்களான நாங்கள் துணை நிற்போம். எங்களது வேலைக்கு விடுப்பு போட்டு விட்டு உங்களது வெற்றிக்கு வாக்குகள் சேகரிப்போம். இந்த இக்கட்டான நிலையில் நல்ல தலைமையை பரிதாபத்துடன் எதிர் நோக்கியிருக்கும் தமிழர்களைக் கைவிட்டு விடாதீர்கள் எனக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு
அனாதைத் தமிழன்

Labels: , , ,

ஈழ ஆதரவு முன்னணி கோரி ஆயிரம் வலைப் பதிவுகள்

அன்புள்ள வலைப்பதிவுலக நண்பர்களே,

உலகின் எந்த மனிதாபிமானக் குரலும் ஈழத்தமிழருக்காக ஒலிக்காத நிலையில், நாடாளுமன்றத் தேர்தலைத்தான் நம்மில் பலரும் நம்பியிருந்தோம். நமக்காக நாம்தான் குரல் கொடுக்க வேண்டும் எனவே நாற்பது பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழகம் தேர்ந்தெடுக்கும் என்று கனவு கண்டு கொண்டிருந்தோம். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப் பட்ட இன்னிலையில் ஈழ ஆதரவுக் குரல் கொடுத்த சில கட்சிகள் கூட தமது அரசியல் வாழ்வைத் தக்கவைத்துக் கொள்வதற்காக தமிழின எதிரிகளுடனும், துரோகிகளுடனும் கூட்டணி அமைத்துக் கொள்ளத் தயாராகிவிட்டதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. தமிழர்களின் தலையில் கொல்லி வைத்த தற்போதைய அரசிற்கு முட்டுக் கொடுத்த அதே கூட்டணியையும், இந்த அரசின் ஈழக் கொள்கையுடன் தமக்கு உடன்பாடுதான் என்று சொன்ன எதிர்க்கட்சியின் கூட்டணியையுமா மீண்டும் நாம் தேர்ந்தெடுக்கப் போகிறோம்?

அரசியல் கட்சிகள்தான் என்ன செய்வார்கள்? ஈழத்தமிழர் நலன் முன்னிறுத்தி தேர்தல் களம் இறங்கினால் டெபாசிட் மிஞ்சாது என்பதே அவர்களது கருத்து. அதனால் கொஞ்சமேனும் குறுகுறுக்கும் மனச்சாட்சியையும் கழற்றி வைத்துவிட்டு சந்தர்ப்பவாத கூட்டணிகளுக்குத் தயாராகிவிடுகிறார்கள். ஆனால் அந்தக் காலம் இதுவல்ல. இத்தருணத்தில் ஈழ ஆதரவு நிலை எடுக்காத கட்சிகள்தான் டெபாசிட் இழக்கப் போகின்றன. எல்லாம் மாறிவிட்டது என்பதை அவர்கள் உணரவேண்டும். அல்லது நாம் அவர்களை உணரச்செய்யவேண்டும்.

ஆனால், தலைவர்களின் தவறான கூட்டணி முடிவுகளால், ஈழ ஆதரவு வாக்குகள் பிளவு பட்டு எதிரிகளுக்கு நன்மையாகிவிடும் நிலை ஏற்பட்டு விடுமோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது. அதைத் தடுப்பதற்காக நம்மாலான ஒரு முயற்சியாக நாம் தமிழக அரசியல் கட்சிகளை ஈழ ஆதரவு முன்னனி அமைக்கக் கோரி ஆயிரம் வலைப்பதிவுகள் எழுதுவோம் என உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். தமிழில், ஆங்கிலத்தில், மற்றும் நமக்குத் தெரிந்த அனைத்து மொழிகளிலும் எழுதுவோம். இந்தத் தேர்தலில் வலையுலகமும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும். உங்கள் வரலாற்றுக் கடமையை செய்ய உரிமையுடன் அழைக்கிறேன்.

சுருதி குறையாமல் குரல் கொடுப்போம், உறுதி குறையாமல் போராடுவோம். தமிழீழ சுயநிர்ணய உரிமையை ஆதரிக்காத எந்த அரசியல் கட்சியையும் புறக்கணிப்போம்.

Labels: , , ,

Tuesday, February 17, 2009

தாம்பரம் மனித சங்கிலி புகைப்படங்கள்

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பேரவை அழைத்திருந்த மனித சங்கிலிப் போராட்டம் தாம்பரத்தில் இன்று நடைபெற்றது. திருமாவளவன், பழ நெடுமாறன், கோ க மணி போன்ற தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது எடுக்கப்பட்ட எல்லா புகைப்படங்களும் இங்கே

சில புகைப்படங்கள் சில கீழே.

From Human Chain Protest For Tamil Eelam At Tambaram


From Human Chain Protest For Tamil Eelam At Tambaram


From Human Chain Protest For Tamil Eelam At Tambaram


From Human Chain Protest For Tamil Eelam At Tambaram


From Human Chain Protest For Tamil Eelam At Tambaram


From Human Chain Protest For Tamil Eelam At Tambaram


From Human Chain Protest For Tamil Eelam At Tambaram


From Human Chain Protest For Tamil Eelam At Tambaram

Labels: ,

Sunday, February 01, 2009

வேடிக்கை பார்க்கும் தமிழினமே....

முத்துக் குமாரின் இறுதி ஊர்வலத்தில் எதிரொலித்த உணர்ச்சிப் பூர்வமான முழக்கங்கள் வலையுலகையும் தொடவேண்டுமென்பதற்காக நினைவிலிருந்த சில கீழே

முத்துக்குமாருக்கு...

வீர வணக்கம், வீர வணக்கம்
முத்துக்குமாருக்கு வீர வணக்கம்

வீர வணக்கம், வீர வணக்கம்
மாவீரன் முத்துக்குமாருக்கு
வீர வணக்கம் செய்கின்றோம்

தமிழக அரசே தமிழக அரசே
முத்துக்குமாரின் தியாகத்திற்கு
நிதி வேண்டாம் நிதி வேண்டாம்
நீதி வேண்டும் நீதி வேண்டும்


தமிழனுக்கு...

வேடிக்கை பார்க்கும் தமிழினமே!
உங்களுக்காகச் செத்தான் முத்துக்குமார்
இன்னும் ஏன் வேடிக்கை?
வீதியில் வந்து போராடு!

வேடிக்கை பார்க்கும் தமிழினமே!
உந்தன் எந்தன் வரிப்பனம்
உன் இனத்தை அழிப்பதற்கா?
நம் இனத்தை அழிப்பதற்கா?
வீதியில் வந்து போராடு!

ராஜிவ் காந்தி கொலை பற்றி...

கொன்றது யார்? கொன்றது யார்?
ராஜிவ் காந்தி படுகொலையில்....
செத்தது எல்லாம் போலீஸ்காரன்.
எங்கே போனான் காங்கிரஸ்காரன்?

ஏன் கேட்கவில்லை...

எரிகிறதே எரிகிறதே...
தமிழீழம் எரிகிறது...
இந்து கோயில் எரிகிறதே...

சோ பார்ப்பான் கேட்கல...
தினமலர் கேட்கல...
இந்துராம் கேட்கல...
கருணாநிதி கேட்கல...
ஜெயலலிதா கேட்கல...
விஜயகாந்த் கேட்கல...

ஏன்யா கேட்கல?

பாப்பான் சாகல!
பாப்பாத்தி சாகல!
அதான் கேக்கல.

குடும்ப அரசியல் பற்றி...

அழகிரிக்கு மதுரையாம்
ஸ்டாலினுக்கு சென்னையாம்
கனிமொழிக்கு டெல்லியாம்
பேரனுக்கு டீவியாம்
தமிழனுக்கு நாமமாம்
உனக்கும் எனக்கும் நாமமாம்.

துரோகம்

முதுகில் குத்தும் கருணாநிதியே
முத்துக்குமாரை கொன்றாயே

தமிழீழம்...

வெல்லட்டும் வெல்லட்டும்
புலிகள் படை வெல்லட்டும்
மலரட்டும் மலரட்டும்
தமிழீழம் மலரட்டும்

இதுபோல இன்னும் பல கோபமும், பொருளும், உணர்ச்சியும் பொதிந்த முழக்கங்கள். எல்லாவற்றையும் விட எனக்கு முக்கியமாகத் தோன்றியது தமிழக மக்களை நோக்கி எழுப்பப் பட்ட இந்த முழக்கம்தான்... தமிழர்களுக்கு காதில் விழுமா?

வேடிக்கை பார்க்கும் தமிழனமே
வீதியில் வந்து போராடு!

Labels: ,

Tuesday, January 27, 2009

பழி தீர்த்த சோனியா...சோரம் போன தமிழர்கள்.

தனது கணவரை கொன்றதற்காக, புலிகளை மிகச் சாதுரியமாக சோனியா பழி தீர்த்துக் கொண்டிருக்கிறார். 40 தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவின் பேரில் அமைந்த அரசின் மூலமே இதைச் சாதித்திருக்கிறார் என்பது மலைப்பாக இருக்கிறது. தமிழக மக்கள், கூட்டணி அரசியல் தலைவர்கள், ஏன் புலிகள் கூட இதை கிஞ்சித்தும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்பதே உண்மை.

அமைதிப்படை/ராஜிவ் கொலை எனும் படுதோல்வி நிகழ்வுகளுக்குப் பின்னர் இந்தியா இலங்கைப் பிரச்சனையில் எவர் சார்பாகவும் தலையிடாமல் பெரும்பாலும் ஒதுங்கியே இருந்தது. அதன்பின்னர் வந்த நரசிம்ம ராவ், தேவகௌடா, குஜ்ரால், வாஜ்பாயி போன்றவர்களின் ஆட்சி காலகட்டத்தில் புலிகளும் அரசுத் தரப்பும் ஓரளவு சம பலத்துடன் யாரும் யாரையும் முற்றிலும் வெல்ல முடியாது என்ற நிலையிலேயே இருந்தனர். அதன் முடிவில் புலிகளின் கை ஓங்கியிருந்த தருணத்தில் போர்நிறுத்த ஒப்பந்தமும் அமலுக்கு வந்தது. அந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பின்புலத்தில் அப்போதைய மத்திய அரசும் குறிப்பாக பாதுகாப்பு ஆலோசகர் மிஸ்ராவும் முக்கிய பங்கு ஆற்றினர் என்பதை பின்னர் வந்த செய்திகள் தெரிவித்தன. மேலும் உடன்படிக்கையை ஏற்பாடு செய்த நார்வே தூதர்கள் இந்திய அரசுக்கு தொடர்ந்து தகவல்கள் தந்து அதன் ஆதரவை தக்க வைத்திருந்தார்கள்.

வாஜ்பாய் அரசிற்கு பின் வந்த மன்மோகன் சிங்-சோனியா ஆட்சிக் காலத்தில் தான் போர் நிறுத்த உடன்படிக்கை கொஞ்சம் கொஞ்சமாக மதிப்பிழக்கச் செய்யப்பட்டது. இந்த சமயத்திலேயே கருணா பிளவும் இந்திய உளவுத்துறையினர் உதவியுடன் நடைபெற்றது. முன்னர் இலங்கைப் பிரச்சனையில் இந்தியா சார்பில் பங்கேற்றிருந்த M K நாராயணனுக்கும், சிவ சங்கர் மேனனுக்கும், மத்திய அரசின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறைகளில் முக்கியமான பதவிகள் அளிக்கப் பட்டன. இவர்களில் நாராயணன் சோனியாவிற்கு மிக நெருக்கமானவராம்.இவர்களது கடந்த அனுபவத்தை வைத்துப் பார்க்கும் பொழுது, புலிகளை வஞ்சம் தீர்ப்பதற்காகவே இவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள் எனச் சொல்லலாம்.

இலங்கைப் பிரச்சனை மீதான அளவுக்கு அதிகமான கவனத்தினால்தான் மும்பை தாக்குதலை, உளவுத்துறை தகவல் இருந்தும், நாராயணன் கோட்டை விட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்ததும் நினைவிருக்கலாம். அந்த சமயத்தில் மக்கள் அழுத்தம் காரணமாக, மத்திய உள்துறை அமைச்சரும், மகாராஷ்டிர முதல், துணை முதல் மந்திரிகளும் பதவி விலக நேரிட்டது. ஆனால், பதவி விலகல் கடிதத்தை நாராயணன் பிரதமருக்கு அனுப்பியும் அது ஏற்றுக்கொள்ளப் படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அந்த அளவிற்கு சோனியாவிற்கு நாராயணனின் பணி தேவைப் பட்டிருக்கிறது.

தமிழகத்தில் ஏறக்குறைய நூறு நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போர் நிறுத்தம் கோரி பல்வேறு விதமான ஆர்ப்பாட்டங்கள் நடந்து வரும் பொழுதும், முக்கிய கூட்டணிக் கட்சிகள் ராஜினாமா மிரட்டல் விடுத்த பொழுதும், மத்திய அரசு போர்நிறுத்தத்தை கோரவேயில்லை என்பது கருத்தில் கொள்ளப்படவேண்டும். அவர்களின் நிலைப்பாட்டால் ஆட்சி கவிழலாம், தொடர்ந்து வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மிகப் பெரிய தோல்வியை சந்திக்க நேரிடலாம் என்ற ஆபத்துகள் இருந்த நிலையிலும் சோனியா ஒரு பேச்சிற்காகக் கூட போர் நிறுத்தத்தை வேண்டவில்லை. ஆரம்பத்தில் இலங்கைப் பிரச்சனைக்கு இராணுவத்தீர்வு ஓவ்வாது என்று வாய்ப்பாட்டு பாடிவந்ததையும் மத்திய அரசு பின்னர் நிறுத்திக் கொண்டு விட்டது.

இன்று சிங்கள இராணுவத்திற்கு பல்வேறு உதவிகள் வழங்கி புலிகளின் மீது தனது கணவரின் சாவிற்கான பழியைத் தீர்த்துக் கொண்டிருக்கிறார் சோனியா. ”தற்போதைய மத்திய அரசின் கடும் சிங்கள ஆதரவு/தமிழ் எதிர்ப்பு நிலைப்பாட்டிற்கு, சோனியா காரணம் அல்ல. மற்ற காங்கிரஸ் தலைவர்களே காரணம்” என சிலர் வாதிடலாம். ஆனால் அந்த தலைவர்கள் நரசிம்மராவின் ஆட்சியின் போதும் இருந்தார்கள். அந்த அரசு இப்படி ஒரு தீவிர தமிழ் எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்கவில்லை. இவ்வளவுக்குப் பிறகும் பழ நெடுமாறன், இராமதாஸ் போன்ற முன்னணி ஈழ ஆதரவாளர்கள் கூட சோனியா அப்பாவி என்று கருதுவது விந்தையாக இருக்கிறது.

தனிப்பட்ட முறையில் பாதிக்கப் பட்டவர் என்பதால் புலிகளின் மீதான சோனியாவின் தீவிர கோபத்தை புரிந்துகொள்ளலாம். ஆனால் தனிப்பட்ட பழியை தீர்ப்பதற்காக
1) இந்திய அரசின் இராணுவ உளவுத்துறை எந்திரங்கள் மற்றும் மக்களின் வரிப்பணத்தை பயன் படுத்துவது தேசத் துரோகம்.
2) புலிகளை அழிக்கிறேன் என்று ஒரு இனப் படுகொலைக்கு உடந்தையாக இருப்பது மனிதத்திற்கு செய்யப் படும் துரோகம்.
3) நம்மைப் போன்ற சாதாரணத் தமிழர்களின் ஓட்டுகளைப் பெற்று வென்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் தயவில் ஆட்சி செய்துகொண்டு தமிழர்களின் படுகொலைக்கு உடந்தையாக இருப்பது நம்பிக்கைத் துரோகம்.

Labels: ,

Monday, January 26, 2009

மீதமிருக்கும் தமிழர்களை சீக்கிரம் கொன்று விடுங்கள்

”தமிழகத்தில் அழுத்தம் அதிகமாகிக் கொண்டிருகிறது. மக்களின் போராட்டம் உக்கிரமாகிக் கொண்டிருக்கிறது. நான் இன்னும் 20 நாள் கெடு வாங்கியிருக்கிறேன். பின்னர் பொதுக்குழு தனிக்குழு என்று ஒரு பத்து நாட்களை ஓட்டிவிடலாம். அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது. இந்த 30 நாட்களுக்குள் நாளைக்கு 1000 வீதம் மீதமிருப்பவர்களில் 30,000 பேரை போட்டுவிடுங்கள். அதற்கப்பறம் ஒன்றும் பிசகாகது. பயங்கரவாதத்தை வென்று பின் “மக்களை காக்க” போர் நிறுத்தத்தை அறிவித்ததற்காக, "அமைதி விரும்பும் அதிபராக" உங்களையும், போர் நிறுத்தத்தை மத்தியரசிடம் கடுமையாக பேசி பெற்றதற்காக ”தமிழர்களின் நிரந்தரக் காவலனாக” என்னையும் இந்த உலகமென்ன அந்த பிரபஞ்சமே பாராட்டும்”

More than 300 civilians feared killed, people bleed to death on streets

கொலைப் பொறியாகும் "பாதுகாப்பு வலயம்"; வன்னி மக்களைச் சிக்க வைத்து சிறிலங்கா படையினர் அகோர பீரங்கித் தாக்குதல்: 60 வரையானோர் பலி; 200 பேர் வரை படுகாயம்

என்னையா நடக்குது இங்க...நீங்கல்லாம் என்னத்த திங்கிறீங்க..தூ தூ....

Labels: , ,

Friday, January 09, 2009

புலிகள் பற்றிய புத்தகங்கள் கண்காட்சியில் தடை

தமிழக அரசின் கருத்துச் சுதந்திர பறிப்பு/குரல்வளை நெறிப்பு தொடர்கிறது. பத்ரி மற்றும் பாரா வின் பதிவுகளின் படி, சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் விடுதலைப் புலிகள் மற்றும் பிரபாகரன் பற்றிய புத்தகங்களை விற்கக் கூடாதென தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ளதாம். இதைத் தொடர்ந்து பாபாசியினர் புத்தக கண்காட்சியில் இந்த புத்தகங்களை விற்கக் கூடாது என எல்லா பதிப்பகங்களுக்கும் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பற்றிய புத்தகங்கள் விற்கக் கூடாது என்ற போர்வையில் இந்த தடை உத்தரவு விதிக்கப் பட்டிருந்தாலும் இது யாரைக் குறி வைக்கிறது என்பது தெள்ளத் தெளிவு. தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் ஈழ ஆதரவு சூறாவளியால் புத்தகச் சந்தையில், புலிகள் பற்றிய புத்தகங்கள் அதிகம் விற்பனையாகியிருக்கும். உடனடியாக, உளவுத்துறை மூலம் இந்த உத்தரவு வந்திருக்கும்.

இது எவ்வளவு அடாவடியான பாசிசத்தனமான செயல் என்பதை பொழிப்புரை கொடுத்து விளக்க வேண்டியதில்லை. இவர்களின் இந்தச் செய்கை ஒன்றே போதும் இவர்கள் பக்கம் எந்த நியாயமும் இல்லை என்பதை உணர்த்த. ஈழத்தமிழர்களின் பிரச்சனை பற்றி படித்தவர்கள் கூட தவறான புரிதலைக் கொண்டிருக்கும் தமிழகத்தில், அதிக விழிப்புணர்வுதான் தேவை. ஆனால் இது அவர்களின் அஜென்டாவிற்கு எதிராக அமைவதால், மக்கள் இருட்டிற்குள்ளும் ஆதிக்க ஊடகங்களின் பிரச்சாரங்களுக்கு ம் கொட்டிக்கொண்டும் இருப்பதையே அவர்கள் விரும்புகிறார்கள்.

தமிழக அரசின் துரோகப் பட்டியலில் இன்னுமொரு வரி. இன்னும் என்னவெல்லாம் தடை செய்யப்பட விருக்கின்றனவோ. தமிழ் வலைப்பதிவுகளில் ஈழ ஆதரவு தூக்கலாக தெரிகிறதென்று அவற்றிற்கும் தடை பிறப்பத்தாலும் ஆச்சரியப் பட முடியாது.

மக்களே விழித்துக் கொள்ளுங்கள்...

-----------------

பத்ரியின் பதிவிலிருந்து

புத்தகங்கள் விற்பனை செய்யக்கூடாது...
(இந்தியாவில்) தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பற்றிய புத்தகங்களை சென்னை புத்தகக் கண்காட்சி அரங்குகளில் விற்பனை செய்யக்கூடாது என்று வாய்மொழி உத்தரவு ஒன்று காவல்துறையிடமிருந்து புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்துக்கு (பபாஸி) வந்துள்ளது.

பபாஸி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சென்னை புத்தகக் கண்காட்சியில், கிழக்கு பதிப்பகம் அரங்கில் கீழ்க்கண்ட புத்தகங்கள் இப்போதைக்கு விற்பனைக்குக் கிடைக்கா:

1. அல் காயிதா
2. தாலிபன்
3. விடுதலைப் புலிகள்
4. உல்ஃபா
5. பிரபாகரன்
6. லஷ்கர்-ஈ-தோய்பா
7. எல்.டி.டி.ஈ (மினிமேக்ஸ்)

இந்தப் புத்தகங்கள் எல்டாம்ஸ் ரோடில் உள்ள கிழக்கு பதிப்பகத்தின் காட்சியகத்திலும் இணையம் வழியாகவும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. தமிழகத்தின் அனைத்துக் கடைகளிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

இது தொடர்பாக மேலும் விவரங்கள் கேட்கும் நிலையில் இருக்கிறோம். எனவே மேற்கொண்டு தகவல் தெரிந்ததும் எழுதுகிறேன்.

Labels: ,

Tuesday, January 06, 2009

உதயமாகும் தமிழீழ ஆதரவுக் கூட்டணி

தமிழகத்தில் ஈழ விடுதலைக்கான ஆதரவு மக்களிடையே மிகப் பரவலாகவும் பெருவாரியாகவும் இருக்கிறதென்பது எல்லோரும் அறிந்த செய்தி. ஆனால் அதன் அரசியல் குரல் பெரிய அரசியல் கட்சிகளாலும் கூட்டணிகளாலும் எதிரொலிக்கப் படவேயில்லை. திமுக பதவியை தக்கவைத்துக் கொள்வதை முதன்மையாகக் கருதுவதால், ஈழத்திற்கான ஆதரவு நிலையை அவ்வப்போது ஊறுகாய் போல தொட்டுக்கொள்கிறது. மதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் போன்ற சிறிய கட்சிகளே தொடர்ந்து ஈழ ஆதரவிற்கு குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் அவையும் பிற அரசியல் காரணங்களுக்காக வெவ்வேறு அணிகளில் எதிரும் புதிருமாக இருந்து செயல்படுகின்றன. எனவே அரசியல் பல் இல்லாத தமிழர்களின் ஈழ ஆதரவுக்குரல் மத்திய அரசிற்கும், வட நாட்டு ஊடகங்களுக்கும் மற்றும் இலங்கை அரசிற்கும் நகைச்சுவை விருந்தாக அமைந்து விடுகிறது.

இப்பொழுது ஈழத்தில் நடைபெறும் இன அழிப்பும் சிங்கள அரசின் கொண்டாட்டக் கொக்கரிப்பும் உச்ச கட்டத்தை அடைந்து இருக்கும் நிலையில், ஈழ ஆதரவு என்பது சூறாவளி போல தமிழகத்தில் மையம் கொண்டுள்ளது. எந்தக் கூட்டணி ஈழ அதரவை முன்னிறுத்தி பாராளுமன்றத் தேர்தலில் இறங்குகிறதோ அது மிகப் பெரிய வெற்றி பெரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதைக் கருத்தில் கொண்டுதான் பாஜக கூட விடுதலை புலிகளின் மீதான தடை நீக்கப் படவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. பாமக தலைவர் இராமதாஸ், மத்திய அரசு தமிழர்களை அவமானப் படுத்திவிட்டது எனவும் கூட்டணி அரசிலிருந்து விலக நேரிடலாம் என்றும் அறிக்கை விட்டுள்ளார்.

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமா ஈழ ஆதரவுக் கூட்டணி அமைப்பதற்காக வைகோ, இராமதாஸ், பழ நெடுமாறன், வீரமணி மற்றும் தா பாண்டியன் போன்றோரை சந்திக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் திமுகவையும் ஈழத்தமிழர்களின் நலன் முன்னிட்டு "சரியான" முடிவெடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார். இவரது முயற்சி வெற்றி பெரும் பட்சத்தில் திமுக+பாமக+மதிமுக+விசி ஆகிய கட்சிகளை முன்னிறுத்தி ஒரு வலிமையான கூட்டணி அமையலாம். இவர்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோ அல்லது பாரதிய ஜனதாக் கட்சியோ சேர்வதற்கு வாய்ப்புகள் அதிகம். இவ்விரு கட்சிகளும் ஈழ ஆதவரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளன.

இந்த சமயத்தில் ஜெயலலிதா என்ன செய்வார் என்பதையும் அவதானிக்க வேண்டியுள்ளது. திமுக/அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் கொள்கைகள் என்பதைவிட தேர்தலில் வெற்றி என்பதே முக்கியமான நிலைப்பாடு. எனவே, தமிழகத்தின் ஈழ ஆதரவு அலையை சாதகமாகப் பயன்படுத்த எண்ணி அதிமுகவும் ஈழ ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவ்வளவு களேபரத்திலும் திமுக கூட ஈழத்தமிழர்களுக்கான சுய நிர்ணய உரிமையை ஆதரிப்பதாக அறிக்கை வெளியிடவில்லை. ஜெயலலிதாதான் அவ்வாறு அறிக்கை வெளியிட்டார் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். எனவே, அதிமுக ஈழ அதரவுக் கூட்டணியின் தலைமைக் கட்சியாக அமைவதற்கு வாய்பே இல்லை என்றும் ஒதுக்கிவிட முடியாது.

ஆனால் எந்தக் கட்சி உருப்பாக இருந்தாலும், ஈழத்தமிழர்களின் இன்றைய நாதியற்ற நிலையை நிவர்த்தி செய்து, அவர்களின் சுய நிர்ணய உரிமைக்காக குரல் கொடுக்கும் நிலைப்பாட்டை எடுக்கும் கூட்டணிக்கு ஆதரவு தருவது என்பது இப்பொழுது இந்தியத் தமிழர்களின் தார்மீகக் கடமை. ஏனெனில், ஈழப்போரில் வரலாறு காணாத அளவிற்கு தமிழர்கள் பின்னடைவை இப்போது சந்தித்து இருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்களின் போராட்டத்தில் வலிமை இல்லாமை அல்ல. மாறாக அவர்கள் தேசமற்ற, உரிமையற்ற, பணபலமற்ற சட்ட அங்கீகாரமற்ற, அநாதைகளாக இருந்து கொண்டு உரிமைக்காக இராணுவ, பண பலம் வாய்ந்த அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற சர்வதேசங்களையும் அவர்களின் கைத்தடி பேரினவாத இலங்கையையும் எதிர்த்துப் போராடுவதுதான் சிங்களர்களின் இந்த கொக்கரிப்புக்குக் காரணம். இந்த சர்வதேச சுயநலவாத கூட்டணியை எதிர்த்து எந்த போராளி அமைப்பு இவ்வளவு நாட்களுக்குப் போராட முடியும்?

எது எப்படி இருப்பினும், போராளித் தமிழர்களுக்கு இப்பொழுது வலிமையாக குரல் கொடுப்பது தமிழர்களின் வரலாற்றுக் கடமை. இந்த கடமையிலிருந்து வழுவினால், ஈழத்தமிழர்களின் நிலை ஒரு நாள் இந்தியாவில் வசிப்பவர்களுக்கும் வரலாம். அப்பொழுது வரலாறு கைகொட்டிச் சிரிக்கும். அதைப் பர்ர்ப்பதற்குக்கூட தமிழினம் என்ற ஒன்று இருக்காது.

Labels: ,

Friday, January 02, 2009

கிளிநொச்சி வீழ்ந்தது! What the Fuck!

நானொன்றும் விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளன் இல்லை. ஆனால் குழந்தைக்கு கூட புரியும் புலிகளை ஒழித்த பின் சிங்கள அரசாங்கம் யாரிடம் சமாதனம் பேசப்போகிறார்கள் என்று. ஒன்று இரண்டாம்தர குடிமகனாக இருக்க ஒத்துக்கொள் இல்லை போரில் எந்த நாதியும் இல்லாமல்மடி என்று ஏன் ஒரு தலைவிதி இவர்களுக்கு. தமிழர்களாய்ப் பிறந்ததாலா?

பிரபாகரன் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று அவருக்குத்தான் வெளிச்சம். தமிழர்களுக்கு ஈழம், ஈழம், இறுதிப்போர் என்று ஆசைகாட்டிவிட்டு இப்படி ஒரு அழிவில் போர் முடிந்ததென்றால் பிரபாகரனின் துரோகம்தான் எல்லாவற்றையும் விட பெரிதாக இருக்கும். எத்தனை பேர் தமது உயிரை இவரது கையில் கேள்வி கேட்காமல் கொடுத்தார்கள்....

பதவி சுகத்திற்காக இடுப்பில் இருக்கும் வேட்டியையும் அவிழ்த்துத் தர முதலில் நிற்பார் போல இருக்கிறது நமது தமிழினக் காவலர். தூ....இப்படியும் ஒரு பிழைப்பு...

ஆனால் பாருங்கள் அந்த பதவிக்கே வேட்டு வரப்போகிறது. காங்கிரசையும், மத்திய பதவியையும் இப்போதும் உதற மறுத்தால், திமுகவிற்கு வரலாறு காணாத தோல்வி கிடைக்கும் என்பது உறுதி....

கலைஞரே(இதுவே கடைசி முறை இவரை கலைஞர் என்று அழைக்கப்போவது)...இந்த சமயத்திலும் நீங்கள் தீர்க்கமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதை மன்னிக்கவே முடியாது. திமுக தமிழகத்தில் ஆழ குழிதோண்டி புதைக்கப் படும். மக்கள் கொதிப்பதின் வெப்பம் உங்களுக்கு மட்டும் எப்படி சுடாமல் இருக்கிறது.... பதவி துண்டென்று நீங்கள் தானே சொன்னீர்கள். வேட்டி அவிழ்கிறது இனம் அழிகிறது இனியும் தேவையா இந்த மானங்கெட்ட துண்டு...

Labels: , ,

Wednesday, October 29, 2008

புலி இல்லாமல் புலிக் குழம்பு வைத்தல்

டிஸ்கி ஒன்னு: முதலில்... “புலி”யை அகராதியிலிருந்து நீக்கி விட வேண்டும். இந்தியாவின் தேசிய விலங்கைப்பற்றியோ அல்லது சாகித்ய அகாதமி விருது பெற்ற நாவலைப் பற்றியோ குறிப்பிடுவதாக இருந்தால்கூட “பூனை போன்ற ஒரு விலங்கு” என்றே சொல்லவேண்டும். மீறி யாராவது “புலி” என்று சொன்னால் ”இந்திய தண்டனைச் சட்டம்” பிரிவு 124A யின் கீழ் கம்பி எண்ண வைத்து விடுவார்கள். உங்களுக்கு சாப்பிட வேண்டுமா இல்லை கம்பி எண்ண வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

டிஸ்கி ரெண்டு/மூனு: சமையல் குறிப்பின் கடைசியில் இருக்கு. கொஞ்சம் பொருத்தருள்க

தேவை:

1) கொட்டை நீக்கப்பட்ட பழைய புலி இரண்டு துணுக்கு
2) குழம்பு வைக்கத் தேவைப்படும் மற்ற இத்யாதிகள்
2அ) இந்த குழம்பு ஐயர்/ஐயங்கார் வீட்டு ஸ்டைலில் வைக்கப்படுவதால் வெங்காயங்கள் பூண்டுகளுக்கு இங்கே வேலை இல்லை


செய்முறை:

1) முதலில் கொட்டை நீக்கப்பட்டு பதப்படுத்தப்பட்ட புலிகளை தேசிய வடிநீர்(இதை தேசிய சிறுநீர் என்றும்/ தேசிய ஆண்மை இரை என்றும் சில இடங்களில் அழைப்பர்) விட்டு நன்கு கழுவ வேண்டும். இதன் மூலம் பல பிரிவினைக் கிருமிகள் கொல்லப்பட்டு, நாளை உங்களுக்கு வயிற்றுப்போக்கு வருவது தடுக்கப்படுகிறது.
2) அவ்வாறு கழுவப்பட்ட புலிகளை ஒரு சட்டியில் வைக்கவும்.
3) உங்கள் சமையல் அறையில் கொட்டை நீக்கப்படாத புலிகள் ஏதாவது இருக்கிறதா எனத் தேடவும். அப்படி ஏதேனும் இருப்பின் அவற்றை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட “ஹிட்” ஸ்ப்ரே கொண்டு அழிக்கவும்.
3அ) “ஹிட்” ஸ்ப்ரே விஷம் நிறைந்தது., அருகில் இருக்கும் அரிசி சோறையும் அழித்துவிடும் என்று சில மற மண்டைகள் சொல்லும். அவர்களை IPC Section124Aஇல் உள்ளே தள்ளிவிட வேண்டும்.
3ஆ) உங்களுக்கு ஹிட் ஸ்ப்ரே அடிக்க தெம்பு இல்லையென்றால் தெருவில் போகும் அஹிம்சைக்கு பெயர்போன புத்த சன்னியாசிகள் யாரையாவது கூப்பிட்டு அவர்களை அடிக்கச் சொல்லவும்.
3இ) கொட்டை நீக்கப்படாத புலிகளை நீங்கள் அழிக்கும் வரை அடுத்த நான்காவது சமையல் குறிப்பிற்கு நீங்கள் போக முடியாது.
4) கொட்டை நீக்கப்படாத புலிகள் ஏதும் இல்லையென்று சர்வதேச தரச் சான்று பெற்றுக்கொள்ளவும்.
5) தரச்சான்று பெற்ற பின் கொஞ்ச நாள் காத்திருக்கவும்.
6) பின், கொட்டை நீக்கப்பட்ட புலிகளை ”கெட்டுப் போய் நாற்றம் வருகிறதென்று” டாய்லெட் சின்கில் கொட்டி நிறைய தண்ணீர்(முடிந்தால் காவிரி நீர் விடவும். புலிகளுக்கு மிகவும் பிடித்தது) விட்டு கழுவவும்.
7) ”கொட்டை உள்ள/கொட்டை இல்லாத புலி ஏதும் இல்லாததால் புலிக் குழம்பு வைப்பது சாத்தியம் இல்லை” என்று ஒப்பாரி வைக்கவும்.
8) பின்னர் இருக்கும் இத்யாதி பொருட்களை வைத்து ஐயர் அல்லது ஐயங்கார் வீட்டு ஸ்டைலில் சாம்பார் வைக்கவும்

டிஸ்கி ரெண்டு : “புலி” என்ற சொல்லை அகராதியில் இருந்து நீக்கிவிட்டு நீ மட்டும் ஏன் பயன் படுத்துகிறாய் என்று யாராவது கேட்கும்பட்சத்தில்... ”நீங்கள் புலிக்குழம்பு வைக்கப்போய் ஜெயில் கம்பி எண்ணக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் “புலி” என்று நான் சொன்னதற்காக நான் ஜெயில் கம்பி எண்ண வேண்டியிருந்தால் அது ராஜினாமா மிரட்டல் விடுவது போல ஜுஜுபி மேட்டர்” என சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்

டிஸ்கி மூனு: பதிவில் எழுத்துப் பிழைகள் தெரிந்தோ தெரியாமலோ இருக்கலாம்.

Labels: ,

Friday, October 24, 2008

குர‌ல்வ‌ளையை நெறிக்காதீர்

காங்கிர‌ஸ் க‌ட்சியின் பாசிச‌த் த‌ன‌மான‌ கோரிக்கைக‌ளுக்கு ப‌யந்து க‌லைஞ‌ர் தொட‌ங்கி வைத்த‌ ச‌ட்ட‌த்தின் ப‌ய‌ண‌ம் இன்று மான‌மிக்க‌ த‌மிழ‌ர்க‌ள் சீமான், அமீர் கைதில் முடிவ‌டைந்து இருக்கிற‌து. இது ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கு யாராவ‌து தீவிர‌மாக‌ ஆத‌ர‌வு தெரிவித்தால் அவ‌ர்க‌ளுக்கும் இதே க‌திதான் எனும் பீதியைக் கிள‌ப்புவ‌த‌ற்கான‌ ந‌ட‌வ‌டிக்கை. அல்ல‌வா?

க‌லைஞ‌ர் அவ‌ர்க‌ளே....என்ன‌ ந‌ட‌க்கிற‌து. த‌மிழீழ‌ விடுத‌லைக்கு ஆத‌ர‌வு தெரிவித்தால் அவ‌ர்க‌ளுக்கும் தீவிர‌வாத‌ ப‌ய‌ங்க‌ர‌ வாத‌ முத்திரை குத்தி உள்ளே த‌ள்ளுவ‌தா...அவ‌ர்க‌ள் என்ன‌ அப்ப‌டி இந்திய‌ இரையாண்மைக்கு குந்த‌க‌ம் விளைவித்து விட்டார்க‌ள். இந்தியா சிங்க‌ள‌ர்க‌ளுக்கு ஆயுத‌ உத‌வி செய்ய‌வில்லையா. நிறுத்த‌ச்சொல்லி ப‌ல‌ ஆண்டுக‌ளாக‌ த‌மிழ‌ர்க‌ள் குர‌ல் கொடுக்க‌வில்லையா. அத‌ற்கு ஒப்புக்கு சப்பானி கார‌ண‌ம் சொல்லி அவ‌ர்க‌ள‌து சிங்க‌ள‌ ஆத‌ர‌வு கொள்கையை தொட‌ர‌வில்லையா. ந‌ம‌து 40 உறுப்பின‌ர்க‌ளின் தெம்பில் ஆட்சி ந‌ட‌த்திக் கொண்டு ந‌ம‌து ச‌கோத‌ர‌ர்க‌ளுக்கு எதிரான‌ இன‌ அழிப்பிற்கு உட‌ந்தையாக‌ இருப்ப‌து அயோக்கிய‌த்த‌ன‌ம் இல்லையா. அதைத்தானே அமீர் சொன்னார்.

நீங்க‌ள் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ள் ராஜினாமா செய்வார்க‌ள் என்று சொன்னதைக்கூட‌ விளையாட்டாகத்தானே எடுத்துக் கொள்கிறார்க‌ள். ஏதோ முக‌ம‌ன்கூறுவ‌து போல‌ போர் பிர‌ச்சனைக்கு தீர்வாகாது என‌ கிளிப்ப்பிள்ளை போல‌ சொல்லிக்கொண்டிருக்கிறார்க‌ள் பிர‌த‌ம‌ரும், வெளிவிவ‌கார அமைச்ச‌ரும்.

இந்த‌ போக்கு உண‌ர்வுள்ள‌ யாருக்கும் க‌டுப்பை கிள‌ப்பாதா. அவ‌ர்க‌ள், உன்னால் முடியாவிட்டால் சொல் நாங்க‌ள் எங்க‌ள் ச‌கோத‌ர‌ர்க‌ளுக்கு உத‌வுகிறோம் என்று தானே சொல்வார்க‌ள். அது தானே இங்கே ந‌டக்கிற‌து. நீங்க‌ள் கூட‌ இது ஒரு அப‌யக்குர‌ல் என்று ம‌த்திய அர‌சிட‌ம் சொன்ன‌போது அதைத்தானே உண‌ர்த்தினீர்க‌ள். அத‌ற்காக‌ சிலரை ம‌ட்டும் கைது செய்வ‌து அர‌சிய‌ல் அப‌த்த‌ம் ம‌ட்டும‌ல்ல‌...பிர‌ச்ச‌னையை திசை திருப்பி விடும்.

த‌யவு செய்து குர‌ல்வ‌ளையை நெறிக்காதீர்க‌ள்

Labels: ,

Thursday, October 23, 2008

என்ன கொடுமை கலைஞர் ஐயா இது...

கலைஞரின் அனைத்துக் கட்சி கூட்ட தீர்மானங்களின் தீவிரம் மிக மகிழ்ச்சியைத் தந்தாலும், கொஞ்சம் பயத்தையும் தந்தது, வெகு சீக்கிரத்தில் இது பிசு பிசுத்து விடுமோ என்று. இருப்பினும் போராட்டம் முக்கிய பரிமானத்தை அடைந்த ஏதாவது நல்ல விளைவுகள் ஏற்படுத்தும் என்று ஒரு நப்பாசை இல்லாமல் இல்லை. ஆனால் அதற்குள் கலைஞரே ஆட்டத்தைக் கலைத்துவிடுவார் போலிருக்கிறது. இப்பொழுது எதற்கு வைகோவை கைது செய்ய வேண்டும். ’ஜெ’த்தனமான் அறிக்கைகளுக்கு பயந்து சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதா.

அப்படி என்ன வைகோ சட்டத்திற்கு புறம்பாக நடந்துகொண்டார். ஆயதப் போராட்டத்திற்கும், பிரிவினை வாதத்திற்கும் கருத்துரீதியாக ஆதரவு தெரிவிப்பது எந்த சட்டத்தின் படி குற்றம்? கருத்து ரீதியாகத் தானே எலோரும் ஆதரவு தெரிவிக்கிறார்கள். வைகோ, கண்ணப்பன், சீமான், அமீர், பாரதிராஜா என ஆதரவு தெரிவிப்பவர்களையெல்லாம் கைது செய்து உள்ளே தள்ளச் சொல்வது ஹிட்லர்தனமாக இருக்கிறது.

ஐயா, இந்திய அதி தேச பக்த சிகாமனிகளே...சிறைக்கம்பிகளைக் காட்டி மக்களின் குரல்வலைகளை நெறிக்காதீர்கள். நீங்கள் எது நடக்க வேண்டாம் என்கிறீர்களோ அதை நடக்கவைத்து விடாதீர்கள். வடக்கில் ஒரு காஷ்மீர் போதும். தெற்கிலும் ஒன்று வேண்டாம்.

கலைஞரே...தமிழர்களுக்கு உண்மையிலேயே முதுகெலும்பில்லை என்று நிரூபிக்க வேண்டாம். தயவு செய்து வைகோவையும் மற்றவர்களையும் பினையிலாவது உடனடியாக விடுவியுங்கள். நமது பங்காளிச் சண்டைக்கு இதுவா நேரம். ஒரு இனம் உங்களின் தீர்க்கமான நடவடிக்கைகளுக்காக ஏக்கத்தோடு காத்திருக்கிறது.

Labels: ,

Sunday, October 12, 2008

தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு பெருவாரியான ஆதரவு : இந்தியன் எக்ஸ்பிரஸ் கருத்துக் கணிப்பு

இந்தியன் எக்ஸ்பிரஸ்/தினமணி குழுமம் நடத்திய கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் புலிகளுக்கு பெருவாரியான ஆதரவு இருப்பதாக அறிவித்துள்ளார்கள்.

கருத்துக் கணிப்பில் கேட்கப்பட்ட கேள்விகளும் அவற்றிற்கான பதில்களும் மிக ஆச்சரியமாகவும் இதுவரை ஊடகத்தால் சித்தரிக்கப்பட்ட நிலைக்கு முற்றிலும் மாறாகவும் உள்ளன.

”பிரபாகரன் சுற்றி வளைக்கப்பட்டால்” என்ற கேள்விக்கு
  • ”நாம் அவரை இராஜிவ் கொலை வழக்கு விசாரணைக்காக இந்தியாவிற்கு கொண்டு வரக் கோர வேண்டும்” - 6%
  • அவருக்கு தமிழ்நாட்டில் புகலிடம் தரவேண்டும் - 23%
  • இலங்கை அரசால் பல்வேறு குற்றங்களுக்காக விசாரிக்கப்பட வேண்டும் - 12%
  • இது நடக்காமல் இருக்க ஐநா சபையின் தலையீட்டை நாம் கோரவேண்டும் - 25%
  • அனைவரது பிரச்சனைகளையும் தீர அவர் கொல்லப்படுவார் என நம்புகிறேன் - 3%
  • அப்படி நடப்பதை தடுக்க இந்திய இராணுவத்தை அனுப்பவேண்டும் - 31%




இவ்வளவு தெளிவாக மக்கள் இருப்பார்கள் என்று மிகத் தீவிரமான புலிகள் அனுதாபிகள்கூட எதிர் பார்த்திருக்க மாட்டார்கள்.

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இது கேட்குமா?

தகவல், படம் : நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், அக் 12, 2008

Labels: ,

Thursday, June 12, 2008

இறுதித்தீர்வுகள் - நாசிசம், சிங்களப் பேரினவாதம்

என்னுடைய முந்தைய யூதரின அழிப்பைப் பற்றிய பதிவின் பின்னூட்டத்தில் எவராவது நாசிசத்தை சம காலத்தில் ஈழத்தில் நடைபெறும் இன அழிப்புடன் ஒப்பிடுவார்களா என ஆவலுடன் எதிர் நோக்கினேன். வாசித்தவர்களில் பலருக்கு மனதில் தோன்றியிருக்கலாம். தங்கமணியும், தஞ்சாவூரானும் மட்டும் அதைக் கோடிட்டு இந்திய தமிழ் சமுதாயத்தின் மீதான எரிச்சலை எழுதியிருந்தார்கள்.

யூதர் இன அழிப்பு பற்றிய ஆக்கங்களை எதிர்கொள்ளும் பொழுதெல்லாம் எனக்கு மனக்கண் முன் வருவது ஈழத் தமிழரின் அவல நிலைதான். நாஜிக்களின் கொடுமைக்கும் சிங்கள அரசின் கொடுமைக்கும் ஏராளமான ஒற்றுமைகள்.

எனது முந்தைய பதிவிலிருந்து

//....தொடர்ந்த அவரது யூத வெறுப்புக் கொள்கைகள் மூலம், ஜெர்மானிய யூதர்கள் குடியிரிமையை இழந்தார்கள், பின்னர் சில தொழில் செய்யும் உரிமைகளை இழந்தார்கள், பின்னர் வேலை செய்யும் உரிமைகளை இழந்தார்கள், பின்னர் நகரில் நடமாடும் உரிமைகளை இழந்து கெட்டோக்களில் அடைத்து வைக்கப்பட்டார்கள். கடைசியாக வாழ்வதற்கான உரிமையை இழந்தார்கள்.//

இதில் யூதர்களுக்குப் பதில் தமிழர்கள் என மாற்றி எழுதினால் அது பெரும்பாலும் பொருந்தும். உள்நாட்டு அகதி முகாம்கள், சிறப்பு பாதுகாப்பு பகுதிகள், சாலைப் போக்குவரத்து துண்டிப்பு, ஊரடங்கு உத்தரவு, அவசர நிலைப் பிரகடனத்தால் பறிக்கப்பட்ட எல்லாவிதமான சட்டப்பூர்வமான பாதுகாப்பு, ஆள்கடத்தல், கொலை, விமான குண்டு வீச்சு, கன்னி வெடித்தாக்குதல், உணவுப் பற்றாக்குறை, மருந்து பற்றாக்குறை என கெட்டோக்களில் அடைக்கப்பட்ட யூதர்களைப் போலத்தான் ஈழத்தமிழர்களும் அன்றாடம் உயிருக்குப் பயந்து வாழவேண்டியிருக்கிறது.

ஆனால் நாமும் ஈழத்தமிழர்கள் படும் இன்னலுக்கு மௌன சாட்சியாகவே பெரும்பாலும் இருக்கிறோம். அவ்வளவு கொடுமைகள் நிறைந்த நாஜிக்களின் அட்டகாசம்கூட ஏறக்குறைய 10 ஆண்டுகள்தான் நீடித்தது. ஆனால் ஈழத்தமிழர்களின் மீதான அடக்குமுறை 30 ஆண்டுகளுக்குப் பின்னரும் குறைவதற்குப் பதில் கூடிக்கொண்டே போகிறது.

ஹிட்லரைப் போல, மஹிந்தாவும் அவரது இனவெறிக் கூட்டத்தாரும் தமிழ் பிரச்சனைக்கான கடைசித் தீர்வை முன்னெடுத்திருக்கிறார்கள். என்ன விலை(அது தமிழர்களின் உயிரில் கணக்கிடப்படுகிறது) கொடுத்தாலும் அவர்களது சிங்கள மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவது தான் அது. கொலை செய்யப்பட்டவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இந்திய அரசாங்கத்தின் ஆதரவோடு. சமீபத்தில்தான் இந்தியா, மஹிந்தாவிற்கு 100 மில்லியன் டாலர் கொடுத்து அவரது முதுகில் தட்டிக் கொடுத்தது. எப்படியாவது தமிழ் பிரச்சனையை முடித்துவிடுங்கள் நாங்கள் வேறுதிசையில் பார்த்துக் கொள்கிறோம் என்பது போன்ற மனப்பான்மை...

தங்கமணி, தஞ்சாவூரான் சொல்வதைப்போல ஒவ்வொருமுறையும் கையாலாகாமையை மட்டுமே வருத்தத்துடன் வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. ஒரு தனிப்பட்ட குடிமகனாக என்னால் பெரிதாக மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும் என்ற கனவுகளெல்லாம் இல்லை. ஆனால் எதுவுமே சொல்லாமல்/செய்யாமல் இருந்தால், பிற்காலத்தில் வரலாற்றின் முன் நிறுத்தப்பட்டு நாம் கேள்வி கேட்கப்படுவோம். நஜிக்களின் கைக்கூலிகளாக இருந்து இலட்சக் கணக்கான பிரஞ்சு-யூதர்களின் படுகொலைக்கு துணை நின்ற பிரஞ்சு-போலீசாரை வரலாறு காறித் துப்புவது போல் நம்மையும் துப்பும்.

நான் முழு/பகுதி நேர அரசியல்வாதியல்ல, போராளியல்ல, ஆக்டிவிஸ்ட் அல்ல. நானுண்டு என் வேலையுண்டு என்றிருக்கும் ஒரு சாமான்யன். என்னால் செய்ய முடிந்ததெல்லாம்

1) என் ஓட்டுக்களை கேட்டு வரும் அரசியல்வாதிகளிடம் இதைச் சொல்வதுதான். "சுதந்திர தமிழ் ஈழத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? ஆட்சிக்கு வந்தால் அந்த கொள்கையை முன்னெடுத்துச் செல்வீர்களா? இந்திய அரசின் தற்போதைய நிலைப்பாடான 'சிங்கள ஆதரவு, ஒருங்கிணைந்த இலங்கைக்குள்ளான தீர்வு' என்ற ஜனநாயகமற்ற கொள்கையை மாற்றுவீர்களா? அப்படியெனில் உங்களுக்கு என் ஓட்டு"
2) என்னைப்போல ஈழத்தமிழின அழிப்பைக் கண்டு மனம் நொந்து இருப்பவர்களையும் மேற்கண்டதுபோல அரசியல் வாதிகளிடம் சொல்லச் சொல்வது.
3) ஈழத்தமிழ் பிரச்சனை பற்றிய தவறான புரிதல் கொண்ட சக இந்தியர்களிடம் அதைப் பற்றிய தெளிவான கருத்துகளை எடுத்துச் சொல்வது. அவர்களையும் மேற்கண்ட கொள்கை நிலைப்பாட்டை எடுக்கக் கோருவது.

இவ்வாறு ஒரு நல்ல "ஓட்டு வங்கியை" ஏற்படுத்தினால் மத்தியிலிருக்கும் ஆட்சியாளர்களுக்கு உறைக்கும் என்பது என் நம்பிக்கை. இந்தியா நினைத்தால் ஈழத்தமிழர்களின் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்கலாம்.

இதை யொட்டி நான் எழுதிய முந்தைய பதிவு.... சுதந்திர தமிழீழத்திற்கு ஒரு ஓட்டு

இதை யொட்டி நான் ஆர்குட்டில் ஏற்படுத்திய குழு... My Vote For Free Tamil Eelam

மேற் சொன்ன எனது கருத்துக்களை நீங்கள் ஆமோதித்தால் இந்த மக்கள் இயக்கத்திற்கு ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

பிகு: ஈழத்தமிழருக்கு ஆதரவு என்ற உடன் "புலிப்பயங்கரவாதிகள்" ஆதரவு என்று பலருக்கு அலர்ஜி வந்துவிடுகிறது. நான் எல்லா வன்முறைகளுக்கும் எதிரானவன். இங்கு நான் தருவது/கோருவது விடுதலைப் புலிகளுக்கான ஆதரவல்ல. ஈழத்தமிழர் எனும் ஒரு இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு.

பிகே: மிக அடிப்படையான ஒரு கேள்வி. ஈழத்தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உள்ளதா. இல்லையா?

பிதுகே அ: உள்ளது எனில் நீங்கள் நம்ம கட்சி. அந்த உரிமையை அவர்கள் எப்படி பெருவது. அதற்கு நாம்(எந்த கட்சியையும் சாராத தனி நபர்கள்) மேற்குறிப்பிட்ட வழியை அல்லாது எப்படி உதவலாம்?

பிதுகே ஆ: இல்லையெனில், ஏன்? நீங்கள் ஒரு ஈழத்தமிழராக கொழும்பிலோ, யாழ்பாணத்திலோ இருந்தாலும் இதே பதிலைத்தான் தருவீர்களா?

Labels: , , ,

Thursday, March 20, 2008

சுதந்திர தமிழீழத்திற்கு ஒரு ஓட்டு

ஒரு அண்டை நாட்டில் நடக்கும் சுய உரிமைப்போரில் ஒரு இனம் அழிந்தொழிவதை வேறு எந்த நாடும் இவ்வளவு காலம் சும்மா பார்த்துக் கொண்டிராது. பாலஸ்தீனத்திலும், டார்ஃபூரிலும் அப்பாவிகள் வஞ்சிக்கப் படுவதை கண்டிக்கும் இந்திய ஊடகங்கள் தமிழீழத்தில் நடைபெறும் இனப்படுகொலையை எளிதில் புறக்கணித்துவிடுகின்றன.

தமிழகத் தமிழர்களில் பலர் தமிழ் ஈழத்தில் நடக்கும் ஆயுதப் போராட்டத்தைப் பற்றி இரு வேறு நிலைப்பாடுகள் கொண்டிருந்தாலும் தமிழீழ விடுதலைக்கு ஆதரவானவர்களாகவே இருக்கிறார்கள் என்பது எனது கருத்து. தமிழீழ விடுதலையை நேரடியாக ஆதரிக்காவிட்டாலும் தமிழீழ விடுதலையை எதிர்ப்பவர்களாக இருப்பது மிக அரிது. ஆனாலும் இந்திய அரசாங்கம் "இலங்கையின் ஒருமைப்பாட்டையே" தமது முக்கிய நிலைப்பாடாக காலகாலமாக வலியுறுத்தி வருகிறது. இந்த நிலைப்பாட்டை யாரும், எப்போதும் மக்கள் முன் எடுத்துச்சென்று அவர்களின் ஆதரவை பெறவில்லை. இந்த ஜனநாயகமற்ற நிலைப்பாட்டால் ஈழப்பிரச்சனை பல ஆண்டுகளாக ஒரு தீர்விழியாக இருக்கிறது. இந்திய அதிகார வர்க்கத்தாலும் ஊடகங்களாலும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டதால் சாமான்யர்களின் சிந்தனையிலிருந்தும் ஈழப்பிரச்சனை ஓரங் கட்டப்பட்டிருக்கிறது.

அரசியல் கட்சிகள் தமக்கு ஆதாயம் இல்லாத விசயத்தில் அதிகம் தலையிடுவதில்லை, எனவே ஈழப் பிரச்சனை ஒரு ஊறுகாய் போலாகிவிட்டது. எப்பொழுதாவது கொஞ்சம் தொட்டுக்கொள்ள மட்டுமே அது பயன்படுகிறது. மக்களின் நிலைப்பாடு இவர்களின் செவிகளில் விழ வேண்டுமெனில் இன்றைய நிலையில் மக்கள் அதை மிக ஆணித்தரமாகவும் மிகச் சத்தமாகவும் இவர்களுக்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டும். அதாவது நமது வாக்குகள்.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களிலிருந்து ஓராண்டிற்குள் நடைபெறலாம். நாம் இத்தேர்தலில் சுதந்திர தமிழீழ தேசத்தை ஆதரிக்கும், அதற்கான நடவடிக்கைகளை முன்மொழியும் கூட்டணிக்கே ஆதரவு தருவதாக உறுதிமொழி எடுக்கவேண்டும். ஆர்வமுள்ளவர்களை ஒன்று சேர்த்து இதற்காக ஒரு பிரச்சாரக்குழுவை அமைக்க வேண்டும். மக்களிடம் சுதந்திர தமிழீழத்துக்கான காரணங்களை விளக்கவும், சுதந்திர தமிழீழம் பற்றிய தவறான புரிதல்களை(இந்திய இறையாண்மைக்கு குந்தகம் போன்ற) குறைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். சுதந்திர தமிழீழ தேசத்தை ஆதரிக்கும் கூட்டணிக்கு வாக்களிக்க மக்களிடம் பிரச்சாரம் செய்யவேண்டும்.

இது தொடர்பாக உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Labels: