ஜேகேவின் சில குறிப்புகள்

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Monday, July 28, 2008

உடைந்த பாலம், அடையாறு, சென்னை : விளிம்பு நிலை குறிப்புகள்

வழக்கத்திற்கு முற்றிலும் மாறாக ஞாயிறு அதிகாலை எழுந்து சூரிய உதயம் பார்ப்பதற்காக பெசண்ட் நகர் கடற்கரையின் வடக்கேயுள்ள உடைந்த பாலத்திற்கு சென்றோம். வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்ததால் சூரியன் கடைசிவரை வெளியே வரவில்லை. இருப்பினும் கடற்கரையில் காலை அருமையாகவே இருந்தது.

  • பெசண்ட் நகர் ஆல்காட் குப்பம் பகுதியையும், பட்டினப் பாக்கத்தையும் இணைக்குமாறு அடையாற்றின் முகத்துவாரத்தில் ஒரு பாலம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருந்தது. குறுகிய பாலம். இருவர் நடந்து அல்லது சைக்கிளில் செல்லும் அளவிற்கே அகலம். சில ஆண்டுகளுக்கு முன்னர் அது புயலின்பொழுது கடல் அலைகளின் சீற்றத்தால் பகுதி இடிந்து விழுந்து விட்டது. மீதமுள்ள பகுதி அடையாறின் தென் கரையிலிருந்து ஆற்றுக்குள் சென்று பாதியில் நின்று விடுகிறது. அங்கிருந்து கடலும், அடையாறின் முகத்துவாரத்தின் மருங்குகளில் காணப்படும் பசுமையும் அருமை.


  • ஆல்காட் குப்பத்தை தாண்டி ஒரு கிலோ மீட்டர் செல்ல வேண்டியிருப்பதாலும் இந்த இடத்தைப்பற்றி பலர் அறிந்திராததாலும் இங்கு நிறைய பேர் வருவதில்லை ஆனால் இப்பொழுது இவ்விடத்திலும் சுமாரான கூட்டம் காணப்படுகிறது.



  • கொஞ்சம் தனிமையான பசுமையான இடம். ஆனாலும் அடையாற்று நீர் சென்னையின் சாக்கடை சூப்பாக கருத்திருந்தது. நீர் விளிம்பகள் முழுவதும் கண்ணை உருத்தும் குப்பை.




  • குப்பத்தை தாண்டி, தியோசாபிகல் சொசைட்டி வரும். மிகப் பரந்த இடத்தை வளைத்து போட்டிருக்கிறார்கள். அங்கிருந்து சில கனவான்களும் சீமாட்டிகலும் கடற்கரையில் நடை பயில வந்திருந்தார்கள்.


  • தியோசாபிகல் சொசைட்டியை ஒட்டிய கடற்கரையில் ஒரு ஏழ்மையான முதியவர் குப்பைகளை பொருக்கிக் கொண்டிருந்தார். அவருடன் பேச்சுக் கொடுத்த பொழுது "சாமி கும்பிட்ற இடம். அதனால் குப்பைய பொருக்கிறேன்" என்றார். மேற்படி கனவான்கள் தியானம் செய்வதைத்தான் அவ்வாறு குறிப்பிடுகிறார் என நினைத்துக் கொண்டேன்.


  • சென்னை படகு குழாமைச் சேர்ந்தவர்கள் அடையாறில் துடுப்பு போட்டுக்கொண்டு இந்த உடைந்த பாலம் இருக்கும் இடம் வரை வந்து பயிற்சி எடுக்கிறார்கள்.

  • குப்பத்தை தாண்டிச் செல்லும் போது தர்மசங்கடமான நிலை. காலை நேரம் என்பதால் ஆண்கள் கடற்கரையிலும், பெண்கள் தியோசாபிகல் சொசைட்டியின் சுற்றுச் சுவருக்கருகில் மண்டியிருக்கும் புதர்களிடத்தும் காலைக்கடன் கழிக்கிறார்கள். எனனைப்போன்ற பொழுது போக்கிற்காகவும் இயற்கையை ரசிக்கவும் செல்பவர்களுக்கு "என்னடா இது காலைக்கடன் கழிக்க வேறிடம் இல்லையா. இப்படி கூச்சமில்லாமல் திறந்து வெளியில் போய் கடுப்பேற்றுகிறார்களே" எனத் தோன்றும். அந்த குப்பத்தினருக்கோ "பொறம்போக்குப் பசங்க, பணத்திமிரு, காலங்காத்தால வண்டிய ஓட்டிகிட்டு கடலப்பாக்க வந்துர்றாய்ங்க. பொண்டு பிள்ளைகள் நிம்மதியாக வெளிய தெருவக் கூட போக முடியவில்லை" என்று திட்டிக்கொண்டிருப்பார்கள். மிக மிக அடிப்படைத் தேவைகளான "மானமோடு கடன் கழித்தல்" போன்ற வசதிகள் எப்போது எல்லோருக்கும் கிடைக்கும்?


Labels: , ,

Monday, November 19, 2007

வேடந்தாங்கல், கரிக்கிலி - பறவைகளுடன் ஒரு நாள்

வேடந்தாங்கலில் பறவைகள் சீசன் ஆரம்பித்துவிட்டதும் கடந்தவாரம் நண்பருடன் அங்கு சென்றிருந்தேன். சென்னையிலிருந்து 70கிமீ தூரத்தில் இருக்கும் வேடந்தாங்கலுக்கு மோட்டார் சைக்கிளிலேயே சென்றோம். நவம்பர் மாதத்தின் தன்மையான தட்பவெப்பநிலையின் ஒத்துழைப்பால் போகும்போது பயனம் ஓரளவிற்கு இனிமையாகவே இருந்தது. சரணாலய ஏரியில் பறவைகள் நிறைந்து காணப்பட்டன. பறவைகள் பெரும்பாலும் ஏரிக்கரையிலிருந்து தொலைவிலேயே இருக்கின்றன. எங்களிடம் தொலைநோக்கியோ ஸூம் அதிகம் கொண்ட கேமராவோ இல்லை. அதனால் பறவைகளை கூர்ந்து அவதானிக்கவோ படம் எடுக்கவோ முடியவில்லை. அடுத்த முறை நல்ல தொலைநோக்கியுடன் செல்லவேண்டும்.






ஏரிக்கரையின் நடைபாதையின் இருமருங்கிலும் வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகளைப்பற்றிய குறிப்புகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதிவைத்திருக்கிறார்கள். மண்வெட்டி வாயன்(Spoon Bill), பாம்பு தாரா(Darter), சாம்பல் நிற கூழைகடா(Grey Pelican), நத்தை குத்தி நாரை(Openbill Stork) போன்ற பறவைகளின் தமிழ்பெயர்கள் மிக இரசிக்கத்ததாக இருந்தன. சரணாலயத்திற்கு வெளியேயும் பறவைகள் பற்றிய பல தகவல்களை ஒரு அறையினில் எழுதி வைத்திருக்கிறார்கள்.


வேடந்தாங்கலைச் சுற்றிவிட்டு திரும்பும் வழியில் கரிக்கிலி என்ற மற்றொரு பறவைகள் சரணாலயத்திற்கான வழி அறிவிப்பு பலகைகளை கண்டோம்(வேடந்தாங்கலில் இருந்து உத்திரமேரூர் சொல்லும் வழியில் உள்ளது கரிக்கிலி). கரிக்கிலி சரணாலயத்தைப்பற்றி கேள்விப்படுவது அதுதான் முதல் முறை. எனவே ஒரு ஆச்சரியட்துடன் அங்கேயும் சென்றோம். எதிர்பார்த்தது போல அங்கு பார்வையாளர்கள்(வனத்துறை அதிகாரிகள் கூட) யாருமே இல்லை. ஆனால் பறவைகள் ஓரளவிற்கு இருந்தன. வேடந்தாங்கலை விட மிக அமைதியான இடம்.


கரிக்கிலியிலிருந்து உத்திரமேரூர் சென்றுவிட்டு சென்னை திரும்பினோம். போகும் போது ஒத்தாசையாக இருந்த வானம், திரும்பும் போது மழையாய் பொழிந்து தொப்பலாக நனைத்துவிட்டது

Labels: ,

உத்திரமேரூர் சதிர்வேதி மங்கலத்து சோழர் கல்வெட்டுகள்

தமிழகத்தின் மக்களாட்சி பாரம்பரியத்திற்கு உதாரணமாக ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உத்திரமேரூர் கல்வெட்டுகளில் காணப்படும் குடவோலை முறை வாரியத்தேர்தல் பற்றிய குறிப்புகளை பலர் மேற்கோள் காட்டுவார்கள். சிறு வயதில் பள்ளிகளில் வரலாறாகவும், பிற்காலங்களிலும் இதைப்படிக்கும் பொழுதெல்லாம் புலகாங்கிதம் அடைந்தது உண்டு.

சமீபத்தில் சோழர் வரலாற்றை ஆழமாக படித்த போதுதான் உத்திரமேரூர் கல்வெட்டுகளின் முழுமையான பரிமாணம் புரிந்தது. உத்திரமேரூர் சதுர்வேதி மங்கலம் சோழர்களால் பார்ப்பனர்களுக்கு தானமாக கொடுக்கப்பட்ட 12 சேரிகளை உள்ளடக்கிய ஊர்களாகும். அந்த சதுர்வேதி மங்கலத்தின் தோட்டம், ஏரி போன்றவற்றிற்கான வாரியங்களை நாட்டாமை செய்பவருக்கான தேர்தல் முறையையே இந்த கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

இந்த தேர்தல்களில் எந்த ஜனநாயகக் கூறுகளும் இல்லை. சாதியக்கூறுகள் மட்டுமே உள்ளன. 12 சேரிகளை பார்ப்பனர்களுக்கு தானமாக கொடுத்ததிலிருந்து, குடவோலை தேர்தல் முறை வரை ஒவ்வொன்றும், சோழர்கள் காலத்தில் மனு நீதி எவ்வாறு கட்டி காக்கப்பட்டது என்பதற்கு உதாரணங்களாகத்தான் இருக்கின்றன. இதை நினைத்து பெருமைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அவமானப்படுவதே பொருத்தமாக இருக்கும். இரண்டு வாரங்களுக்கு முன் உத்திரமேரூர் சென்றபொழுதும் அவ்வாறே இருந்தது.

வைகுந்த பெருமாள் கோயில்


புகழ்பெற்ற கல்வெட்டுகள் நிரம்பிய பக்கச்சுவர்கள்

பக்கச்சுவற்றில் ஒரு பகுதி - ஒரு கல்வெட்டு

சோழர்கால உள்ளாட்சி தேர்தல் முறையை விளக்கும் கல்வெட்டின் பிரதி - கல் 1




கல் 2

உள்ளாட்சி தேர்தலில் பங்குபெறுபவர்களுக்கான தகுதிகளை விளக்கும் இக்கல்வெட்டை கவனியுங்கள்.

1) கால்வேலி நிலமாவது தேவை
2) தன் மனையில் வீடு இருத்தல் வேண்டும்
3) வயது முப்பத்தைந்துக்கு மேல் எழுபதுக்குள் இருக்க வேண்டும்
4) வேதபாஷ்யங்கள், மந்திர ப்ராம்மணம் இவற்றில் எடுத்துரைக்கும் புலமை வேண்டும்
5) ஆசாரம் வேண்டும்
6) முந்தின மூன்றாண்டுகளுக்கு இப்பதவி வகிக்காதவனாக இருக்கவேண்டும்

ஆறில் நான்கு சாதியைச் சார்ந்த தகுதிகள்(தானமாக கொடுக்கப்பட்ட சதுர்வேதி மங்கலத்து நிலங்கள் எல்லாம் பார்ப்பனர்களுக்கே சொந்தம்). இதிலேயே பல்லிளித்துவிட்டது உள்ளாட்சியில் மக்களாட்சியின் இலட்சனம்.

கல் 3

பக்கச்சுவர்றில் ஏராளமான கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மேற்காணப்பட்டவை ஒரு சிறு பகுதிதான். மீதமுள்ள கல்வெட்டுகளில் காணப்படும் செய்திகளைத்தாங்கிய புத்தகம் ஏதாவது இருக்கிறதா எனத்தெரியவில்லை

Labels: , , ,